மூலிகை பூச்சி விரட்டி

செடி, மரங்கள் மற்றும் பயிர்களில் தாக்கத்தை ஏற்படும் பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த மூலிகைகள் மற்றும் தாவரங்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் பூச்சி விரட்டியை இயற்கை அல்லது மூலிகை பூச்சிவிரட்டி என்று அழைக்கப்படுகிறது. இரசாயனப் பூச்சி கொல்லிகளுக்கு மாற்றாகப் இயற்கை விவசாயத்தில் இதனை பயன்படுத்துவதன் மூலம் உணவு நஞ்சாவதை தடுப்பதுடன் சுற்றுச் சுழலும் மாசுபடாமல் பாதுகாக்கலாம்.

இயற்கையில் இரண்டு வகையான பூச்சிகள் உள்ளன. ஒருவகை தாவரத்தை உண்டு விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தும் தீமை செய்யும் பூச்சிகள். இரண்டாவது வகை தாவரங்களுக்கு தீங்க விளைவிக்கும் பூச்சிகளை உண்டு தாவரங்களின் வளர்ச்சியைப் பாதுகாக்கும் பூச்சிகள் அல்லது நன்மை செய்யும் பூச்சிகள்.

பொதுவாக இரசாயனங்களைக் கொண்டு தெளிக்கப்படும் பூச்சி கொல்லிகள் பயிர்களில் படருவதால் இந்த இரண்டு வகை பூச்சிகளையும் அது அழிக்கிறது. இதனால் விளைச்சல் பாதிக்கப்படுவதுடன் விளைபொருளும் நஞ்சாகிறது.

இந்த இயற்கை மூலிகை பூச்சி விரட்டியோ தீமை செய்யும் பூச்சிகளை விரட்டுவதுடன் நன்மை செய்யும் பூச்சிகளையும் சுற்றுசூழலையும் பாதுகாக்கிறது.

இந்த இயற்கை மூலிகை பூச்சி விரட்டி செய்ய தேவையான பொருட்கள்

இவை ஒரு ஏக்கருக்கு தேவையான அளவு
  • சோற்றுக்கற்றாழை – 1/2 கிலோ
  • வேம்பு – 1/2 கிலோ
  • ஆடா தோடா – 1/2 கிலோ
  • எருக்கு – 1/2 கிலோ
  • அரளி – 1/2 கிலோ
  • நொச்சி – 1/2 கிலோ
  • காட்டாமணக்கு – 1/2 கிலோ
  • நெய்வேலி காட்டாமணக்கு- 1/2 கிலோ
  • குமிட்டிக்காய் – 1/2 கிலோ
  • ஊமத்தை – 1/2 கிலோ
  • பீச்சங்கு – 1/2 கிலோ
  • சப்பாத்திக் கள்ளி – 1/2 கிலோ
  • மாட்டு கோ மூத்திரம்
  • மாட்டு சாணம் – 1 கிலோ
  • மஞ்சள் தூள் – 1/4 கிலோ

இதில் குறிப்பிட்டுள்ள தாவரங்களில் / மூலிகைகளில் குறைந்தது 5 வகை தாவரத்தின் இலை தழைகளை எடுத்து முதலில் சிறு சிறு துண்டுகாளக நறுக்கிக் கொள்ளவேண்டும். பின் அவற்றை உரலில் இட்டு நன்றாக மைய இடித்துக் கொள்ளவேண்டும்.

மைய இடித்துக்கொண்ட இந்த இலை தழைகளை 15 லிட்டர் மாட்டு கோ மூத்திரத்தில் ஊற வைத்து, பின்னர் மஞ்சள் தூள் 250 கிராம், ஒரு கிலோ மாட்டு சாணம் கலந்து 15 நாட்கள் நொதிக்க விட வேண்டும்.

பதினைந்து நாட்களுக்குப் பின் இந்த கரைசலை வடிகட்டி எடுத்துக்கொண்டு தெளிவான கரைசலை பயிர்களுக்கு தெளிக்கப் பயன்படுத்தலாம்.

மூலிகை பூச்சி விரட்டி பயன்படுத்தும் முறை

பத்து லிட்டர் நீருக்க 500 மி.லிட்டர் பூச்சி விரட்டியை கலந்து இலைவழி ஊட்டமாக தெளிக்க பயிர்களுக்கு தெளிக்கலாம்.

மூலிகை பூச்சி விரட்டி கரைசல் தயாரிக்க இலைகளை தேர்வு செய்யும் முறை

  • கசப்பு சுவையுடன் இருக்க வேண்டும். (உ.தா) வேம்பு, சோற்றக்கற்றாழை, குமிட்டிக்காய்
  • இலைகளை ஒடித்தால் பால் வரும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். (உ.தா) எருக்கு, காட்டமணக்கு
  • ஆடு, மாடு உண்ணாத இலை தழைக்ள். (உ.தா) ஆடாதோடை, நொச்சி, ஆடுதிண்ணா பாலை, சப்பாத்திக்கள்ளி, அரளி
  • துர்நாற்றம் வீசும் இலை தழைகள். (உ.தா) பீச்சங்கு, சீதா, பீநாரி, ஊமத்தை

மூலிகை பூச்சி விரட்டி பயன்கள்

  • அருகிலிருக்கும் மூலிகைகள், தாவரங்களைக் கொண்டு எளிதில் பெரிதாக எந்த செலவுமின்றி குறைவான முதலீட்டில் தயாரிக்கலாம்.
  • தானியங்கள், காய்கறிகள் மற்றும் பழங்களில் நச்சுக்களை ஏற்படுத்தாது.
  • இயற்கையான முறையில் பூச்சிகளை விரட்டக்கூடியது.
  • இந்த மூலிகை பூச்சி விரட்டி கரைசல் பூச்சிவிரட்டியாகவும், பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும், நோய் தடுப்பானாகவும் செயல்படுகின்றது.
(5 votes)