பேய்மிரட்டி – நம் மூலிகை அறிவோம்

Anisomeles malabarica; பேய்மிரட்டி

தமிழகத்தில் தானாகவே எல்லா இடங்களிலும் வளரக்கூடிய ஒரு மூலிகை இந்த பேய்மிரட்டி. இது ஒரு மருத்துவ மூலிகையாகும். இதன் இலைகள் எதிர் அடுக்குகளில் நீண்டு, வெளிரிய நிறத்தில் இருக்கக்கூடியது. இதனுடைய மனம் ஒருவிதமான வெகுட்டல் மணத்தைக் கொண்டது.

பேய்மிரட்டி பூக்கள்

நீண்ட இலைகளைக் கொண்ட இந்த பேய் மிரட்டியின் மலர்கள் வெளிறிய கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த பூக்கள் கொத்து கொத்தாக பூக்கக்கூடிய வகையை சேர்ந்தது.

பேய்மிரட்டி பெயர்கள்

பெருந்தும்பை இனத்தை சேர்ந்ததால் இதனை பெருந்தும்பை, எருமுட்டைப் பீநாறி, இரட்டைப் பிரமட்டை, இரட்டை பேய் மருட்டி என பல பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது. சற்று வட்டமான இலையுடைய இனத்தை ஒற்றைப் பேய் மிரட்டி, வெதுப்படக்கி என்றும் கிராமங்களில் அழைப்பதுண்டு. கருந்தும்பை என்றும் குறிப்பிடுவதுண்டு.

பேய்மிரட்டி மருத்துவ குணங்கள்

பேய்மிரட்டி செடி முழுவதுமே மருத்துவ குணங்கள் நிறைந்தது. குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு இந்த பேய் மிரட்டி இலையை கொண்டு மருந்து தயாரித்து கொடுக்கும் பழக்கம் நம் கிராமங்களில் இன்றும் புழக்கத்தில் உள்ளது.

பசியை அதிகரிக்க கூடிய இந்த மூலிகை குடல் வாயுவை அகற்றும் தன்மை கொண்டது. உடலில் ஏற்படும் உப்புக் கழிவுகளை வியர்வையாகப் பெருக்கி உடலில் இருக்கும் கெட்ட நீரை வெளியேற்ற கூடியது. காய்ச்சலைத் தணிக்கக் கூடியது, சதை நரம்புகளில் ஏற்படும் வீக்கங்களைக் குறைக்கக்கூடியது.

தீய சக்தியை விரட்டும் பேய்மிரட்டி விளக்கு

இந்த இலையை கொண்டு திரியாக செய்து விளக்கேற்றும் பழக்கமும் நம் தமிழகத்தில் உள்ளது. அதிக மருத்துவ குணங்கள் கொண்ட இந்த பேய் மிரட்டி இலையை குபேர இலை என்றும் அழைப்பதுண்டு.

பேய்மிரட்டியின் பச்சை இலைகளே திரியாக எரியக்கூடிய தன்மை கொண்டது. பேய் மிரட்டி இலை ஒன்றை எடுத்து அதனை அகல் விளக்கில் எண்ணெய் ஊற்றி இந்த இலையை திரியாக திரட்டி அந்த அகலில் சேர்த்து விளக்கேற்றி பௌர்ணமிக்கு பூஜை செய்யும் பழக்கம் இன்றும் தமிழகத்தில் பல இடங்களில் உள்ளது. இந்த தீபத்திற்கு தீயசக்திகளை விரட்டக் கூடிய பண்பு உண்டு என்ற கருத்தும் உள்ளது.

பேய்மிரட்டி மருத்துவம்

  • பேய் மிரட்டி இலை கொதிக்க வைத்து வேது பிடித்து வேது பிடிக்க வாத ஜுரம் நீங்கும். இந்த பேய் மிரட்டி இலையை நீரில் நன்கு கொதிக்கவைத்து காலை மாலை என குடித்துச் பலவிதமான சுரங்களும் மலச்சிக்கலும் தீரும்.
  • 5 துளி இந்த பேய் மிரட்டி இலைச்சாறினை வெந்நீரில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க பல் முளைக்கும் போது ஏற்படும் பேதி நிற்கும்.
  • இந்த பேய் மிரட்டி இலையை கொண்டு தயாரிக்கப்படும் மருந்து காலராவை விரட்டக் கூடியதாகவும் உள்ளது.
  • பேய் மிரட்டி இலையை கஷாயம் செய்து குடிக்க வயிற்று நோய், பேதி, மாந்தம் தீரும். கரப்பான் தொல்லையையும் இதனால் நீங்கும்.
  • மூக்கடைப்பு போன்ற குறைபாடுகளுக்கு இந்த பேய்மிரட்டி கஷாயத்தின் நீராவிவைக் கொண்டு மூக்கால் முகர்ந்தால் விரைவில் நல்ல குணம் தெரியும்.
  • வயிற்றில் நாக்குப் பூச்சி இருந்தால் அதனை அகற்றுவதற்கும் இந்த பேய்மிரட்டி உதவும்.
(17 votes)