Cow, Desi Cow, Paal, Pasum paal, A2 Cow Milk, A2 Milk, Nattu mattu paal, desi cow milk, cow milk

பால் – சத்தான பானமா?

சத்துள்ள உணவுகளின் பட்டியலில் ஒரு முக்கியமான இடத்தில் இருக்கும் பால் இன்று உண்மையிலேயே சத்தான பானமாக  உள்ளதா? அல்லது பல ஆபத்துக்களை விளைவிக்கும் காரணியாக உள்ளதா?

பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதர்களுக்கு பரிச்சியமான பாலில் மட்டும் இன்று கலப்படமில்லை, பாலினை அளிக்கும் மாடே கலப்படமாய்விட்டது.

ஆட்டுப் பால், கழுதைப் பால், யானைப் பால், குதிரைப் பால், எருமைப் பால், தேங்காய்ப் பால், கடலைப் பால், கேழ்வரகுப் பால் என பலவகையான பால் நமது வழக்கத்தில் இருந்தாலும் பசுவின் பாலிற்கு தனி மகத்துவம் உள்ளது. பசுவின் பால் தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக பார்க்கப்படும் பால்.

 

A2 Cow Milk, Desi Cow Milk, paal

பலவகையான பால் நமக்கு அளிக்கும் நன்மைகள் பல

பசுவின் பாலினை பிறந்த குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை யாவரும் எந்த வித நோயினாலும் பாதிக்கப்பட்டவரும் பருக அவர்களுக்கு நல்ல ஆரோக்கியமும், உடல் பலமும் கிட்டும். அதிலும் வெண்மை, செம்மை, கருமை நிற பசுக்களுக்கும் தனித்தனியான குணங்கள் உண்டு. அதிலும் காரம் பசுவின் பால் பலவகையான நோய்களை தீர்க்கும் மாமருந்து. இரத்த சம்பந்தமான நோய்களுக்கு நிவாரணம் தரும்.

ஆட்டுப்பால்

ஆட்டுப்பால் பல விதங்களில் நமக்கு நன்மையையும் எளிதில் ஜீரணமாகும் தன்மையினையும் பெற்றுள்ளது. குழந்தைகள் முதல் அனைவருக்கும் ஏற்ற இந்த ஆட்டுப்பாலினை அருந்துவதால் உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கிறது.

யானைப்பால்

யானைப் பாலினை அருந்துவதால் வாத நோய்கள் நீங்கும்.

கழுதைப்பால்

அனைவரும் அருந்த கழுதைப்பால் ஏற்றதல்ல என்றாலும் சில நோய்களுக்கு மருந்தாகவும் இந்த பால் உள்ளது.

எருமைப்பால்

பலரால் அதிகம் உட்கொள்ளப்படும் எருமைப்பால் மந்தத்தை தரக்கூடியது. 

தேங்காய்ப்பால்

எலும்புகளுக்கும், தசைகளுக்கும் வலு சேர்க்கும் தேங்காய்ப் பால் வளரும் குழந்தைகளுக்கு பல தாதுக்கள் கொண்ட சிறந்த பால்.

நிலக்கடலைப் பால்

நிலக்கடலைப் பால் பலப்பல தாதுக்களையும், வைட்டமின்களையும் உள்ளடக்கியது. சுவையான இந்த பாலினை பருக உடல் வலிமை பெறும்.

கேழ்வரகு பால்

கேழ்வரகு பாலைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை, காரணம் அதிக சுண்ணாம்பு சத்துக்களை கொண்ட சிறந்த பால் இது. பிறந்த குழந்தையின் முதல் வெளி உணவும் இதுவே. எலும்புகளுக்கு பலம் சேர்க்கும் இந்த பாலினை அருந்தி வர மூட்டு வலிகளும், எலும்பு தேய்மானமும் காணாமல் போகும்.

