வள்ளக்கீரை / வள்ளல் கீரை / வெள்ளக்கீரை – நம் கீரை அறிவோம்

Water Spinach; Ipomoea aquatica; வள்ளல் கீரை; வெள்ளக்கீரை

தமிழகத்தில் சாதாரணமாக எல்லா இடங்களிலும் பார்க்கக்கூடிய ஒரு தாவரம் தான் இந்த வள்ளக்கீரை என்று சொல்லக்கூடிய வள்ளைக்கீரை. தமிழகத்தில் பரவலாக வளர்ந்திருக்கும் இந்த வள்ளைக்கீரை ஈரமான இடங்களிலும் குளம், குட்டை, ஏரி போன்ற இடங்களில் அதிகமாக பார்க்க முடியும்.

பொதுவாக ஈரம் இருக்கக் கூடிய இடங்களில் இது அதிகளவில் விளையக்கூடியது. தமிழகத்தில் இது ஒரு கீரை வகை என்று பலருக்கும் தெரியாது. ஆனால் இதை எல்லாருமே பார்த்திருப்போம். தமிழகத்தில் இதனை குறைந்த அளவிலேயே பயன்படுத்தும் பழக்கமும் உள்ளது. ஆனால் பல நாடுகளில் இதை அதிக அளவில் பயன்படுத்துவது உண்டு.

புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின் சத்து, தாது சத்து என பலவிதமான சத்துக்களைக் கொண்டிருக்கக் கூடிய ஒரு அற்புதமான கீரை இது. மழைகாலங்களில் அதிகமாகவே இந்த கீரை படர்ந்து வளரக் கூடியதாகவும் இருக்கும். தண்டு பகுதியில் இருக்கக்கூடிய கணுக்களிலிருந்து இலை, பூ, வேர் என அனைத்து பாகங்களும் வளரும் தன்மைக் கொண்டது.

வள்ளைக்கீரை மழைக் காலம் ஓய்ந்த பின் கோடை காலங்களில் காய்ந்த நிலையில் இருந்தாலும் மீண்டும் ஈரம் படபட வேர்கள் மூலமாக மீண்டும் துளிர்த்து வளர கூடியதாகவும் இருக்கும். ஒவ்வொரு கணுவிலும் ஒரு இலைகள் என இலைகள் தனித்தனியாக வளரும்.

வெள்ளைக் கீரை என்ற வள்ள கீரை நீரில் மிதந்தார் போல இருக்கக் கூடியது. நீர்நிலைகளில் நீளமான பல கிளைகளுடன் இவை படர்ந்து கொடி போல வளரக்கூடிய தன்மை கொண்டது. இதனை விதைகள் மூலமும் பயிர் செய்யலாம் அல்லது கணுக்களை கொண்டு (வேர்களை கொண்டு) பயிர் செய்ய முடியும். பொதுவாக மழைக்காலங்களில் இது படர்ந்து காணப்படும்.

வள்ளிக்கீரை வேறு பெயர்கள்

இந்த தண்ணீக் கீரையை (water spinach) பல நாடுகளில் விவசாயம் செய்தும் பயன்படுத்துகின்றனர். தெற்காசிய நாடுகள், ஆப்பிரிக்க, சீனா ஆகிய நாடுகளில் அதிக அளவில் இந்த கீரையை பயன்படுத்தும் பழக்கம் உண்டு. இதற்கு வள்ளைக்கீரை, வள்ளிக்கீரை, வள்ளல் கீரை, வெள்ளைக்கீரை வெள்ள கீரை, நீர்தாளிக்கீரை, கங்குன் கீரை எனப் பல பெயர்கள் உள்ளது.

அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், இலங்கை என பல நாடுகளிலும் இதனை தனி உணவாகவும் மற்ற உணவுகளுடன் சேர்த்து செய்யும் உணவாகவும் இந்த கீரையை தயாரித்துப் பயன்படுத்துகின்றனர்.

பல உணவுகளோடு சேர்த்து இந்தக் கீரையை சமைக்கும் பொழுது ஒரு தனி சுவையை நாம் பெற முடியும் என்று இந்த கீரையை பல உணவுகளில் சேர்த்து சமைக்கக் கூடிய பழக்கம் பல நாடுகளில் உள்ளது.

சில இடங்களில் இந்த கீரையை தண்ணீர் கீரை என்றும் கூறுவதுண்டு. கிராமப்புறங்களில் பல இடங்களிலும் வயல்வெளிகளிலும் களைச்செடி போலும் படர்ந்து இருக்கக்கூடும். இதனுடைய தண்டுகள் மிகவும் மென்மையாகவும் குழல் போல் தண்டின் நடுப்பகுதியில் துளையுடன் காணப்படும்.

