வாலான் அரிசி – நம் பாரம்பரிய அரிசி

பிரபஞ்சத்தின் படைப்பு ரகசியமோ அல்லது அறிவியல் கூறும் பரிணாம வளர்ச்சியோ, எதுவாக இருந்தாலும் சரி மனிதனே அனைத்திலும் முதல் கட்ட வளர்ச்சியைப் பெற்றுள்ளான் என்பதினை யாரும் மறுக்க முடியாது. 

படைப்பின் அடிப்படையில் பல உயிரினங்கள் இருந்தாலும் அனைத்தும் மனிதனின் தேவைகளை ஒருவகையில் பூர்த்திசெய்யும் விதத்திற்காகவே உள்ளது.

புல், செடி, மரம் தொடங்கி மண் புழுக்கள், தேனீக்கள், ஆடு, மாடு, கோழி என அனைத்தும் மனிதனின் வாழ்வாதாரத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் அஸ்திவாரமாக இருக்கிறது. என்னதான் இவற்றை மனிதன் சூறையாடினாலும் இந்த பிரபஞ்சம் அவற்றை முடிந்த வரை புதுப்பித்துக் கொண்டு தான் இருக்கிறது. 

பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் பார்த்தால் மனிதனே உச்ச கட்ட வளச்சிக்கு ஆதாரமாக விளங்குகிறான். ஒரு செல் உயிரியல் தொடங்கி அவற்றின் அனைத்து வளர்ச்சியும் மனிதனுள் அடக்கமாகவே உள்ளது. 

இவ்வாறு படைக்கப்பட்ட மனிதனுக்கு இந்த பிரபஞ்சம் அனைத்தையும் அர்ப்பணித்துள்ளது. அவ்வாறு அர்ப்பணித்ததில் ஒன்று தான் அவனுக்கான உணவும்.

உலகில் உள்ள உயிரினங்களின் உணவுச் சங்கிலியும் அவற்றை அருமையாக வெளிப்படுத்துகிறது. எளிதாக இதனை நம் கலாச்சார பேச்சு வழக்கின் மூலம் புரிந்துகொள்ளலாம். ‘மேல் மட்டத்தின் கழிவு கீழ்மட்டத்தில் உணவு’.

‘மேல் மட்டத்தின் கழிவு கீழ்மட்டத்தில் உணவு’.

மேல் மட்டம் என்பது முதல் அடுக்கில் மனிதனையும், மற்ற உயிரினங்களையும் குறிக்கிறது. அதாவது இவற்றின் கழிவுகள் கீழ் மட்டத்தில் அதாவது மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள், மண்புழுக்கள் போன்றவற்றிற்கு உணவு.

இந்த கீழ்மட்டத்தின் உள்ள நுண்ணுயிர்கள் போன்றவற்றின் கழிவுகள் மண்ணிற்கு உணவாகவும், இந்த மண்ணில் உள்ள மரம், செடி, கொடிகளுக்கு அவை உணவாகவும் உள்ளது என்பதனை இந்த சுழற்சி காட்டுகிறது. ஆக மரங்கள், இலை தழைகள் மனிதனுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் உணவாக உள்ளது. அனைத்திற்கும் மேல் மட்டத்தின் மனிதன் ஆறறிவுடன் உள்ளான்.

ஆரம்ப காலகட்டத்தில் காடுகளிலும் மலைகளிலும் உணவைத் தேடி அலைந்த அவன் அங்கிருந்த கனிகளையும், காய்களையும் உண்டு வாழ்ந்தான், பின் மிருகங்களை வேட்டையாடி அவற்றை அப்படியே உண்டான், அதனைத் தொடர்ந்து அந்த மாமிச உணவை தீயில் இட்டு சுவைக்கு அடிமையாகி உண்ணத் தொடங்கினான்.

தீயில் இட்ட உணவின் சுவை குறைய அவற்றிற்கு காலப்போக்கில் பலவித மசாலாக்களையும், உப்புக்களையும் சேர்த்து உண்ண தொடங்கினான். நாக்கிற்கும், சுவைக்கும் அடிமையான அவன் காலப் போக்கில் பல ரசாயனங்களை சேர்த்து உண்ண தொடங்க வந்ததே பலப்பல உபாதைகளும், நோய்களும்.

இயற்கை மனிதனுக்கு எல்லா வகையிலும் அவனது தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்திருக்கிறது. அதிலும் ஆரோக்கியத்திற்கு ஆணிவேராக என்றும் அவனைக் காக்கிறது. எந்த சூழலிலும் எல்லா காலகட்டத்திலும் அவனுக்கு பக்க பலமாகவும் விளங்குகிறது. பலப் பல ஆசைகளினாலும், அடிமைத்தனத்தினாலும் அவற்றை மறந்து விடுகிறான் மனிதன் என்பது உண்மை.