இப்படி பல பல பால் வகைகள் நம்முடன் புழக்கத்தில் இருந்த போதும் இவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு எந்த பாலைக் குடிக்கிறோம் என்று கூட தெரியாமல் தினமும் காலையும் மாலையும் மணி அடித்தாற்போல் தவறாமல் அருந்துகிறோம். காபி, டீ, சத்து பானங்கள், மில்க் ஷேக்  என பல ரூபத்திலும் பாலினை அருந்துகிறோம். இவையெல்லாம் உண்மையிலேயே உடலுக்கு ஏற்புடையதா என்று சிந்தித்ததும் இல்லை, ஆராய்ந்தும் இல்லை. காரணம் நாமென்ன இன்று நேற்றா பாலினை அருந்துகிறோம் காலம் காலமாக பால் நமது உணவுடன் கலந்த ஒன்று என்ற நினைப்பு. 

இன்றைய பாலின் நிலை

நினைப்பெல்லாம் சரிதான், ஆனால் பால் என்ற பெயரில் வரும் பானத்தில் தான் பிரச்சனையே தொடங்குகிறது. நமது முன்னோர்கள் அருந்திய பால் வீட்டினிலே வளர்த்த நாட்டுப் பசுவின் பால். நாம் இன்று அருந்துவது யூரியா, சோப்புத்தூள், கொழுப்பு, மாவுகள், இரசாயனங்கள் கலந்த ஒரு திரவம். இதில் பாலும் கலந்துள்ளது என்பதற்காக உண்மையிலேயே பால் என்றாகிவிடும் இந்த கலவை?

இந்த பாலிற்கும் நமது முன்னோர்கள் அருந்திய பாலுக்கும் சம்மந்தமே இல்லை..

யூரியா, சோப்புத்தூள், கொழுப்பு, மாவுகள், இரசாயனங்கள் கலந்த இந்த திரவத்தினால் உடலுக்கு பல உபாதைகளும், செரிமான தொந்தரவுகளும் ஏற்படுகிறது ஆனால் இன்றைய பிரச்சனைகள் இந்த பால் மட்டுமல்ல. பாலினைக் கொடுக்கும் மாட்டினிலுமே தான். 

A1 பால், A2 பால்

வெளிநாடுகளில் பாலினை மாட்டில் இருக்கும் ஒரு வகை புரதமான A1, A2 என்பதை வைத்து பிரிக்கின்றனர். A1 பால், A2 பால் என்று அவை விற்பனைக்கு வருகிறது.

அதாவது ஆசிய இன மாடுகள் குறிப்பாக இந்திய மாடுகள் அனைத்தும் A2 என்ற புரத அமைப்பைக் கொண்ட பசு மாடுகள், ஐரோப்பா இன மாடுகள் A1 புரதத்தைக் கொண்ட மாடுகள்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயற்கையாக மரபணுவில் ஏற்பட்ட மாற்றத்தினால் இந்த ஐரோப்பா மாடுகளில் இந்த வகை A1 பீட்டா-கேசின் புரதம் உருவானது. A1 ரக மாடுகள் அதாவது அயல் நாடு மாடுகள் அல்லது சீமை மாடுகளில் இருக்கும் இந்த வகை புரதம் மனித உடலில் செரிக்கப்படும் பொழுது BCM7 ( பீட்டா-காசோமொபின் 7) என்று வேதியல் மாற்றத்தை ஏற்படுத்துகிறது..  இந்த BCM7 தான் எ1 ரக பாலினை அருந்துபவர்களுக்கு பல பேராபத்தையும் உயிர் கொல்லியான புற்றுநோயையும் உருவாக்குகிறது.

இன்று பால் உற்பத்திக்காக என்று  வெளிநாடுகளில் இருந்து நமது நாட்டிற்கு இறக்குமதியான இந்த A1 இன மாடுகள் தான் இன்று நமது வீதிகளில் பசு என்ற பெயரில் உலவுகிறது. இவற்றின் பாலினை அருந்த பலவகையான உடல் தொந்தரவுகளால் பச்சிளம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் காரணம் தெரியாமல் பாதிக்கப்படுகின்றனர்.


நமது A2 இன நாட்டு மாடுகள் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் மருந்தாகவும், உணவாகவும் செயல்பட்டது, ஆனால் அளவான பாலினைக் கொடுக்கும் நமது நாட்டு இன பசுக்கள் இன்று காணாமல் போய்விட்டது.