இந்த கீரை மிக வேகமாக வளரக்கூடிய ஒரு வெப்ப மண்டல தாவரம். இதனுடைய பூக்கள் வெள்ளை கலந்த நீல நிறத்தில் இருக்க கூடியது. இந்த வள்ள கீரையின் இலைகள் ஈட்டி வடிவத்தில் மிகவும் மென்மையாக இருக்கக்கூடியது.

தண்ணிக் கீரை என்ற வள்ளக் கீரை உணவாக மட்டுமில்லாமல் மூலிகையாகவும் பயன்படக்கூடியது. கால்நடைகளுக்குத் பசுந்தீவனமாகவும் சில நாடுகளில் இதனை பயன்படுத்துகின்றனர்.

இரத்த சோகை

பல சத்துக்களைக் கொண்ட இந்த கீரை இரத்தத்தை சுத்திகரிக்கவும், உடலில் இரத்தத்தை விருத்தி செய்யக்கூடியதாகவும் உள்ளது. இரத்த சோகை உள்ளவர்களுக்கு மிக சிறந்த கீரை. சிவப்பணுக்களை பெருக்கக்கூடிய ஆற்றலும் கொண்டது.

வெப்பத்தை தணிக்கும்

உடலில் ஏற்படும் வெப்பத்தை தணித்து உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக்கூடிய சிறந்த கீரை இந்த வள்ள கீரை.

கண்களுக்கு சிறந்தது

வைட்டமின் ஏ சத்துகள் நிறைந்து இருக்கக்கூடிய இந்த கீரை கண்களை பாதுகாக்கும் கீரை. கண்களுக்கு பலத்தைக் கொடுக்கக்கூடிய ஆற்றலைத் தருவதோடு பலவிதமான சத்துக்களையும் உடலுக்கு அளிக்கிறது.

மலச்சிக்கல் போக்கும்

குடலில் ஏற்படும் புண்களை ஆற்றக் கூடிய கீரை. அதேபோல் மலச் சிக்கலைத் தீர்க்கக் கூடியது.

எலும்புகளுக்கு பலமளிக்கும்

சுண்ணாம்பு சத்துகளை சீராக உடல் உட்கிரகிக்கும் தன்மையைப் பெற்ற இந்த கீரை எலும்புகளுக்கும் பற்களுக்கும் பலத்தை கொடுக்க கூடிய ஒரு அற்புதமான கீரை.

தாய்ப் பாலை பெருக்கும்

தாய் பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த கீரையை அவ்வப்போது உணவில் சேர்த்து சமைத்து உண்டு வர தாய்ப்பால் பெருகும். “வள்ளல் தாய்போல் பிள்ளையை வளர்க்கும்” என்று ஒரு பழமொழியும் இந்தக்கீரைக்கு தமிழகத்தில் கூறுவதுண்டு.

மேலும் நரம்புத் தளர்ச்சி, சிறுநீரகக் கோளாறுகள் போன்ற பிரச்சனைகளுக்கும் சிறந்த ஒரு கீரை. இந்தக்கீரையை கொண்டு கூட்டு, பொரியல் என பலவிதமான உணவுகளை தயாரித்து உண்ணலாம். பலவிதமான சத்துக்களை கொண்டிருக்கக் கூடிய ஒரு அற்புதமான கீரை. தமிழகத்தில் சில சந்தைகளில் இதனை பார்க்கவும் முடியும்.

பல பல நன்மைகளைக் கொண்டிருக்கக்கூடிய இந்த கீரையை கவனமாக கையாள வேண்டும். இந்த கீரை நீர் பாங்கான இடங்களில் அதிகமாக விளையக் கூடியதாக இருப்பதால் பலவிதமான கிருமிகள் இதன் தண்டு பகுதியில் இருக்கும். தண்டு பகுதிகளில் பல கிருமிகள் வாழ்வதும் உண்டு. இந்தத் தண்டுப் பகுதியில் வாழக்கூடிய இந்த கிருமிகளால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும்.

அதனால் தண்டுப் பகுதிகளைத் தவிர்த்து விட்டு வெறும் இலைகளை (கீரைகளை) மட்டுமே சமைத்து உண்ண வேண்டும். பல நாடுகளில் தண்டு பகுதியையும் சேர்த்து சமைக்கும் பழக்கம் உண்டு. ஆனால் அவற்றை மிகவும் கவனமாக கையாள வேண்டும். அதனால் தண்டுகளை தவிர்த்துவிட்டு இலைகளை மட்டுமே சமையலில் பயன்படுத்துவது சிறந்தது.

(3 votes)