உணவையும் இந்த வகையில் இந்த பிரபஞ்சம் அவனுக்கு ஏற்றவாறு அளிக்கிறது. உலக சுழற்சிக்கு உணவுச்சங்கிலி பிரதானமாக இருந்தாலும், ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஏற்ற உணவை அவை பாகுபடுத்தி வைத்துள்ளது.

பறவைகள் பூச்சிகள், தானியங்களை கண்டவுடன் விரும்பி உண்பதும் மற்ற உணவுகளை சீண்டாமல் இருப்பதும், எலிகள் நெல்லை விரும்புவதும், அணில் பழங்களை விரும்புவதும், காட்டு மிருகங்கள் பல மற்ற உயிரினத்தை விரும்புவதும், ஆடு மாடு இலை தழைகளை விரும்புவதும் இயற்கையிலேயே அமைந்துள்ளது.

ஒவ்வொன்றிற்கும் தேவையான உணவை இந்த இயற்கை அழகாக பாகுபடுத்தி வைத்துள்ளது, அதுவும் அடுப்பில் இட்டு சமைக்காமலேயே உண்கிறது. தீயில் இட்டு சமைத்தால் உணவின் உண்மையான சுவை குழைந்து விடும் என்று அறிந்திருக்கிறது போல..  பசித்தாலும் புலி புல்லைத் திங்காது என்பது நாம் அறிந்த ஒன்று தான். 

இந்த வரிசையில் மனிதனும் சில வகை உணவுகளை விரும்பி உண்பவனாக இருக்கிறன். யாரும் சொல்லாமலேயே நாம் இதனை சோதித்துக்கூட பார்க்கலாம்.

இயற்கை என்றும் மனிதனுக்கும் தேவையானதை தேவைக்கு முன் கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறது. புரிந்து கொள்ளும் பக்குவத்தையும் அளித்திருந்தது, ஆனால் அதனை மனிதன் காலப்போக்கில் தன் திசையை திருப்பி ஆசைக்கு அடிமையானதால் குலைந்துவிட்டது. 

சரி இப்போது மனிதனுக்கு பிடித்த உணவை தெரிந்து கொள்வோம்.

ஒரு பெரிய தட்டில் இயற்கையாக கிடைக்கும் அனைத்து உணவையும் அடுக்குவோம். அதாவது சமைக்காது ஆடு, மாடு, கோழி முதல் அரிசி(நெல்), பருப்பு, தானியம், பழங்கள், கொட்டைப் பருப்புகள்(தேங்காய், பாதாம், முந்திரி போன்றவை) வரை எதையெல்லாம் இன்று மனிதன் உரு மாற்றி உண்கிறானோ அவற்றையெல்லாம் அடுக்குவோம்.

அதனை ஒரு குழந்தைக்கும், ஒரு வளர்ந்த மனிதனுக்கும் கொடுப்போம். கொடுத்த மாத்திரத்தில் அவர்கள் எடுக்கும் உணவு பழங்களும், கொட்டைப் பருப்புகளுமாக இருக்கும். சோதித்துதான் பார்ப்போமே!..

இதிலிருந்து எளிதாக ஒரு உண்மை புரியும் மனிதனுக்கு ஏற்றதும், விரும்பியதுமான உணவுகள் கனிகள் மற்றும் கொட்டைப் பருப்புகள். ஆனால் காலப் போக்கில் சுவைக்கு அடிமையான அவன் உணவிற்கு பலப்பல சுவைகளை சேர்க்க இன்று அந்த வரிசையில் ரசாயனமும் அரங்கேறிவிட்டது.

சமைத்தல் என்ற ஒன்றை இயற்கையே நமக்காக பஞ்ச பூதங்களில் ஒன்றான நெருப்பு சக்தியை (சூரியன்) கொண்டு தயாரித்து கொடுத்தாலும் அதனை மறந்து மனிதனால் உருவாக்கப் படும் நெருப்பினால் உணவை சமைக்க எல்லா சத்துக்களும் குழைந்து விடுகிறது.

செயற்கை தீயில் உணவை போட்டு சமைப்பதால் உணவின் சுவை மட்டுமல்ல உணவின் சத்துக்களும் நசிந்து போகிறது. இந்த இயற்கை மற்ற உயிரினங்கள் எவ்வாறு தேவைக்கு ஏற்ப உணவை உண்கிறதோ அவ்வாறு தான் மனிதனையும் படைத்தது.

