மஞ்சள் மகிமை

உலகே வியக்கும் மஞ்சள்

தமிழர்களுக்கு இந்த உலகம் கற்றுக்கொடுக்க ஒன்றுமில்லை. தமிழர்களிடம் இருந்து தான் பல விஷயங்களை இந்த உலகம் எடுத்துக் கொள்ளவேண்டும்.

தமிழர்கள் பின்பற்றும், பயன்படுத்தும் பலவற்றை மூடநம்பிக்கை என்று தமிழர்களையே நம்ப வைத்து மூடர்களாக்கி.. அவற்றிற்கு புதுவடிவம் அளிக்கிறது நவீன உலகம்.

தமிழனுக்கு தெரியாதது ஒன்றுமில்லை.. காலம் காலமாக எந்த படிப்பும் படிக்காத நமது முன்னோர்கள் நமக்கு பெரும் பொக்கிஷங்களை கற்றுக் கொடுத்துள்ளனர். அவற்றை பின்பற்றினாலே போதும் வாழ்வு சிறக்கும். 

பல்லாண்டு காலமாக நமது முப்பாட்டியும், எள்ளுப்பாட்டியும் சாதாரணமாக அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் ஒரு பொருளை வைத்து பல மாயங்களை செய்தனர்.

அதிலும் அந்த பொருளை எவ்வாறு, எவற்றுடன், எவ்வளவு, எப்படியெல்லாம் சேர்க்க வேண்டும் என்று உறுதியாக தெரிந்து அவற்றை அளவோடு தினம் தினம் மறவாமல் சேர்த்தனர். அதன் காரணமாக இந்தியாவிலும், தமிழகத்திலும் தோல், குடல் புற்றுநோய்கள் குறைவு.

அது என்ன நவீன யுகத்தில் உலகத்தையே ஆட்டிப்படைக்கும் புற்றுநோயை தடுக்கும் இந்திய மருந்து என்று வியப்பாக உள்ளதா?

நீங்கள் மட்டும் இதை கேட்கவில்லை, பல அறிஞர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் கூட இந்த கேள்வி உள்ளது. புற்றுநோய்யைக்கூட தடுக்கும் மருந்தா! என்று நமது அஞ்சறைப்பெட்டியில் இருக்கும் அந்த தங்க மசாலாவை ஆராய்ச்சிக்கு உட்படுத்தியது பல நாடுகள்.

ஆராய்ச்சி முடிவுகளை கண்டதும் அந்த பொருளுக்கே காப்புரிமை பெற்றுவிடலாம் என்று கூட பல நாடுகள் துடித்தது…

அந்த தங்க மசாலா வேறொன்றுமில்லை… நமது மஞ்சள் தான். 

மங்களம் என்ற சொல்லுக்கே உரியவள் பெண், அந்த பெண்ணுக்கே மங்களத்தைக் கொடுப்பது மஞ்சள் தான். பிறந்த பெண் குழந்தைக்கு மஞ்சள் பூசுவதில் தொடங்கி, நெற்றிப்பொட்டு, மஞ்சள் நீராட்டு விழா, மஞ்சள் குளியல், சுமங்கலி விழா என பல வடிவங்களில் பெண்களை காக்கிறது நமது மஞ்சள்.

அடுத்ததாக மங்களமாக போற்றப்படும் தெய்வ வழிபாட்டிற்கும் அவசியமாகிறது மஞ்சள். பூஜை அரை, வீடு வாசற்கதவு தொடங்கி மாரியம்மன் கோவில் வரை மஞ்சள் நிறைந்திருக்கிறது.

குடும்ப செழிப்பும் ஆரோக்கியமும் மேம்பட உணவிலும் அவசியமாகிறது மஞ்சள். எல்லா சமையலிலும் தவறாமல் இடம் பிடிக்கும் ஒன்றாக கலந்திருக்கிறது.  

இருக்கும் போது அருமை தெரியாது‘ என்பார்கள். காலம் காலமாக நமது உணவிலும், வாழ்விலும் பின்னிப் பிணைந்திருக்கும் மஞ்சளின் அருமை நமக்கு தெரியவில்லை என்பது தான் உண்மை. 

