சிறுபீளை / சிறுபூளை – நம் மூலிகை அறிவோம்

Aerva Lanata; Mountain Knot Grass; Common Wayside Weed; பொங்கல் பூ; சிறுகண்பீளை; சிறுபீளை

நகரங்களில் இருக்கும் பலருக்கு வேண்டுமானால் இந்த மூலிகையை அடையாளம் தெரியாது எனலாம். ஆனால் கிராமங்களில் இருக்கும் சிறு குழந்தைக்கும் தெரிந்த மூலிகை இந்த பொங்கல் பூ என்ற சிறுபீளை. கிராமங்களில் இதற்கு பல பெயர்கள் உண்டு. ஆனால் பொங்கல் பூ என்றால் அனைவருக்கும் தெரியும். காரணம் பொங்கல் பண்டிகைக்கு முன் போகிக்கு காப்பு கட்டும் பழக்கம் இன்றும் கிராமங்களில் நடைமுறையில் உள்ளது. இதற்கு மிகமுக்கியமான சில மூலிகைகளில் இதுவும் உண்டு.

சாதாரணமாக சாலை ஓரங்கள், புதர்கள், செடிகள் மண்டி இருக்கும் இடங்கள், வயல் வரப்புகள் என எங்கும் பொங்கலுக்கு முன் மார்கழி மாதத்தில் வளர்ந்து பூத்திருக்கும் இந்த சிறுபீளை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பொங்கலுக்கு முன் இந்த சிறுபீளையை எடுத்து வந்து வயல் வரப்பின் ஓரங்களிலும்,வீட்டு வாசல் மற்றும் நான்கு பக்கத்திலும் வைத்து வழிபடுவதுண்டு. அதனால் குழந்தைகளுக்கும் இந்த மூலிகை தெரியும். ஆர்வத்துடன் குழந்தைகள் இந்த பொங்கல் பூக்களை தேடி பறித்துவருவார்கள். இன்றும் நடைமுறையில் இருக்கும் இந்த பழக்கத்திற்கு சில நகரங்களில் சில ஆண்டுகளாக இந்த சிறுபீளையை பொங்கலுக்கு முன் சந்தைகளில் விற்பதையும் பார்க்க முடிகிறது.

சிறுகண்பீளை, சிறு பூளை, கற்பேதி, பூலாப்பூ, பூளைப்பூ, கண்ணுப் பீளை, கண்ணுபுள்ள, பொங்கல் பூ, பீளைசாறி, தேங்காய்ப்பூக் கீரை, பாஷாண பேதி என பல பெயர்கள் இந்த மூலிகைக்கு உண்டு. ஓவ்வொரு மாவட்டங்களில் ஓவ்வொரு பெயரைக்கொண்டு இதனை அழைப்பதுண்டு. இது ஒரு செடி வகைத் தாவரம். இதன் இலைகள் மாற்றடுக்கில் அமைந்திருக்கும். இதன் இலைகள் மிக சிறியவை. இதன் இலைக் கோணத்தில் வெள்ளைநிறப் மென்மையான மலர்கதிர்களை கொண்டது. இந்த செடியைப் பார்த்தாலே பூக்கள் மட்டும் தான் தெரியும் அந்தளவு செடியின் சிறு இலைகளை பூக்கள் மறைத்திருக்கும்.

பொங்கல் பூ என்றழைக்கப்படும் சிறுகண்பீளை செடியின் முழுவதுமே (சமூலமே) மருத்துவப் பயன்கொண்டவை. சிறுநீரக கற்களுக்கு மிக சிறந்த மருந்து என்று இதனைச் சொல்லலாம். அதனால் இதற்கு கற்கரைச்சி என்ற பெயருமுண்டு. சிறுநீர்ப்பெருக்கியாகவும் செயல்படுகிறது. மேலும் சிறுநீர் அடைப்பு, கல்லடைப்பு, பெரும்பாடு, நீர் எரிச்சல் போன்ற தொந்தரவுகளுக்கும் சிறந்தது. இதனை சுண்டக்காய்ச்சி நேரடியாகவோ அல்லது ரசம் செய்தும் உண்ணலாம்.

கல்லடைப்பு, பெரும்பாடு நீங்க

நான்கு ஸ்பூன் சிறுபீளை இலையின் சாறினை எடுத்து அதனுடன் ஒரு கப் அளவு நீர் சேர்த்து அன்றாடம் எடுத்துவர கல்லடைப்பு, நீர் எரிச்சல், பெரும்பாடு, சிறுநீர் அடைப்பு ஆகியவை நீங்கும்.

சிறுநீரகக் கற்கள் கரைய

சிறு பீளை சமூலத்தை எடுத்து வந்து அதனை பத்து மடங்கு தண்ணீருடன் சேர்த்து காய்ச்சி கால் பங்காக சுண்டக்காய்ச்சி அன்றாடம் மூன்று வேளைகள் எடுத்து வர சிறுநீரகக் கற்கள் கரைந்து வெளியேறும்.

கல்லடைப்பு, நீரடைப்பு

இந்த சிறுபீளையின் வேர்ப்பட்டையை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து அதனுடன் சமபங்கு பனைவெல்லம் சேர்த்து மைபோல் அரைத்து ஒரு கப் பாலுடன் கலந்து காலை, மாலை குடித்துவர கல்லடைப்பு, நீரடைப்பு, பெரும்பாடு மறையும்.

இது மட்டுமில்லாமல் கல்லீரல் பாதுகாப்பு, நீரிழவு, தொற்றுநோய், ஆஸ்துமா, வீக்கங்களை கரைக்கவும் பயன்படுகிறது.

(6 votes)