சுண்டைக்காய்

சுண்டை செடி, அகன்ற சிறகாக பிளவுபட்ட இலைகளையும் வெண்ணிறப் பூங்கொத்துகளையும் உருண்டை வடிவக் காய்களையும் உடைய முள்ளுள்ள சிறு செடி. தமிழகத்தில் பலரும் சாதாரணமாக வீட்டு தோட்டங்களில் இதனை வளர்ப்பதுண்டு. காடுகளிலும் பொதுவாக காணப்படும் செடி. காய்களே மருத்துவப் பயனுடையது.

சுண்டக்காயை பெரும்பாலும் மோரில் உப்பு போட்டு ஊற வைத்து பயன்படுத்தும் பழக்கம் நமது தமிழகத்தில் அதிகம் உள்ளது. அதிலும் பச்சையாக பயன்படுத்துவதால் மேலும் பலம் அதிகம். சுண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் எலும்பு வளர்ச்சி, உடல் வளர்ச்சி, கண் பாதுகாப்பு, பற்களின் எனாமல் பாதுகாப்பு, நரம்பு வலிமை பெற என பல விதங்களில் நமக்கு பயன்படுகிறது.

இதில் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ஏ சத்து மற்றும் பி சி வைட்டமின் உயிர் சத்துக்களும் அடங்கியுள்ளது. இதனை பருப்புடன் குழந்தைகளுக்குக் கொடுத்தால் உடல் வளர்ச்சிக்கு மிகவும் உதவும். பொதுவாக அதிக மருத்துவ குணங்கள் நிறைந்தது இந்த சுண்டைக்காய். கசப்பு சுவையை கொண்டது.

கசப்புத்தன்மை உள்ளதால் அதனை வற்றல் செய்து உண்கின்றனர். அதனால் கசப்பு தன்மை சற்று குறைந்து விடுகிறது. வற்றலாக செய்து சாப்பிட்டாலும் உடலுக்கு நன்மையளிக்கும். குழந்தைகளுக்கு கொடுப்பதினால் உடலை சுற்றி வளரும் கீரிப் பூச்சிகள் அதனால் உண்டாகும் முட்டைகள் ஆகியவற்றை உடனடியாக வெளியேற்றி அதனால் ஏற்படும் சோகை, காமாலை, மூலம், பவுத்திரம் போன்ற நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.

சுண்டக்காயை எண்ணெயில் வறுத்து அதனை பொடி செய்து அத்துடன் சுக்கு, மிளகு, பெருங்காயம், கொத்தமல்லி, உப்பு இவைகளை பொடி செய்து சுண்டைக்காய் வற்றல் பொடியுடன் கலந்து சூடான சோற்றில் கலந்து நல்லெண்ணெய் விட்டு சாப்பிட வேண்டும். இதனால் பித்தம், மயக்கம், கிறுகிறுப்பு, பித்த வாந்தி, தலைவலி, வயிற்று உப்புசம், அஜீரணம் போன்ற நோய்கள் சீக்கிரம் குணமாகும். தோல் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் இதனை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சொரசொரப்பான தோல் பளபளப்பாகும்.

பல் பொடி

பல் சொத்தை, பல் வலி, ஈறு வலி, கண்ணில் நீர் வடிதல் போன்ற வியாதிகளுக்கு இதனை கீழ்கண்டவாறு பயன்படுத்த வேண்டும். சுண்டைக்காயைக் காயவைத்து இடித்து சலித்து கொஞ்சம் உப்பு கலந்து பல் பொடி போல தினமும் உபயோகிக்க வேண்டும். இதனால் மேலே கண்ட நோய்கள் குணமாகும்.

ஆஸ்துமா, காச நோய்

பால் சுண்டைக்காயை சமைத்து உண்பதால் கபக்கட்டு, ஈளை, காசம், இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, திமிர்ப்பூச்சி முதலியன தீரும். உப்பு கலந்த புளித்த மோரில் 2-3 முறை ஊறவைத்து காயவைத்து எண்ணெயில் வறுத்து இரவு உணவில் பயன் படுத்தி வர மார்ச்சளி, ஆஸ்துமா, காச நோய் தீரும். வயிற்றுப்போக்கு நின்று விடும்.

பேதி, மூலம், பசியின்மைக்கு

சுண்டை வற்றல், நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம், ஓமம், மாதுளை ஓடு, மாம்பருப்பு, கறிவேம்பு, சீரகம் வறுத்து இடித்து சூரணம் செய்து காலை, மாலை இரண்டு சிட்டிகை அளவு மோரில் கலந்து சாப்பிட்டு வர பேதி, மூலம், பசியின்மை, மார்புச் சளி தீரும்.

தொற்று நோய்க் கிருமி

ரத்தத்தில் கலக்கும் தொற்று நோய்க் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் சுண்டைக்காய்க்கு உண்டு. உடல்நலத்திற்கு மிகவும் பாதுகாப்பு அளிப்பதனால் எல்லோரும் இதனை பயன்படுத்தி பலன் பெற வேண்டும்.

(1 vote)