பூச்சிகளை கட்டுப்படுத்தும் சில மூலிகைகள் – 1

பூச்சிகளை எவ்வாறு எளிமையாக கட்டுப்படுத்தலாம் என்ற பதிவில் பூச்சிகளை விரட்டும் வழிகளும் அதற்கான சில மூலிகைகளையும் பார்த்தோம். அந்த வரிசையில் இன்றும் சில மூலிகைகளை இந்த பதிவில் பார்ப்போம். இவை பூச்சிகளை மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் தேவைப்படும் வீட்டில் கட்டாயம் வளர்க்க வேண்டிய மூலிகைகள். 

சிறுகுறிஞ்சான்

நிச்சயம் பலர் அறிந்திருக்க கூடிய ஒரு மூலிகைச்செடி. காரணம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தக் கூடிய ஒரு மாமருந்து என்றால் இந்த சிறு குறிஞ்சான் தான். இன்று பல இடங்களில் இந்த சிறுகுறிஞ்சான் பொடிகள் கிடைக்கிறது. இந்த பொடிகளை விட அதிக பலன் தரக்கூடிய சிறுகுறிஞ்சான் இலைகளை அன்றாடம் உண்பதால் சர்க்கரை நோயிலிருந்து விரைவில் வெளிவருவது மட்டுமல்லாது உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த முடியும். இந்த சிறுகுறிஞ்சான் செடி ஒரு கொடி வகையைச் சேர்ந்தது. கொடி வகையைச் சேர்ந்த இந்த சிறுகுறிஞ்சானின் கொடியின் சிறுபகுதியை மண்ணில் நட்டு வைக்க அது வேர் விட்டு வளர தொடங்கும். இவ்வாறு எளிதாக சிறுகுறிஞ்சான் செடியை வளர்க்க முடியும் அல்லது இதில் இருக்கும் விதைகளை  மண்ணில் இட்டும் வளர்க்கலாம். ஒவ்வொரு நாளும் இரண்டு அல்லது மூன்று இலைகளை காலையில் எடுத்து உண்டு வர நல்ல பலன் விரைவில் கிடைக்கும்.

நாயுருவி

நாயுருவி மூலிகையைப்பற்றி அறியாதவர்களே இருக்க முடியாது. பலருக்கு பெயர் தெரியாமல் இருக்கலாம். அனைவருக்கும் பரிச்சயமான ஒரு மூலிகைதான். ஏதேனும் செடி கொடிகள் இருக்கும் இடத்திற்கு சென்று வந்தால் உடலில் இருக்கும் துணிகளில் ஆங்காங்கே முட்கள் போல் சில விதைகள் ஒட்டிக்கொண்டிருக்கும், அவை தான் நாயுருவி. எளிதாக இந்த அடையாளத்தை வைத்து கண்டுபிடித்து விடலாம். இதன் விதைகள் மனிதர்கள், விலங்குகள் போன்றவற்றில் ஒட்டிக்கொண்டு அதன் மூலம் பரவக்கூடியது. பொதுவாக சாலையோரங்கள் செடிகொடிகள் அதிகமாக இருக்கக்கூடிய பல இடங்களில் இந்த நாயுருவி செடிகள் அதிகமாக வளர்ந்திருக்கும். இதில் இருக்கக்கூடிய மருத்துவ குணங்கள் அதிகம். அடிக்கடி வரும் காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றிற்கு இந்த நாயுருவி இலையை பருப்புடன் சேர்த்து வாரம் ஒருமுறை சமைத்து உண்டு வர இவை விரைவாக குணமாகும். அது மட்டும் அல்லாமல் சிறுநீரைப் பெருக்கக்கூடிய இந்த நாயுருவி இலைகள் விஷக்கடி, பூச்சிக்கடி போன்றவற்றிற்கு சிறந்த மருந்து. அந்த இடங்களில் பூசிவர உடலில் ஏற்பட்டு இருக்கும் விஷயங்கள் விரைவாக குறைக்கும். எந்த பராமரிப்பும் இல்லாமல் எளிதாக விதைகளின் மூலம் இந்த நாயுருவி செடியை வளர்க்க முடியும்.

பிரண்டை

வீட்டில் கட்டாயம் வளர்க்க வேண்டிய ஒரு மிக முக்கியமான செடி பிரண்டை. பொதுவாக காடுகளில் அதிகம் வளர்ந்து இருக்கும் இந்த பிரண்டை அதிக மருத்துவ குணங்கள் கொண்டது. குறிப்பாக வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் இருதய சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் மருந்தாக விளங்குகிறது. பிரண்டையினை வாரம் ஒருமுறை மூட்டு வலி உள்ளவர்களும் எலும்பு ஆரோக்கியமின்மை உள்ளவர்களும் கட்டாயம் எடுத்துக்கொள்ளவேண்டும். அதுமட்டுமல்லாமல் வாய் முதல் ஆசனவாய் வரை உள்ள அனைத்து விதமான தொந்தரவுகளுக்கும் இந்த பிரண்டை மகா மருந்தாக அமைகிறது. எளிதாக இந்த பிரண்டை வளர்க்க முடியும். கணுக்கள் கணுக்களாக இருக்கக்கூடிய இந்த  பிரண்டையின் ஒரு கணுவை மண்ணில் நட்டு  வைத்தால் போதும் வேர் விட்டு விரைவாக வளர்ந்து விடும். 