உணவாகவும், மருந்தாகவும் மட்டுமல்லாமல் ஆத்மார்த்தமாகவும், மனரீதியாகவும் பல நன்மைகளை மஞ்சள் அளிக்கிறது. சிறந்த கிருமி நாசினி, நோய் எதிர்ப்பு திறன், ஆன்டிஆக்ஸிடென்ட், அழகு, புனிதம் என பலவாக நமக்கு நன்மையை அளிக்கிறது. சுவையூட்டியாகவும், நிறமூட்டியாகவும் கூட நமது மஞ்சள் உள்ளது.  

சமீபத்திய மருத்துவ உலகம் மஞ்சளில் செய்த பல ஆராய்ச்சியில் அதில் இருக்கும் குர்குமின் என்ற வேதிப்பொருள் பல வகையான புற்றுநோயை தடுக்கிறது என்பதால் புற்றுநோய்களுக்கான மருந்துகளில் மஞ்சளை சேர்க்கலாம் என்று வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வெளிநாடுகள் பிரத்தியேகமாக மஞ்சளை சிறப்பு உணவாக விற்பனை செய்துவருகிறது.

அன்றாடம் உணவில் அளவான மஞ்சளை கலப்பதால் இந்தியர்களுக்கு குடல், வயிற்று புற்றுநோய்கள் வரும் வாய்ப்புகள் குறைவாக உள்ளது என்கிறது பல ஆய்வுகள்.

தமிழக உணவுகள் சாம்பார், ரசம், பொரியல், கூட்டு என அனைத்திலுமே மஞ்சளின் பங்கு உள்ளது. அன்றாடம் ஒரு சிட்டிகை மஞ்சளை சேர்ப்பதால் உலகமே அலறும் புற்றுநோய் காணாமல் போகிறது. சாதாரண சளி முதல் புற்றுநோய் வரை நவீன உலகம் சொல்லும் நோய் பட்டியலில் இருக்கும் பல நோய்களுக்கு மாமருந்தாக உள்ளது நமது மஞ்சள்.

உணவாக மட்டுமல்லாது வீட்டுவைத்தியம், ஆயுர்வேதம், சித்தா என இந்திய மருத்துவத்திலும் மஞ்சள் பெரும் பங்கு வகிக்கிறது.

மருந்து, உணவு.. இவை எல்லாவற்றிற்கும் மேல் மஞ்சளை நமது பெண்கள் உடல் முழுவதும் பூசி குளிப்பதால் எந்த சரும நோய்களும், தோல் புற்றுநோயும் அண்டவில்லை.

உலகிலேயே இந்தியர்களுக்கு தோல் புற்றுநோய் வரும் வாய்ப்புகள் குறைவுதான். இனியும் இந்த நிலை நீடிக்கும் என்று சொல்ல முடியாது. காரணம் இன்றைய பெண்கள் (நகரம் மற்றும் கிராமங்களிலும்) மஞ்சளை மறந்து பல பல கிரீம்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். 

ஒற்றை மஞ்சள் அளித்த மரியாதை, அழகு, தன்னம்பிக்கை, மங்களம், ஆரோக்கியம் இவற்றை எந்த கிரீம்களாலும் அளிக்க முடியாது. இன்று நமது இளைய தலைமுறையினரும், பெண்களும் பயன்படுத்தும் அழகு சாதனங்கள் சாதாரண பவுடர் முதல் ப்ளஷ், கரெக்டர், கன்சிலர், கிளென்சர் என எல்லாமே சரும புற்றுநோய்க்கு வித்தே.

அதுமட்டுமல்லாது வியர்வை நாற்றம் மற்றும் உடல் துர்நாற்றம் போன்றவற்றிற்கும் இவையே முதல் காரணமாகவும் உள்ளது. உடல் துர்நாற்றம் உள்ளது என்று நாம் பயன்படுத்தும் பாடி ஸ்பிரே, டியோடரண்ட் போன்றவையும் சரும நோய்களுக்கு காரணமாகிறது. 

மஞ்சளில் ஒருவகையான கஸ்தூரி மஞ்சளில் மணத்திற்கும், மருத்துவ தன்மைக்கும் முன் இவை நிற்க முடியுமா என்ன?

இயற்கையாக நாமே நமது உடலையும் அழகையும் மெருகேற்றிக் கொண்டால் எவ்வாறு இந்த அழகுசாதன சந்தைகள் தமது வியாபாரத்தை செய்வது.. அவர்களில் சூழ்ச்சியில் பலப்பல பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாமல் பெண்களும் மாட்டிக்கொண்டுள்ளனர். 