அதனை விட்டு விட்டு காலை எழுந்தது முதல் இன்று பலரது வாழ்க்கையே உணவை சமைப்பதில் சமையல் அறையில் தான். இதனால் நேரமும் வீண், உணவின் தரமும் வீண், உடலுக்கும் ஊறு விளைவிக்கிறது. அடுப்பில் ஏற்றாமல் பல உணவுகளை எளிதாக உண்ண புற்று நோய் முதல் பல நோய்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடுவது உண்மையில் நிகழ்கிறது.

என்னது…, உணவை தீயில் இட்டு சமைக்காமல் உண்பதா? காய்கறி, கீரைகள், தானியங்களை எவ்வாறு உண்பது? அதற்காக இந்த நவீன உலகில் வெறும் பழங்களை மட்டுமே உண்டு வாழ முடியுமா என்கிறீர்களா? நிச்சயம் முடியும் பழங்களுடன், காய்கள், கீரைகள் மற்றும் தானியங்கள் ஏன் அரிசியைக் கொண்டும் அடுப்பில் ஏற்றாமல் உண்ணலாம். 

பாரம்பரிய அரிசிகளைப் பற்றி அறிந்தும், தெரிந்தும் எளிதாக பெற்று தயாரித்து உண்டு வரும் நமக்காக இந்த இயற்கை அளித்திருக்கும் ஒரு அற்புத அரிசிதான் வாலான் அரிசி.

வாலான் அரிசி

இந்த வாலான் அரிசி அடுப்பில் ஏற்றாமல் உண்ணத் தகுந்தது.  
தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தில் அதிமாக விளையும் இந்த வாலான் அரிசி நம் பாரம்பரியத்தை எடுத்துக் கூறும் அரிசியாகவும் உள்ளது.

நமது முன்னோர்கள் நல்லவற்றையும், உடலுக்கு ஆரோக்கியமானத்தையும் ‘இது நல்லது’ என்று வெறுமனே கூறாமல் அவற்றுடன் சில சாஸ்திரங்களையும், சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் உட்புகுத்தி வைத்திருக்கின்றனர். காலத்திற்கும் நேரத்திற்கும் ஏற்ற உடலையும் ஆரோக்கியத்தையும் பெற பலவற்றை கடவுளுடனும் பிண்ணிப் பிணைத்து வைத்திருக்கின்றனர். 

ஆறுமாதம் சூரியன் திசை மாற, ஆடிமாத காற்றில் பரவும் நோய்களில் இருந்து நம்மை காக்க, கேழ்வரகு அவசியம், இதனை வெறுமனே கூறாமல் ஆடிமாதம் அம்மனுக்கு கூழ் ஊத்த வேண்டும் என்ற சடங்கை சேர்க்க இன்றும் நடைமுறையில் உள்ளது, இதன் அறிவியல் சற்று பின்புறம் இருந்தாலும் இன்றும் இதனை பின்பற்றுகிறோம்.

அதேப்போல் நவராத்திரி காலம், புரட்டாசியில் உடலுக்கு அதிக புரதச்சத்து தேவைப்படும் காலம். அந்த நேரத்தில் புரதம் அதிகம் இருக்கும் சுண்டல் வகைகளை தினமும் அதுவும் குறைந்தது ஒன்பது நாட்களாவதும் உண்ண வேண்டும் என்பதற்காக அனைவரையும் ஒன்று திரட்டும் ஒரு விழா. இப்படி பல பல அர்த்தமுள்ள விழாக்கள், பண்டிகைகள் நமது தமிழர் பாரம்பரியத்தில்.

அரிசியும் திருவிழாவும்

அர்த்தமுள்ள இந்த வரிசையில் வரும் திருவிழாவில் ஒன்று தான் ஆடிப் பெருக்கு விழா. அதுவும் வெகு சிறப்பாக வாழ்வும் மகிழ்வும் வாழை அடி வாழையாக பெருக காவிரி கரையில் கொண்டாடப்படும் திருவிழா.

சுமங்கலிகளுக்கு விருப்பமான திருவிழா அதிலும் புதிதாக திருமணமான பெண்கள் விரும்பும் திருவிழா. தட்சிணாயண காலத்தில் சூரியன் திசை மாற, அடிக் காற்றில் பரவும் நோய்களில் இருந்து நம்மைக் காக்கவும் உடலுக்கு தேவையான பலத்தைக் அளிக்கவும் நதியில் நீராடி இயற்கை உணவை உண்ண வேண்டும் என்பதற்காக பின்பற்றப்பட்ட திருவிழாதான் இந்த ஆடிப் பெருக்கு திருவிழா. 