கற்பூரவள்ளி

ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு மிக முக்கியமான மூலிகை கற்பூரவள்ளி. பொதுவாகவே கிராமங்களில் துளசியும் கற்பூரவள்ளி வாசலில் இருக்க சாதாரண பூச்சி முதல் எந்த விஷப்பூச்சிகளும் அந்த இடத்திற்கே வராது என்பார்கள். அந்த அளவிற்கு அதன் வாசனை பூச்சிகள் விரும்பத்தகாத ஒரு வாசனையாகும்.  அதுமட்டுமல்ல ஒவ்வொரு வீட்டிலும் இந்த கற்பூரவள்ளி இருக்க உடல் அழகு மேம்படும். உடலில் ஏற்படும் தழும்புகள், முகத்தில் இருக்கும் முகப்பருக்கள், கரும்புள்ளிகள், தழும்புகள் இவற்றை எளிதாக போக்கக் கூடியது இந்த கற்பூரவள்ளி. குழந்தைகளுக்கு ஏற்படும் சளி இருமலுக்கு மிகவும் நல்ல மருந்து. சாதாரணமாகவே கற்பூரவள்ளி இலையை அன்றாடம் காலையில் உண்பது உடல் நலத்திற்கு நல்லது. கற்பூரவள்ளி தண்டை மண்ணில் நட்டு வைத்தாலே போதும் விரைவாக வேர் பிடித்து வளர தொடங்கிவிடும். ஈரப்பதத்தை காத்து தேவைக்கேற்றவாறு  நீர் அளிக்க கற்பூரவள்ளி நன்கு செழித்து வளர வழிவகுக்கும்.

தும்பைச் செடி

சாலையோரங்களில் அழகான வட்ட வட்ட காய்களுடன் ஒற்றை இதழ் வெள்ளை பூக்கள் கொண்டு பூத்திருக்கும் தும்பைச் செடி. கிராமங்களில் கொசுவை விரட்ட இன்றும் பயன்படுத்தக்கூடிய ஒரு மிக முக்கியமான மூலிகை தும்பைச் செடி. தும்பை செடி இருக்கும் இடத்தில் கொசுக்கள் பூச்சிகள் குறையும். அதுமட்டுமல்லாமல் இந்த செடியின் இலை, பூ, காய் என அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டது. இது கீரை வகையை சேர்ந்தது என்று கூட சொல்லலாம். எளிதாக வட்ட வட்ட காய்களில் இருக்கக்கூடிய விதைகளை மூலமாக தும்பைச் செடியை வளர்க்க முடியும். பெரிய பராமரிப்பும் அவசியமில்லை. செடிகளுக்கு தீமை செய்யும் பூச்சிகளை விரட்டக்கூடிய தன்மை இந்த தும்பைக்கு உண்டு.

வல்லாரை

படிக்கும் குழந்தைகள் இருக்கும் அனைத்து வீடுகளிலும் கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு மூலிகை வல்லாரை. இந்த வகைச் செடி எளிதாக வீட்டில் வளர்க்கக் கூடியது. வேர்கள் மூலம் பரவக்கூடிய வல்லாரையை எளிதாக கடைகளில் வாங்கலாம். அவ்வாறு கடைகளில்  கிடைக்கும் ஏதேனும் சில வல்லாரையில் சின்ன வேர்கள் இருக்கும், அந்த வேர்களை  மண்ணில் நட்டு வைத்தாலே போதும் துளிர்த்து நன்கு வளர தொடங்கிவிடும். மேலும் அந்த வேர்கள் மூலமாக செடிகள் பரவத் தொடங்கும். இந்த வல்லாரையின் வாசனை பூச்சிகளுக்கு  பிடிக்காது என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு பூச்சிகளை விரட்ட கூடிய தன்மை இந்த வல்லாரைக்கு உண்டு. பலவகையான உணவுகளை சமைத்து உண்ணலாம். ஞாபக சக்தி அதிகரிக்கவும் வல்லாரை உதவும்.

இந்த மூலிகைகளை மண்புழு உரம், மண், மக்கு உரம், இலை தழை காய்கறி கழிவு உரம் போன்றவற்றுடன் மணல் கலந்து சிறு தொட்டிகளில் நிரப்பி வளர்க்கலாம். தொட்டியின் அடியில் கட்டாயம் துளையிட்டிருக்க இருக்க வேண்டும். மேலும் மண்ணின் ஈரப்பதத்தை பொருத்து நீர் ஊற்ற வேண்டும். அதனோடு வெயில் படுமாறு இருப்பது அவசியம். மேலும் சில பூச்சிகளை விரட்டும் மூலிகைகள்.

(6 votes)