கருவிலேயே நமது நிறம், முடி போன்றவை நிர்ணயிக்கப்பட்டாலும் அது புரியாமல் தொலைக்காட்சியில் வருவது போல் வெள்ளையாக மாறிவிடலாம் என்று வருடக்கணக்கில் சிகப்பழகு கிரீம்களை வாங்கி பயன்படுத்தி பணம் விரையமானது மட்டுமல்ல நமது ஆரோக்கியமும் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது.

என்றாவது ஒருநாளாவது யோசித்ததுண்டா.. கடந்த பத்து வருடங்களாக நாமும் இந்த கிரீம்களை பயன்படுத்துகிறோம் ஆனால் நிறம் சற்றாவது வெளுத்திருக்கிறதா என்ன? மாறாக பல கருப்பு திட்டுகள், புள்ளிகள், பருக்கள் போன்றவைதான் மிச்சம். மஞ்சள் இவை அனைத்திற்கும் மருந்தாக உள்ளது.

மஞ்சள் கிருமி நாசினியாக மட்டுமல்லாமல் எந்த தொற்றும் பரவாமலும் நமது உடலைக் காக்கின்றது. அதோடு உடலில் ஏற்படும் தீய சக்திகளையும் அகற்றுகிறது. 

மஞ்சள் கொண்டு குளிக்கும் இந்திய பெண்கள் அறுபது வயதிலும் இளமையாக இருப்பதை இன்றும் காணலாம். அதே பல வெளிநாடுகளில் அதிகமாக இரசாயனங்கள் கொண்டு முகத்தை அழகுபடுத்திய பெண்கள் நாற்பது வயதை தாண்டினாலே அவர்களின் முகத்தில் ஒருவகை சுருக்கம், முதுமை தோற்றம் காணப்படுகிறது.

இன்னும் சிலர் நான் பயன்படுத்தும் கிரீம்களிலும் மஞ்சள் கலந்திருக்கிறது அதனால் நாமும் இந்த சரும நோய்களில் இருந்து தப்பித்துக் கொண்டோம் என்று பெருமையாக நினைக்க ஒன்றை மறந்து விடக்கூடாது அவை அதிக நச்சுக்களைக் கொடுக்கும் இரசாயனங்களுடன் சேர்ந்துள்ளது. இவையும் பல பின் விளைவுகளை அளிக்கக்கூடியது தான். அழகைக் கொடுப்பது மட்டுமல்ல மூப்பையும் தள்ளிப்போடுகிறது நமது பாரம்பரிய மஞ்சள். நேரடியாக மஞ்சள் பூசுவது சிறந்தது. 

எந்த மஞ்சளை பயன்படுத்துவது? மஞ்சள் என்பது ஒருவகையான கிழங்கு செடி வகையைச்சேர்ந்தது. உடலுக்கு ஒருவகை வெப்பத்தைக் கொடுக்கக் கூடியது. அதனால் நச்சு கிருமிகளை அழிக்கிறது.

பல வகையான மஞ்சள் உள்ளது. உருண்டை மஞ்சள், விரலி மஞ்சள், கஸ்துரி மஞ்சள் போன்றவை அனைவரும் அறிந்ததே. உருண்டை மஞ்சள் உடலுக்கு உரசி பூசும் மஞ்சள், பலவகையான நன்மைகளைக் கொண்டது. மஞ்சள் நிறத்தைக் கொடுக்கக் கூடியது.

விரலி மஞ்சள் என்பது உட்கொள்ள பயன்படும் மஞ்சள், அரைத்து தூளாக பயன்படுத்துவது இந்தியர்களின் பழக்கம். மிளகாயில் உள்ள நச்சுக்களை இந்த மஞ்சள் நீக்கி உடலின் குடலையும், வயிற்றையும் காக்கிறது. வயிற்றில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது. 

எலுமிச்சை சாதத்திற்கு மஞ்சளை சேர்ப்பது வெறும் நிறத்திற்காக இல்லை.. அதில் அறிவியலும், மருத்துவமும் கொட்டிக்கிடக்கிறது என்பதை மறந்துவிடவும் கூடாது, மறுத்துவிடவும் முடியாது.

