கோரைக்கிழங்கு

கிராமப்புறங்களில் வயல் வெளிகளில் மிகவும் எளிதாகக் கிடைக்கக்கூடிய மூலிகை இந்த கோரைக்கிழங்கு. உலர்ந்த கோரைக் கிழங்கை நாட்டு மருந்துக் கடைகளில் முத்துக் காசு என்று குறிப்பிடுவார்கள்.

உலர்ந்த கோரைக் கிழங்க மருத்துவப் பொருளாக மட்டுமின்றி ஊதுபத்தி போன்ற நறுமணப் பொருட்களை செய்யவும் பயன்படுகிறது. கோரைக்கிழங்கு உடல் கட்டினைக் காக்க உதவும் டானிக் போன்றது. கிருமிகளை அழிக்கும் ஆற்றல் இதற்கு அதிகம் உண்டு. கோரைக்கிழங்கினால் பொதுவாக குளிர்க்காய்ச்சல், வாதக் காய்ச்சல் நீங்கும். அதிதாகம். பித்த வாந்தி போன்றவற்றிற்கும் இது நல்ல மருந்தாகும்.

குன்ம நோய்

கடுமையான குன்ம நோயை அகற்றி குணமாக்க கீழ்கண்ட முறைப்படி இதனை மருந்தாக தயாரிக்க வேண்டும். இரண்டு பச்சை கோரைக் கிழங்கை எடுத்து நசுக்கி 100 மில்லி நீரில் போட்டு பாதி அளவு சுண்டக் காய்ச்சிக் கொள்ள வேண்டும். இந்த குடிநீரை வேளைக்கு ஒன்றரை அவுன்ஸ் வீதம் மூன்று வேளை என்ற கணக்கில் 20 நாட்கள் சாப்பிட்டு வர கடுமையான குன்ம வயிற்றுவலி நிச்சயமாக குணமாகும். மேலும் இந்த குடிநீரை சாப்பிடுவதால் அஜீரணபேதி, சீதபேதி, வாந்திபேதி ஆகியவை குணமாகும்.

குடல் பூச்சி வெளியேற

குடலில் பூச்சித்தொல்லை இருந்தால் கீழ்கண்டவாறு மருந்து தயாரித்துக் கொள்ள வேண்டும். ஒரு கோரைக்கிழங்கை எடுத்து நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். ஒரு துண்டு இஞ்சியை எடுத்து தோல் நீக்கி கொள்ள வேண்டும். இரண்டையும் சேர்த்து நன்கு இடித்து பின் சிறிது தேன் விட்டு அரைத்து கொள்ள வேண்டும். காலையில் இதனை சுண்டைக்காய் அளவு வெறும் வயிற்றில் சாப்பிட்டால் குடல் கிருமிகள் அனைத்தும் முற்றிலுமாக அழிந்துவிடும். இந்த மருந்து சாப்பிடும் அன்று சுடுசோற்றில் எலுமிச்சை பழச்சாறும் சிறிது நெய்யும் விட்டு பிசைந்து சாப்பிட வேண்டும். இதே முறையில் சாப்பிட கடுமையான சீத பேதியும் குணமாகும்.

தாய்ப்பால் சுரக்க

தாய்ப்பால் குறைந்துவிட்டது பெற்ற தாய்மார்கள் கோரைக்கிழங்கு பச்சையாக சந்தனக்கல்லில் இழைத்து மார்பகத்தில் பற்றாக இடப்பால் மிகவும் நன்றாக சுரக்கும்.