நாட்டு இன பசுக்கள்

காங்கேயம் பசு, புங்கனூர் குட்டை, ஆலம்பாடி, உம்பளச்சேரி, பெரம்பலூர் மொட்டை, தொண்டை மாடு, துரிஞ்சல் இலை, பர்கூர் செம்மரை, பாலமலை மாடு, மணப்பாறை பசு போன்ற மாடுகளின் பால் புற்றுநோயையும் போக்கக்கூடிய தன்மையை கொண்டது. 

A2 பால் எங்கு கிடைக்கும்

அதெல்லாம் சரி, இந்த A2 பால் எங்கு கிடைக்கும் என்கிறீர்களா? நமது நாட்டு மாடுகள் எங்கு இருக்கிறதோ அங்கு கிடைக்கும். நமது முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக பாதுகாத்த நமது நாட்டு இன மாடுகளை நாம் இன்று தொலைத்து விட்டு எங்கு கிடைக்கும் என்கிறோம்.

தொலைத்தவர்களுக்கு தானே தெரியும் எங்கு எப்படி அவற்றை மீட்டெடுப்பது என்று. இன்றும் பலர் நகரங்களிலும் கிராமங்களிலும் அவற்றை பாதுகாக்கின்றனர்.

மருந்தாக வேலை செய்யும் நாட்டு மாடுகளில் பால் கிடைக்கும் பட்சத்தில் அவற்றுடன் சமபங்கு தண்ணீர் கலந்து அருந்த வேண்டும். கிடைக்காத நிலையில் வரும் சமுதாயத்திற்க்காக அவற்றை மீட்டெடுக்கும் முயற்சியை செய்து நமது குழந்தைகளுக்கு அந்த மாமருந்தை வரும் காலங்களில் அளிக்கலாம். நமது நாட்டு மாடுகளை இந்த A2 புரதத்தின் காரணமாக நம்மிடம் இருந்து அபகரித்து பல வெளிநாடுகளும், அயல்நாட்டு  நிறுவனங்களும் பாதுகாத்து வருகிறது.

A2 பசுவின் பால் விற்பனைக்கு கிடைக்காத இன்றைய சூழலில் பாக்கெட் பாலினைக் கொடுத்து நமது குழந்தைகளின் ஆரோக்கியத்தை சீர்கெடுக்காமல் தானியப்பாலினையும், கொட்டை பருப்பு பாலையும் கொடுக்கலாம். 

இவையும் பால் தான்

தேங்காயை நன்கு அரைத்து அதன் பாலையும், நிலக்கடலை, கேழ்வரகு போன்றவற்றை முளைகட்டி அதனை நன்கு அரைத்து பால் எடுத்து சிறிது நாட்டு சர்க்கரை கலந்து நமது குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். 


ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கும் பாக்கெட் பால், சீமை மாட்டு பால், கலப்பின பால் (அறியாமையில் பசும் பால் என்றும் இவற்றை அழைக்கின்றனர்) போன்றவற்றிற்கு சிறந்த மாற்றாக இந்தப் தானியப்பாலும் தேங்காய்ப்பாலும் இருக்கும். 

பசும் பாலுக்கு நாமே வீட்டில் பசுவை வளர்க்க வேண்டுமென்பதில்லை, நமக்கு அருகில் இருக்கும் மாடு வளர்ப்பவரிடம் நமக்கென்று ஒரு பசுவையும், அதற்கான செலவுத் தொகையையும் கொடுக்க நிச்சயம் நமக்கான உண்மையான A2 பாலை தினமும் கொடுப்பர். நகரத்திலும் இது சாத்தியம் தான். நகரத்தை சுற்றி இருக்கும் கிராமங்களில் இருப்பவர்களிடம் நமக்கான இந்த உதவியை பெறலாம். யாரைப் போய் கேட்பது என்கிறீர்களா? நேரடியாக நமக்கு அருகாமையில் இருக்கும் கிராமத்திற்கு சென்று யாராவது ஒருவரை உதவி கேளுங்கள்.. நிச்சயம் ஒரு வழி பிறக்கும். தேவையில்லாமல் எவ்வளவோ செலவுகளை செய்யும் நாம் தேவையான இதனை செய்ய நமது குடும்பமும், நாடும் செழிக்கும்.

(1 vote)