கஸ்தூரி மஞ்சள்.. பெண்களுக்கு விருப்பமானது. உடலில் பூசி குளிக்க எந்த நிறத்தையும் அளிக்காது. சருமம் பளபளப்பாகவும், நல்ல தேஜசுடனும் காணப்படும். ஒருவகையான மணத்தையும் கொடுக்கக் கூடியது. உடலில் ஏற்படும் துர்நாற்றம், வியர்வையை போக்க சிறந்தது. பெண்கள் முகத்தில் இருக்கும் தேவையற்ற சிறு முடிகளை போக்கக்கூடியது.

மஞ்சள் மருத்துவம்

மஞ்சளை புண்கள் உள்ள இடத்தில் பூசினால் விரைவில் குணமாகும். தோலில் ஏற்படும் படை, சொறி, சிரங்கு போன்றவற்றிற்கு மஞ்சளை பற்றாக போடலாம். கரும்புள்ளிகள், பருக்கள், திட்டுகள் போன்றவற்றிற்கு மஞ்சள் பூச விரைவில் மறையும். மஞ்சளை நெருப்பில் சுட்டு அந்த புகையை நுகர்ந்தால் தலையில் கோர்த்துள்ள நீர், மூக்கடைப்பு அகலும்.

இப்படி மஞ்சள் இதற்கு நல்லது இவ்வாறு உண்ணவேண்டும், இப்படி பயன்படுத்த வேண்டும் என்பதெல்லாம் நிச்சயம் நாம் ஒவ்வொருவருக்கும் தெரியும். தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை அன்றாடம் உணவில் அளவோடு அனைத்து வகை தமிழர்கள் சமையலிலும் பயன்படுத்துவதும், உடலுக்கு பூசிக் குளிப்பதுமே போதுமானது.. மஞ்சளின் முழுப் பலனையும் பெறலாம்.  

நமது மூதாதையர்கள் அளித்த சஞ்சீவினியை பாதுகாத்து பயன்படுத்துவதே சிறந்தது. சர்க்கரைநோய், இரத்தக்கொதிப்பு, உடல்பருமன், மூட்டுவலி, உடல்வலி, நரம்புகளில் சேரும் தேவையற்ற அமிலாய்டு புரதத்தை கரைப்பது என தொடங்கி புற்றுநோய் வரை போக்கக்கூடிய தன்மை இந்த மஞ்சளுக்கு உள்ளது. 

மஞ்சளைப் பற்றி வியக்கத்தக்க பல ஆராய்ச்சி முடிவுகள் வந்தவண்ணமே உள்ளது. பலவகையான நோய்களுக்கு மஞ்சளில் உள்ள பல வேதியல் பொருட்கள் மருந்தாகவுள்ளது. இவற்றை அளவோடு நமது மூதாதையர் வகுத்துவைத்தாற்போல் பயன்படுத்துவதால் நன்மைகள் மட்டுமே உள்ளது. 

ஆ, இவ்வளவு நன்மைகளா மஞ்சளில் என்று உடனே கிளம்பிவிடாதீர்கள் பொட்டலத்தில் விற்கும் மஞ்சள் தூளை வாங்குவதற்கு. சமையலுக்கு என்றால் விரலி மஞ்சள் வாங்கி நீங்களே அரவை கடையில் கொடுத்து அரைத்து பயன்படுத்தவும். பொட்டலத்தில் மஞ்சள் தூள் என்று மஞ்சள் நிறத்தில் ஒரு தூள் கிடைக்கும்.. அதை தவிர்த்து நமது தலைமுறையினருக்காக சிரமத்தை பொருட்படுத்தாமல் நாமே அரவை கடைக்கு சென்று அரைத்து பயன்படுத்துவோம். 

அதுவே உடலுக்கு என்றால் உருண்டை மஞ்சளை ஒரு கல்லில் உரசி பூசிக் குளிக்கலாம்.. சற்று மஞ்சள் நிறத்தைக் கொடுக்கும் அல்லது கஸ்தூரி மஞ்சள் கிழங்கை நாட்டு மருந்து கடைகளில் இருந்து வாங்கி நேரடியாகவோ அல்லது வெட்டிவேர் போன்ற சேர்மானங்களுடன் சேர்த்து நாமே அரைத்து பயன்படுத்தி பலன்பெறலாம்.  

மஞ்சள் தேநீர்

https://www.youtube.com/watch?v=3MdCjt96ksA

(1 vote)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *