ராகி / கேழ்வரகு

தாய்க்கு நிகரான உணவு கேழ்வரகு

ஒவ்வொரு நொடியும் அதிசயம், கூடவே அரவணைப்பு, இவை இரண்டும் ஒருங்கே இணைந்த ஒரு அற்புதப்படைப்பு… தாய் இல்லாமல் நாம் இல்லை; தாய் இன்றி உலகில் எவரும் பிறப்பதில்லை. என்பது உலகறிந்த உண்மை. 

படைப்பின் இரகசியத்தில் இரு துருவங்களான ஆண் மகனையும் பெண் மகளையும் பெற்று இருவரையும் இரு கண்களாக ஒரே கோட்டில் இணைத்து, இருவருக்கும் இடையில் சிறந்த புரிதலையும் பாசத்தையும் உலகிற்கே அளித்த பெருமையும் தாய்க்கே.

இரத்த பாசம் என்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தத்தை கொடுத்த தாய், மாதா என்று அழைக்கக் கூடிய பூமா தேவி மற்றும் கோமாதா வைவிட சிறப்பு வாய்ந்தவள். பொறுமையையும் அமைதியையும் உணர்த்தும் கோமாதா மற்றும் பூமிதாயைவிட இரத்தபாசம், தியாக மனப்பான்மையையும் சேர்த்து கொடுப்பவள் தாய்.

தன் வயிற்றை பட்டினி போட்டு குழந்தைக்கு ஊட்டுவாள் தாய். தன் இரத்தத்தை கருவாக்கி, கருவை குழந்தையாக்கி அந்த குழந்தை வெளிவர தான் செய்யும் தியாகங்களை அவள் என்றும் எண்ணிப்பார்ப்பதில்லை.

காரணம், இனிதான் அவளில் முழு பொறுப்பும் தொடங்குகின்றது. பெற்ற குழந்தையின் எதிர்காலம் மட்டுமே அவளின் கண்முன் நிற்கும். அதில் அவள் நூறு சதவிகிதம் வெற்றியும் பெறுகிறாள். உலகில் பலர் பல குறிகோள்களை அடைய விரும்புகின்றனர். அவர்களில் சிலர் அந்த இலக்கை அடைகின்றனர். பலர் காணாமல் போகின்றனர். ஆனால் தாய் என்பவள் தன் குறிக்கோளான குழந்தையை தன் அன்பாலும், தன் அரவணைப்பாலும், தன் கண்டிப்பாலும், தன் பாதுகாப்பினாலும், தன் உணர்வினாலும், தன் உணவினாலும் இதனைச் சாதிக்கிறாள்.  

அ.. ன்.. பு.. எனும் இந்த மூன்று எழுத்துக்கள் இரத்தத்தில் கலந்து, நரம்புகளை மீட்டி, ஊணர்சிகளை மெருகூட்டி வார்தையாக வரும் பொழுது இந்த உலகையே கட்டி வைக்கும் வல்லமையைப் பெறுகிறது. அப்பேர்ப்பட்ட உண்மையான அன்பினை இந்த உலகில் தன் தாய் மட்டுமே கொடுக்க முடியும்.

தன்னுடைய இரத்தைத்தை கொண்டு உருவாக்கி, பிறந்த குழந்தையின் சீரான வளர்ச்சிக்கு சில வருடங்கள் தன் இரத்தத்தையே பாலாகவும் கொடுக்கிறாள். பிறந்த குழந்தை தன் தாயிடம் பால் குடிக்கும்போது அதன் பசி மட்டும் அடங்குவதில்லை. அதற்கு அப்பால் சில பல ரகசியங்களும் குழந்தையுடன் கலக்குகிறது.

தாயின் இதய துடிப்பை கேட்டு, தாயின் உடல் சூட்டை அனுபவித்து, உடல் மணத்தை நுகர்ந்து தாயின் அன்பை தனக்கு சொந்தமாக்கிக் கொள்கிறது. அதன் மூலம் குழந்தை தன்னை சுற்றி ஒரு நம்பிக்கை வளையத்தையும், பாதுகாப்பு வளையத்தையும் உருவாக்கிக்கொள்கிறது. ‘நமக்கு அம்மா இருக்கிறார். எல்லாவற்றையும் அவரே பார்த்துக்கொள்வார்’ என்ற நம்பிக்கையும் பாதுகாப்பு உணர்வும் குழந்தையிடம் பிறக்கிறது. 

பார்த்துப் பார்த்து வளர்க்கும் குழந்தையின் முதல் உணவான தாய்ப்பாலை சிலவருடம் கொடுக்கும் தாய், அதே விதமான, அதே சத்துக்களையும், உணர்வையும், பாதுகாப்பையும் கொடுக்கக் கூடிய ஒரு உணவையும் தன் குழந்தைக்கு கொடுக்க ஆசைப்படுவாள். அப்பேர்ப்பட்ட ஒரு சிறந்த உணவு இந்த உலகிலேயே நம் தென் இந்திய உணவு என்று சொல்வதற்கு நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டும். 

ஆம், தாயின் அக்கறையையும், பாதுகாப்பையும், தாய்ப்பாலின் சத்துக்களையும் ஒருவாறு கொண்டுள்ளது அந்த உணவு. இன்றைய நவ நாகரிக வாழ்வில் பலரும் பெரிதும் அவதியுறும் ஒருவகை மன சோர்வு, மன அழுத்தம் மற்றும் தூக்க மின்மைக்கும் இந்த உணவு பேருதவியாக இருக்கிறது.தயிப்பாலிற்கு அடுத்தபடியாக குழந்தைகளின் முதல் உணவு என்பது நம் நாட்டின் கேழ்வரகு தான்.

ராகி வேறு பெயர்கள்

ஆரியம், கேழ்வரகு, கேவுரு, ராகி, கேப்பை… இப்படிப் பல பெயர்களால் அழைக்கப்படும் கேழ்வரகு, ஆசியாவிலும் ஆப்பிரிகாவிலும் பெரிய அளவில் பயிரிடப்படுகிறது. உலகில் அதிக மக்கள் உண்ணக் கூடியதும் இந்த கேழ்வரகைதான்.

இந்தியாவில் கேழ்வரகு பிறந்த இடம் தமிழகம் அல்ல கர்நாடகம் என்றாலும், தமிழ்ச் சமூகத்தோடும் தமிழக நிலவியலோடும் நெருக்கமான தொடர்பு உடையது கேழ்வரகு. இங்கு பல நூற்றாண்டு காலப் பின்னணி கேழ்வரகுக்கு இருக்கிறது.

நாட்டுக் கேழ்வரகு

நாட்டுக் கேழ்வரகிலேயே வெண்ணிறக் கேழ்வரகு, கறுப்புக் கேழ்வரகு, சுண்டாங்கி கேழ்வரகு, சாட்டை கேழ்வரகு, கார கேழ்வரகு, பெரு கேழ்வரகு, வெள்ளைமுளியான் கேழ்வரகு, கரிமுளியான் கேழ்வரகு, குருவ கேழ்வரகு, நாகமலைக் கேழ்வரகு, தேன்கனிக்கோட்டைக் கேழ்வரகு என்று ஏறத்தாழ 60 வகைகள் இருக்கின்றன.

ஆடி, புரட்டாசி, மார்கழி, சித்திரை என அனைத்து பட்டங்களிலும் எளிதில் பயிரிடப்படும் இந்த சிறுதானிய வகையைச் சேர்ந்த கேழ்வரகு மானாவரியிலும் குறைந்த நீரிலும் விளையக்கூடியது. பூச்சி தாக்குதலும் களைத் தொந்தரவும் இல்லாத இது நூறு நாளில் இயற்கையாக எந்த நஞ்சும் இல்லது விளையக் கூடியது.    

ராகி அளிக்கும் ஆரோக்கியம்

தொன்றுதொட்டு நமது நாட்டில் உட்கொள்ளப்பட்ட இந்த கேழ்வரகு நம் முன்னோர்களின் மிக முக்கியமான உணவுகளில் ஒன்று. தாய், குழந்தை என்ற பாதுகாப்பான உணர்வுடன் நமது முன்னோர்கள் உடலுறுதியுடனும், அதிக காலம் நோயின்றியும் உயிர் வாழ்ந்ததற்கு மிக முக்கிய காரணம் அவர்களது சிறந்த உணவு மேலாண்மையும் அதனில் தவறாமல் பயன்படுத்திய கேழ்வரகு உணவும் தான்.

தமிழகத்து உணவில் பெரும் பங்கு வகித்தது கேழ்வரகு கூழ். கேழ்வரகு களி மற்றும் கேழ்வரகு அடை போன்றவையும் கர்நாடகத்தில் கேழ்வரகு முத்தே என்றும் கேரளத்தில் கட்டி என்றும் கேழ்வரகு உணவை காணமுடியும். இன்றும் பல நகரங்களைத் தவிர நமது கிராமங்களில் இன்னும் மணம் வீசிக்கொண்டு தான் இவை உள்ளது.

ராகி சத்துக்கள்

  • இன்று ஒரு சில கிராமங்களைத் தவிர மற்ற இடங்களில் அரிசியும் கோதுமையும் அதிகமாக பயன்படுத்தும் உணவுகளாக உள்ளது. கேழவரகில், அரிசி மற்றும் கோதுமையுடன் ஒப்பிடுகையில் குறைந்த அளவு கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு உள்ளது. அதனுடன் அதிக அளவில் அத்யாவசிய தாதுக்கள் உள்ளது. லெசித்தின் மற்றும் மெதியோனைன் போன்ற அமினோ அமிலங்கள், உள்ளன. இவை நுரையீரலில் ஏற்படும் அதிகபடியான கொழுப்பை குறைக்கின்றன.   
  • குழந்தைகளின் வளர்ச்சியை நோக்கி அதிகரிக்கும் உணவுகளின் மத்தியில் கேழ்வரகு சிறந்த இடத்தை பிடிக்கிறது. சைவ உணவுகளில் கேழ்வரகில் தான் அதிகபடியான கால்சியம்(சுண்ணாம்பு) உள்ளது. கால்சியம் நமது பல் மற்றும் எலும்புகளுக்கு மிகவும் அவசியமான தாது. இதனால் எலும்புகளில் ஏற்படும் பாதிப்புகளை விரைவில் குணமாக்க வல்லது.
  • மாட்டுப் பாலைவிட கேழ்வரகில் மூன்று மடங்கு அதிக சுண்ணாம்பு சத்து உள்ளது. குழந்தைகளில் எலும்பு வளர்ச்சிக்கும் சீரான உடல் வளர்ச்சிக்கும் உதவும் நூறு கிராம் கேழ்வரகில் இரும்பு சத்து நாலு கிராமும் அதனை உடலில் எளிதாக கரைக்க வைட்டமின் சத்தும், புரதம் ஏழு கிராமும் தாதுக்கள் மூன்று கிராமும் நார்சத்து சராசரி நாலு கிராமும் உடன் உள்ளது. 
  • ‘மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது’ என்பது முழுக்க முழுக்க உண்மையாவது இந்த கேழ்வரகில் தான். அதாவது, சிறிய தானியமானாலும் இதில் எண்ணற்ற நற்குணங்கள் அடங்கியுள்ளன.  இது, இரத்ததிலுள்ள சர்க்கரையின் அளவை குறைக்க வல்லது. இதில் உள்ள ட்ரிப்டோப்ஹன் என்ற அமினோ அமிலம் உடலிலுள்ள கொழுப்பை கட்டுபடுத்துவதில் சிறந்து செயலாற்றுகிறது.
  • இதில் காணப்படும் அதிகப்படியான நார்சத்து, உணவை எளிதில் செரிக்க உதவுகிறது. இது வளரும் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது வயதானவர்களுக்கும் உகந்த உணவாகும்.
  • இதிலுள்ள ஐசோலியூசின் என்ற அமினோ அமிலம் உடலில் சிதைவடைந்த திசுக்களை குணப்படுத்தவும், இரத்த செல்கள் உருவாகவும், எலும்புகள் உருவாகவும், சரும ஆரோக்யத்திற்கும் உதவுகிறது. 
  • சத்துக்களில் சில உணவாக எடுத்துக்கொண்டால் மட்டுமே இரத்தமாக கலந்து உடல் வளர்ச்சிக்கு பயன்படும். அவ்வாறு இல்லாமல் மருந்துகளாகவோ அல்லது ஊசிகளாகவோ எடுத்துக்கொண்டால் அவையே நஞ்சாகவும் மாறி உடலைக் கொல்லும். அவற்றுள் மிக முக்கியமான ஒரு வகை அமினோ அமிலம்  மெதியோனைன்.
  • மெதியோனைன் வேறு எந்த தானியத்திலும் மிகுந்து காணப்படாத ஒரு இன்றியமையாத அமினோ அமிலமாகும். இது கொழுப்பை கட்டுபடுத்துவதிலும் கந்தக ஸல்ஃபர் சத்தை கொடுக்கவும் வல்லது. ஆரம்ப கட்ட புற்றுநோய் மற்றும் கல்லீரல் சம்மந்தமான நோய்களுக்கு சிறந்த  மருந்தாகவும் இது விளங்குகிறது. உடல் இளைக்க இதனை மிஞ்ச எதுவுமில்லை. 

கேழ்வரகு பயன்கள்

  • கேழ்வரகில் தயாரிக்கப்படும் கேழ்வரகு களியை அன்றாடம் உண்டு வர நரம்பு தளர்ச்சி நீங்கி உடல் பலம் அதிகரிக்கும். வாதத்தையும் அதிகரிக்கும்.
  • கேழ்வரகு மாவை நீரில் கரைத்து கட்டிகள் மீது பூசினால் கட்டிகள் பழுத்து மறையும்.
  • கேழ்வரகு கஞ்சி செய்து பருகி வர பேதி, அதிமூத்திரம் கட்டுப்படும்.

சத்துக்கள் அதிகம் கொண்ட இந்த கேழ்வரகை இரத்த சோகை உள்ளவர்களும் நீரிழிவு உள்ளவர்களும் பெருமளவில் தங்கள் உணவு பட்டியலில் சேர்த்துக் கொண்டிருகின்றனர். 

இன்று அதிகம் காணப்படும் உணவு கலப்படம், நஞ்சு கலந்த பால் போன்றவற்றிலிருந்து தங்களின் குழந்தைகளை காக்கவும் நல்ல ஆரோக்கியமான அடுத்த சமுதாயத்தை உருவாக்கவும் பல தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு கேழ்வரகு பால் மற்றும் கேழ்வரகு மால்ட் ஆகியவற்றை தயாரித்து கொடுக்கின்றனர்.

இந்த கேழ்வரகு பாலினை தொடர்ந்து குழந்தைகளுடன் பெரியவர்களும் அதுவும் பெண்கள் குடிக்க முட்டி, கைகால் வலிகள் பறந்து போய் பத்து மாடி கட்டடத்தையும் துள்ளி குதித்து ஓடலாம். கேழ்வரகில் தயாரிக்கப்படும் சில உணவுகளை கேழ்வரகு கூழ், ராகி மிக்சர், கேழ்வரகு களி, ராகி கார புட்டு, ராகி அடை, கேழ்வரகு இனிப்பு பானம், கேழ்வரகு தோசை, கேழ்வரகு வெந்தயக்கீரை சப்பாத்தி, கேழ்வரகு பால், கேழ்வரகு பூரி, முளைக்கட்டிய கேழ்வரகு மாவு தயாரிக்கும் முறை, கேழ்வரகு மாவு செய்வது எப்படி, ராகி இனிப்பு குழிப்பணியாரம், ஈஸி கேழ்வரகு கூழ், கேழ்வரகு லட்டு, கேழ்வரகு பக்கோடா, கேழ்வரகு சிமிலி, கேழ்வரகு முறுக்கு, கேழ்வரகு அவல் இட்லி, முளைகட்டிய ராகி பால், ராகி இட்லி, கேழ்வரகு குழி பணியாரம் என பல உணவுகளை அவ்வப்பொழுது தயாரித்து உண்டுவரலாம்.

(2 votes)