வல்லாரை கீரை – நம் கீரை அறிவோம்

மிகவும் சக்தி வாய்ந்த கீரைகளில் ஒன்றான கீரை தான் வல்லாரை கீரை. சுண்ணாம்புச் சத்து, மணிச்சத்து, இரும்புச் சத்து என பல ஊட்டச்சத்துகளை கொண்டிருக்கக் கூடிய ஒரு அற்புதமான கீரை. அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான் நினைவாற்றலை அதிகரிக்க கூடிய ஒரு சிறந்த கீரை இந்த கீரை. குழந்தைகளுக்கு ஏற்ற ஒரு கீரை.

ஞாபக சக்தியை பெருக்கிக் கொள்ள வல்லாரைக் கீரை மிகவும் உபயோகமாக இருக்கக் கூடியது. அது மட்டுமில்லாமல் தொண்டைக்கட்டு, தேமல், படை, வாய்வு, புகைச்சல், கண் எரிச்சல், வெட்டை சூடு, குஷ்டம், மாலைக்கண், நீர்சுருக்கு, சூதகக்கட்டு, கண்டமாலை, புகைச்சல், யானைக்கால், இருதய நோய், சுரம், குரல் கம்மல் போன்ற பல வியாதிகளுக்கும் தோல் சம்பந்தமான பல வியாதிகளுக்கும் சிறந்த ஒரு மருந்தாகவும், அவற்றை போக்கக் கூடிய ஒரு அற்புதமான தன்மையையும் கொண்ட ஒரு கீரை இது. இரத்தத்தைப் பெருக்கக் கூடியதாகவும் உள்ள ஒரு அற்புதமான கீரை இந்த வல்லாரைக் கீரை.

இரத்தத்தை சுத்தமாகும் வல்லாரை மருந்து

இரத்தத்தை சுத்தமாகும் வல்லாரை மருந்து தயாரிக்க முதலில் வல்லாரை கீரையை நன்கு சுத்தம் செய்து அம்மியில் இடித்து சாறெடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வில்வ பட்டையை அம்மியில் வைத்து பசும்பாலில் கொஞ்சம் சேர்த்து அதனுடன் நன்கு மைய அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதனோடு புளியின் சாறு நெய் கலந்து அடுப்பில் வைத்து நன்றாக காய்ச்சுத்தல் வேண்டும். பிறகு கற்கண்டை பொடி செய்து போட்டு அதனோடு குங்குமப்பூ கலந்து பாகுபதம் வந்த பிறகு இலுப்பச் சட்டியை இறக்கி வைத்து பின்னர் குளிர்ந்த பின்பு பாட்டிலில் சேமித்து வைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் இந்த மருந்தானது ரத்தத்தை சுத்தமாக்க செய்ய வல்லதாகும்.

மாலைக் கண் வியாதி நீங்க

இந்த கீரையை தண்ணீரில் அலசி சுத்தம் செய்து அம்மியில் வைத்து நைசாக அரைத்து அதை ஒரு கொட்டைப்பாக்கு அளவு எடுத்து பசும் பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மாலைக் கண் வியாதி நீங்கும்.

நினைவாற்றலை அதிகரிக்க

இந்த கீரையை முதலில் நன்கு சுத்தம் செய்து உரலில் போட்டு இடித்து வேண்டிய அளவிற்கு சாறு எடுத்துக் கொண்டு அதற்கேற்ப அரிசித் திப்பிலியை எடுத்துக்கொண்டு சாறோடு நன்கு ஊறவைத்து அதனை வெயிலில் உலர்த்தி என ஏழு முறை இவ்வாறு செய்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

தொழுநோயை அகற்ற

தொழுநோயை அகற்றக்கூடிய சஞ்சீவியாக இந்த கீரை போற்றப்படுகிறது. இந்த கீரையை தொழுநோயின் ஆரம்ப காலத்திலேயே பயன்படுத்தினால் நோய் நீக்கம் பெற்று பயனடையலாம் என்று சித்த மருத்துவம் கூறுகிறது.

மனவளர்ச்சிக்கு

மனவளர்ச்சி குன்றியோர் இந்த கீரையை பருப்பு மற்றும் பயறு வகைகளுடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வருதல் வேண்டும். இதனை வாரத்திற்கு ஒரு முறை உணவில் சேர்த்துக்கொள்ளுதல் நல்லது. இது மூளையின் ஆற்றலைப் தூண்டுகிறது.

மலச்சிக்கல் தீர

வல்லாரை கீரையை சமைத்து சாப்பிட்டு வர மலச்சிக்கல் பிரச்சனை நீங்கிவிடும். இந்த கீரையை இரவு வேளைகளில் சாப்பிடுதல் கூடாது.

நீரிழிவு கட்டுப்பட

பொடுதலை கீரையுடன் வல்லாரை கீரையையும் சேர்த்து உலர்த்தி பொடியாக்கி அந்த தூளுடன் தேனைக் கலந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயானது கட்டுக்குள் அடங்கி விடும்.

பச்சையாக வல்லாரையை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

இந்தக் கீரையுடன் மிளகு சேர்த்து பச்சையாக மென்று சாப்பிட்டால் வயிற்றில் உள்ள வெட்டைச்சூடு, மர்ம நோய்கள் ஆரம்ப காலத்திலேயே நீங்கிவிடும். தேவையான அளவு வல்லாரை இலைகளை கொண்டு ஆய்ந்து அம்மியில் நீர் விட்டு நன்கு அரைத்து காலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் வாய்வு வீக்கம், விரைவீக்கம் போன்ற நோய்கள் நீங்கும்.

இளமையை அதிகரிக்க

வல்லாரை இலையை பறித்து சுத்தம் செய்து நீரில் கழுவி உரலில் போட்டு அதனோடு டைமண்ட் கற்கண்டு குங்குமப்பூ சேர்த்து பசும்பாலை ஊற்றி நன்கு அரைத்து நெல்லிக்காய் அளவிற்கு தொன்னூற்று ஆறு (96) நாட்கள் சாப்பிட்டு வந்தால் முகப்பொலிவு அதிகரிக்கும், முகம் ஒளி பெறும். நாம் இளமையாக இருக்க கூடிய வாய்ப்பும் உண்டாகும்.

மாத்திரை / வல்லாரை பொடி

வல்லாரை மாத்திரைகளை அல்லது வல்லாரை பொடிகளையும் நாம் உண்டு வந்தாலேகூட போதும் மேற்கூறிய அனைத்து வல்லமையும் நமக்கு வந்துவிடும்.

(1 vote)