palaya satham, neeragaram, fermented rice benefits and uses, traditional rice neeragaram, maapillai samba neeragaram

நீராகாரம் / பழைய சாதம்

நல்ல உடல் நலத்துடன் என்றும் ஆரோக்கியமாக இருக்க அடிப்படையானது உணவு. பசியான நேரத்தில் நன்றாக மென்று திரவம் போல் கூழாகிய உணவு வயிற்றை அடைய சீரான ஜீரணம் நடைபெறும். சீரான ஜீரணமே என்றும் வளமான வாழ்வு தரும்.

காலை உணவு

இரசாயனங்கள் இல்லாத ஊட்டச்சத்துக்கள் நிறைந்த திரவ உணவை தேர்ந்தெடுத்து காலை மாலை பருக உடலில் உள்ள எல்லா தொந்தரவுகளும் காணாமல் போகும் என்று பார்த்தோம். சுக்கு மல்லி காபி, மூலிகை தேநீர், கருப்பட்டி காபி இவற்றையெல்லாம் பருகி மகிழ்ந்திருப்பீர்கள். இவற்றால் உடல் புத்துணர்வுடனும் சுறுசுறுப்புடனும் இருக்கும்.

ஆயிரம் நவீன உணவுகளும், சுவையூட்டிகளும், செயற்கை பசி தூண்டும் உணவுகளும் இந்தியாவிற்கு படையெடுத்த போதிலும் என்றும் நம் உணர்வுகளுடன் கலந்திருக்கிறது நம் பாரம்பரிய உணவு முறைகள். எத்தனை பிச்சா, பர்கர் மட்டுமல்லாது குளிர்பானங்கள் வந்தாலும் என்றும் நம் பண்டைய உணவுகள் சிறந்து விளங்குகின்றன என்பதற்கு இவையெல்லாம் ஒரு சான்று. சாதாரணமாக சிறந்தது என்று நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுகள் இன்று பல நோய்களுக்கே எமனாக இருக்கிறது. 

தற்போது நாம் உட்கொள்ளும் சிற்றுண்டிகலான பிரட், ரொட்டி, பிச்சா, பொங்கல், தோசை, வடை போன்றவற்றை எல்லாம் விட சிறந்த உணவு இட்டிலி (புது மாவில் தயாரித்தது, இரண்டு மூன்று நாட்கள் பிரிட்ஜில் வைத்திருந்த மாவில் தயாரிப்பது இல்லை). நல்ல இட்லியை விடவும் போட்டி போட்டு வெற்றிபெறும் உணவே இந்த நீராகாரம்.

பழமை என்றும் சிறந்தது. பழமை என்றதும் நம் அனைவரின் நினைவிற்கும் வருவது பாமரத்தனைமும், விஞ்ஞானமின்மையும் தான். ஆனால் நம் முன்னோர்கள் தங்கள் வாழ்கையில் பின்பற்றிய நுட்பங்களைப் பார்க்கும் போது அவர்களின் முன் இன்றைய அறிவியல் தோற்கிறது.

நம் முன்னோர்களின் பழக்கங்களையும் வாழ்க்கை முறையையும் அடிப்படையாகக் கொண்டு பல ஆராய்ச்சிகளை பல நாடுகளில் தொடர்ந்து மேற்கொள்கின்றனர். அவர்களின் இளமைக்கும் ஆரோக்கியத்திற்கு அவர்கள் பின்பற்றிய வாழ்வியல் முறையே காராணம் என்பதால். இதனாலேயே ஆரோக்கியம், வாழ்வியல், ஆன்மிகம் என பசுமையான கிராம வாழ்வு விரிகிறது.  

வாழ்கை முறையில் ஆரோக்கியதிற்கு என்ன செய்ய வேண்டும் என நம் பாட்டியும் தாத்தாவும் நன்றாகவே அறிந்திருந்தனர். அதிக படிப்பறிவு இல்லையானாலும் பகுத்தறிவும் உடல் ஞானமும் கொண்டிருந்தனர். அவ்வாறான ஞானத்தில் எளிதாக தயாரிக்கும் ஒரு உணவு உடலில் குடலுக்கு அரணாகிறது. அன்றைய வாழ்க்கை சுழலில் உருவான நீராகாரம் ஏற்படுத்திய ஆரோக்கிய வளமையை இன்றைய நவீன மருத்துவம் வியந்து பார்கிறது. சிறந்த உணவு என்று இன்றைய நவீன மருத்துவம் முன்வைக்கிற எல்லா ஊட்டச்சத்துக்களும் பெற்றிப்பதே இந்த நீராகாரத்தினை வியப்பதற்கு காரணம்.

palaya satham, neeragaram, fermented rice benefits and uses, traditional rice neeragaram, maapillai samba neeragaram

பழையது பல பெயர்கள்

பழங்கஞ்சி, பழஞ்சி, பழஞ்சாதம், பழைது, பழைதூண், நீராகாரம் என எத்தனை எத்தனை பெயர்கள் இதற்கு. காலங்கள் மாற காட்சிகளும் மாறியது. பெரும்பாலும் தமிழ் மக்களின் காலை உணவாக இருந்த நீராகாரம் காணாமல் போனது. நீராகாரம் அருந்தும் உணவு முறை காணாமல் போனதும் புதிய உணவை உண்ணக் கற்றுக்கொண்டோம். நமக்குள் வந்த புதிய உணவுகள் அழைத்து வந்தது நோய்களையும் குறைபாடுகளையும் தான். நீராகாரம் கொடுத்த ஆரோக்கியத்தை இன்று வரை எந்த ஒரு நவீன உணவுகளும் கொடுக்க வில்லை. 

எங்கே போனது பழஞ்சோறு?


அன்று இருந்த அரிசி, சமையல் பாத்திரங்கள் இன்று மாறியது… அரிசியின் உமிக்கு அடுத்ததாக இருந்த தவிடு, நார்ச்சத்து, வைட்டமின் சத்துக்களை பாலிஷ் என்ற பெயரில் நீக்கி வெறும் சக்கை மாவு பொருளை பளிச்சென்று முதலில் நகரங்களில் கௌரவம் என்ற பெயரின் விநியோகிக்க பட்ட பின் கிராமங்களிலும் இந்த நிலை தொடர்ந்தது.

பொருளாதார பிரச்சனை, தயாரிக்கும் முறையில் ஏற்பட்ட மாற்றம், நவீன விவசாயத்தில் பயன்படுத்தப்படும் பூச்சிகொல்லிகள் மற்றும் இரசாயன உரங்களாலும் குறைந்து போன தரம் போன்றவை அன்றைய பழஞ்சோற்றில் இல்லை. கௌரவம், நாகரிகம் என்ற பெயரால் தரம் குறைந்த பொருளை வாங்கும் நமது மனநிலை ஆரோக்கியமான பழஞ்சோற்றை காணாமல் போகச் செய்தது.

நம் முன்னோர்கள் பயன்படுத்திய பழஞ்சோற்றில் இருந்த தரம், மணம், சத்து இன்றைய அரிசியில் தயாராகும் பழஞ்சோற்றில் குறைந்தது. அரிசியின் தரம் குறைந்ததால் உடல் சோம்பலானது, ஊளைச் சதை பெருத்தது, தூக்கம் அதிகரித்தது. இவற்றை அறியாமல் நவீன அரிசியிலும் பலர் பழஞ்சோறு உண்ண நோய்களும் உடலின் பல வேதியல் மற்றும் இரசாயன மாற்றங்கள் ஏற்படுகிறது. ஆக அரிசியின் தரமும் தயாரிக்கும் முறையும் மாறியது தேவாமிர்தமான பழஞ்சோறு காணாமல் போனது. 

அப்படி என்ன தான் இருக்கிறது இந்த பழஞ்சோறில்?

பழஞ்சோறு என்பது அதிகமான அல்லது உண்டு மிச்சமுள்ள முதல் நாள் உணவை வீணாக்காமல் மறுநாள் உபயோகிப்பது இல்லை.

அதாவது இன்று நம்மவர்கள் பலர் எதையும் வீணாக்கக் கூடாது என்பதற்காக மிச்சமிருக்கும் அனைத்தையும் பத்திரமாக குளிர்சாதனப்பெட்டியில் (Fridge) சேமித்து மறுநாளைக்கு புது உணவாகவோ அல்லது சிறிது மேக்கப் செய்தோ பரிமாறுகின்றனரே அவ்வாறு இல்லை. இப்படி பிரிட்ஜில் வைத்து பரிமாறும் பழைய உணவுகளால் உடலுக்கு தீமையே உண்டாகிறது. உடல் ஜீரண தன்மையை இழக்கத் தொடங்குகிறது.    

பழைய உணவுகளால் தீமையே உண்டாகும் என்ற போதும் எவ்வாறு பழஞ்சோறு நன்மை பயக்கும் என்கின்றீர்களா?.. பிரிட்ஜில் வைக்கும் உணவுகளில் ஏற்படும் வேதியல் மாற்றங்களால் உடலில் ஜீரணம் கெடுவதோடு வயிறு உப்புசம், நெஞ்செரிச்சல், மலச்சிக்கல், வயிற்று புண் போன்றவை ஏற்படும்.

பழஞ்சோறு என்பது பட்டை தீட்டாத சம்பா அல்லது எதாவது பாரம்பரிய அரிசியில் செய்த சாதத்தில் தண்ணீர் ஊற்றி, இரவு முழுவதும் ஊறவிட அதில் நுண்ணுயிர்கள் (லாக்டிக் ஆசிட் பாக்டீரியா) பெருகுகிறது. குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் கோடிக்கணக்கில் பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைக்கிறது.

வைட்டமின் B6, B12 போன்றவை இந்த பழைய சாதத்தில் அதிகம் உருவாகிறது. புரதம் மற்றும் மாவுச் சத்து எளிதில் செரிக்கப்படும் தன்மை பெறுகிறது. ஓர் இரவு முழுவதும் ஊறுவதால், அதன் ஊட்டச் சத்துக்கள் மற்றும் அதில் உருவாகும் நுண்ணுயிர்களும் தான் இந்த சத்துக்குக் காரணம். எளிதில் செரிக்கப்படும் தன்மையைப் பெறுவதால் செரிமானத்துக்கும் நல்லது. ஊட்டச்சத்துகள் கரைந்திருப்பதால் இந்த நீராகாரம் உடலுக்கு வலுவைக் கொடுப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. 

பழஞ்சோற்றின் மருத்துவக் குணம்

பழஞ்சோறு அல்லது பழைய சாதம் உண்பதால் பலர் உடல் பருமன், எடை கூடுகிறது என்று கருதுகின்றனர். இது முற்றிலும் தவறான ஒரு கருத்து. சத்துக்கள் நீக்கப்பட்ட பட்டை தீட்டிய பாலிஷ் அரிசிகளில் பழைய சாதம் செய்து உண்பதே உடலுக்கு கேடு. வெறும் மாவு சத்து அதாவது ஸ்டார்ச்  மட்டும் அதிகம் கொண்ட அரிசியை ஊறவைத்து பழையது செய்து சாப்பிட்டால் தான் உடல் எடை கூடும். சோம்பலாக தூங்கும் குணமும் உடல் அசதி, வலி உள்ளவாறு ஒரு நோயாளியைப் போல் இருக்கச் செய்யும். காரணம் பட்டை தீட்டும் போது  தானியத்தின் உயிர் சக்தி உள்ள மூக்கு உடைவது..

ஆகா இவை  அனைத்தும் கொண்ட பட்டை தீட்டாதா நம் பாரம்பரிய அரிசிகளில் பழையது தயாரித்து தொடர்ந்து உண்பதால் மலச்சிக்கலைப் போக்கும், உடல் எடை குறையும், இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்,  உடல் களைப்பினைப் போக்கி சுறுசுறுப்பாக்கும். கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் உகந்த உணவு. வெயில் காலங்களில் வெப்பமான நமது உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கின்றது. 

அல்சர், வயிற்றுப்புண் போன்ற அஜீரணம் தொடர்புடைய நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் பழஞ்சோற்றுக்கு உள்ளது. என்னதான் புதிய புதிய உணவுகளை சமைத்து உண்டு வந்தாலும் நமது உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் இந்த பழஞ்சோற்றுக்கு நிகர் வேறில்லை. 

“ஆற்றுநீர் வாதம் போக்கும்; 
அருவி நீர் பித்தம் போக்கும்; 
சோற்று நீர் இரண்டையும் போக்கும்” 

என்கிறது ஒரு சித்தர் பாடல். 

அதாவது ஆற்று நீரிலும், அருவி நீரிலும் உயர்ந்த தாதுப் பொருட்களும், மூலிகைச் சத்துக்களும், நிறைந்து காணப்படுவதாக இப்பாடல் கூறுகிறது. ஆனால் ஆறும், அருவியும் இல்லாத ஊரில் உள்ள மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்ததுதான் இந்த சோற்றுநீர். இதனால் வாத நோய்களான பக்கவாதம் கைகால் அசதி, முடக்குவாதம் மற்றும் பித்த நோய்களான வயிற்றுப்புண், இரத்த மூலம், சரும நோய்கள் வராது.

அத்துடன் கோடைக்கால பாதிப்புகளான வயிற்றுவலி, சருமத்தில் தோன்றும் வேனல் கட்டி, வேர்க்குரு, தேக அனல் ஆகியன வராது காக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது.

பழஞ்சோறு எவ்வாறு தயாரிப்பது?

  • எளிதில் சமையல் மட்டுமல்லாது நம் ஆரோக்கிய வாழ்வையும் முடிவிற்கு கொண்டு வரும் நவீன குக்கர் பயன்படுத்தாதது சிறந்தது.
  • மின் சாதனங்கள் அல்லது மின்சார அடுப்பு இல்லாது இருப்பது சிறந்தது.
  • எந்த செலவும் இல்லாமல் இழந்த உடலை எளிதாக திரும்பப் பெற சிறந்த சமையல் பாத்திரம் மண்பாண்டம்.
  • மண்சட்டியை அன்றாடம் பயன்படுத்தும் காஸ் அடுப்பில் வைத்து நீர் ஊற்றி முதலில் கொதி நிலை வரும் வரை கொதிக்க விடவும்.
  • நீர் கொதிக்க தொடங்கும் நேரத்தில் ஏதேனும் பாரம்பரிய அரிசியை (கருங்குறுவை, காட்டுயானம், பூங்கார், மாப்பிள்ளை சம்பா போன்ற வகைகள் பயன்படுத்தலாம்) நீருடன் சேர்த்து வேகவிடவும்.
  • வெந்ததும் கஞ்சியை வடித்து தனியாக எடுத்து வைக்கவும்.
  • தேவையான உணவை வேண்டுமானால் உண்ணலாம் அல்லது சாதம் சற்று ஆறியவுடன் சிறிது வடித்த கஞ்சியுடன் நீர் சேர்த்து வைக்கவும்.
  • மறுநாள் காலை பிரமாதமான மணத்துடன் நீராகாரம் தயார். இதன் தண்ணீரை மட்டும் எடுத்து காலையில் பருகலாம் அல்லது நன்கு பிசைந்து சின்ன வெங்காயத்துடன் அருந்துவது சிறந்தது.
  • ஏதேனும் கூட்டு, துவையல் அல்லது காய்கறி சேர்த்து உண்ணலாம்.
  • சுவைக்காக பசும் மோர் சேர்க்கலாம், பசும் மோர் கிடைக்காத பட்சத்தில் தேங்காய்ப்பால் மோர் கலந்து சிறிது உப்புடன், இஞ்சி, கொத்தமல்லி, கருவேப்பிலை கலந்து பருகலாம்.
  • முதல் நாள் தயாரிக்கும் பழஞ்சாதம் மறு நாள் மதியத்திற்குள் உண்பது உகந்தது.  

உடல் உபாதைகளை நீக்கி ஆரோக்கிய வாழ்வைப் பெற்றுக்கொள்ள நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான செயல் நம் உணவு முறையை சீரமைப்பது. உடல் சொல்வதைக் கேட்டு உணவை வடிவமைத்த நம் முன்னோர்களின் அறிவுத்திறனில் உருவான உணவுகளை மறந்து நம் மனம் சொல்லும் வண்ண உணவுகளை கேள்விகேட்கும் தருணமிது.

நம் உணவு நம் ஆரோக்கியம். நம் ஆரோக்கியமே நமது செல்வம். திரைகடல் ஓடி திரவியம் தேடும் நாம், நம் வீடு உணவு ரகசியத்தை பரிமாறிக் கொள்வோம். பரிமாறிக் கொண்டதை தொடர்ந்து பயன்படுத்துவோம். எளிதில் பயன்படுத்தக் கூடிய வகையில் வரும் இந்த திரவ உணவு எல்லா வயதினருக்கும் ஏற்றது.

காலையில் அவசர அவசரமாக அலுவலகம், பள்ளி, கல்லூரி செல்பவர்கள் பலர் நேரமின்மை காரணமாக காலை உணவை தவிர்ப்பது உடலுக்கு நல்லதல்ல என்று தெரிந்திருந்தாலும் என்ன செய்வது அவசரம் என்ற நிலைக்கு ஏற்ற திரவ உணவு இந்த நீராகாரம். நேரமின்மையால் காய்களை முதல் நாளே நறுக்கி வைப்பதை இனி தவிர்த்து விட்டு இந்த நீராகரத்தை தயாரித்து வைப்போம். மறுநாள் எந்த அவசரமும் இன்றி பருகுவோம்.

மாப்பிள்ளை சம்பா அரிசியில் பழையது / நீராகாரம் எப்படி செய்வது என்பதை இந்த காணொளியில் பார்க்கலாம்.

(4 votes)