பொதுவாக இந்த நாளில் சுமங்கலிகள், புதிதாக திருமணமானவர்கள் காவிரி கரையில் நீராடி காப்பரிசி படையல் வைத்து இறைவனை வேண்டி தங்களில் தாலிக் கயிறை நோய் தடுப்பாற்றல் கொண்ட மஞ்சள் பூசி புதிதாக அணிவது (புதுத்தாலி) வழக்கம்.

வாலான் அரிசி சிறப்பு

இதில் படையல் வைக்கும் அரிசி உணவும் தீயில் சமைக்காது இயற்கையாக தயாரித்து உண்பது என்பதிலிருந்து நமது பாரம்பரிய சிறப்பை அறியலாம்.

ஆடிப்பெருக்கு அன்று பொதுவாக படையலுக்கு நமது பாரம்பரிய அரிசியான வாலான் அரிசியினை இரண்டு மணிநேரம் நீரில் ஊறவைத்து அதனுடன் எள்ளு, வெல்லம் அல்லது பனை வெல்லம், தேங்காய் துருவல், ஏலக்காய் சேர்த்து வைப்பார்கள்.

இனிப்பு வாலான் அரிசி

தாலிக் கயிறு மாற்றியதும் இறைவனை வேண்டி, சுவையான இந்த வாலான் அரிசி உணவை உண்பது வழக்கம். இயற்கையிலேயே இனிப்பான இந்த அரிசியில் செய்த இனிப்பு உணவை உண்பதால் உடலுக்கும், உள்ளத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்தி, மன பலம், சீரான இரத்த ஓட்டம் பெருகுவதுடன் மந்தம் தளர்ச்சி முதலியவை நீங்குகிறது. மேனி பளபளக்கவும், உடல் அழகை மீட்கவும் இந்த  அரிசி பெரிதும் உதவுகிறது. 

அதிக உடல் எடை கொண்டவர்கள் இதனை தொடர்ந்து உண்டுவர உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கப் பெறுவதுடன் தேவையற்ற கொழுப்பு குறையவும் இந்த வாலான் அரிசி உதவுகிறது.

திருச்சியில் பெரும்பாலும் விளையும் இந்த அரிசியின் நெல்லிற்கு பின்னல் ஒரு வால் போன்ற அமைப்பு இருப்பதால் இந்த அரிசிக்கு வாலான் அரிசி என்ற பெயர் வந்திருக்கலாம்.

வாலான் அரிசி நிறம்

நடுத்தர ரகமான இந்த வெள்ளை அரிசி எந்த இரசாயனமும் பூச்சி கொல்லிகளும் இல்லாது இயற்கையான முறையில் எளிதாக ஐந்து மாதம் விளையக்கூடிய அரிசி.  

பல மருத்துவகுணங்கள் கொண்ட இந்த வாலான் அரிசி ஆண்களின் ஆரோக்கியத்திற்கும், நற்குழந்தை பிறப்பிற்கும் ஏற்றது. 

வாலான் அரிசி உணவு

ஊறவைத்து.. தீயில் சமைக்காது ஊறவைத்த இந்த வாலான் அரிசியினை பேரிட்சை, பாதம், முந்திரி, காய்ந்த திராட்சை சேர்த்து உருண்டைகளாக உருட்டி தினம் ஒரு உருண்டை உண்ண சிறந்த ஊட்டச்சத்து (Energy Food) உணவாகும். 

வாலான் அரிசியினை சற்று கொரகொரப்பாக அரைத்து அதில் தயாரிக்கும் புட்டு அபாரமான சுவையை உடையது. இதனுடன் நாட்டு சர்க்கரை, தேங்காய் துருவல் சேர்த்து உண்ணலாம். 

வாலான் அரிசியினை மாவாக திரித்து அதில் செய்யும் அதிரசம், அப்பம் போன்ற பலகாரங்களும் நல்ல மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.
இயற்கை மனிதனுக்கு அளித்திருக்கும் கொடையில் சிறந்த கொடை இயற்கையாக கிடைக்கும் உணவுகள்.

இவற்றை தீயில் அல்லது ஏதேனும் நவீன சமையல் முறைகளில் சமைக்காது (ஊட்டச்சத்துக்கள் குழைக்காது) உண்ண நோய்கள் அண்டாது, வாழ்நாள் பெருகும், மனநிம்மதியும், அறிவாற்றலும் பெருகும். இவை பெருக வாழ்வில் அனைத்து துன்பங்களும் நீங்கி வாழ்வு வளமாகும். உடலும் மனமும் சிறக்க வாழ்வு வளமாகும். 

(4 votes)