உயிர்க்காற்று (பிராணன்)

இந்த காற்று இதயத்திலிருந்து மூக்கு வரை அலைந்து நிற்கும். மேல் நோக்கிச் செல்லும் காற்று இது. மூக்கின் நுனியிலிருக்கும் வாயுவும் இது. தலையை முதலிடமாக பெற்று மார்பு, கழுத்து, மனம், புத்தி, ஐம்பொறியில் தன்வயப்படுத்தி, இருமல், தும்மல், ஏப்பம் விடல், காறி உமிழ்தல், முச்சு விடுதல், மூச்சு வாங்குதல், உண்ணும் உணவை உட்செலுத்துதல், உடலில் உயிர் தங்குதல், முதுமை வரிசைப்படி வருதல் ஆகிய தொழில்களை செய்கிறது. தாதுகளுக்கு சக்தி அளிப்பதும் பிராணன் தான்.

இந்த பிராணனே ஒருவரது பிறப்பு முதல் இறுதி மூச்சு வரை வாழ வைக்கிறது. கருவிலிருக்கும் பொழுது தாயின் பிராணனைப் பெற்று வளரும் சிசு பிறந்த பின் தனது பிராணனைக் கொண்டு செயல்படுகிறது. அதன் பின்னே பத்து வாயுக்களும் (தசவாயுக்கள்) தத்தம் பணியினைத் துவங்குகிறது, இந்த பிராணனின் உதவி அல்லது துணையுடனே மற்ற வாயுக்களும் செயல்படுகிறது.

பிராணாயாமம் என்ற மூச்சுப் பயிற்சியில் உள்ள ‘பிராணன்’ என்பது இந்த உடலின் உயிர்க்காற்று தான். அதனிளிருக்கும் ‘அயாமம்’ என்பது கட்டுப்படுத்துதல். நமது மூச்சை இவ்வாறு பயிற்சி மூலம் கட்டுப்படுத்த உடலின் உயிர்சத்துக்கள் அதிகரிப்பதுடன் உடல் ஆரோக்கியம் மேம்படும். பிராணாயாமத்தில் பல வகைகள் உள்ளது. ஒவ்வொரு தொந்தரவுக்கும் ஓவ்வொரு வகையான பயிற்சியை செய்ய சிறந்த பலனை விரைவாகப் பெறலாம்.

பிராணாயாமம் செய்வதால் மனம், உடல் புத்துணர்வு பெரும்,உடல் சோர்வு, மன அழுத்தம் நீங்கும். இந்த ஆழ்ந்த சுவசப்பயிற்சியால் நமது வாழ்நாள் அதிகரிக்கும். பலர் உடலில் இருக்கும் தொந்தரவுகளால் வாயால் சுவாசிப்பார்கள். இந்த தொந்தரவையும் சீர்படுத்தி நிதானமான சுவாசத்தை பிராணாயாமம் பயிற்சி நமக்கு அளிக்கும்.

(1 vote)