இயற்கை உரம் – மாடித்தோட்டத்திற்கு தயாரிக்கும் முறை

வீட்டில் இருக்கும் ஏதானும் ஒரு மூலையில் தனியாக உரத்தினை எவ்வாறு தயாரிப்பது என பார்ப்போம். இந்த உரத்தை எல்லா செடிகளுக்கும் அவ்வப்பொழுது பயன்படுத்தலாம்.

This image has an empty alt attribute; its file name is kitchen-waste-compost-easy-way-kitchen-waste-compost-in-tamil-iyarkai-uram-tayarippu-murai-veetu-kalivu-uram-kuppai-uram-vegetable-waste-fertilizer-organic-fertilizer-500x305.jpg

சமைத்த உணவுகளைத்தவிர காய்கறி கழிவுகள், பழத்தோல்கள், முட்டையோடுகள், காபி, டீ டிகாஷன், தேங்காய் நார்கள், கரும்பு சக்கைகள், மரத்தூள்கள், காகிதங்கள் என மக்கும் தன்மைகொண்ட பொருட்களை முதலில் சிறிதாக நறுக்கிவைத்துக் கொள்ளவும். அவற்றுடன் காய்ந்த இலைதழை சருகுகளை எடுத்துவைத்துக் கொள்ளவும். (நகரங்கள் முதல் கிராமங்கள் வரை அனைத்து இடங்களிலும் காய்ந்த இலைகளை தெருக்களில் பார்க்கலாம்).

ஏதேனும் பெரிய  மண்சட்டி, தொட்டி அல்லது தேவையற்ற பிளாஸ்டிக்  வாளி போன்றவற்றை பயன்படுத்தலாம். மண்சட்டிகள் என்றால் அவற்றின் அடியில் தூளை இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.

பிளாஸ்டிக் வாளி என்ற அவற்றில் அடியில் முன்று துளைகளை இடல் வேண்டும். பின் வாலியின் கைப்பிடிக்கு அருகில் மூன்று இடங்களில் மூன்று துளைகளை இடவேண்டும். முதலில் காய்ந்த இலைதழை சருகுகளையோ அல்லது ஏதேனும் மண்ணையோ மூன்று அங்குலத்துக்கு பரப்பவும். பின் அவற்றில் சிறிதாக்கப்பட்ட வீட்டுக்கழிவுகளை சேர்க்கவும். மீண்டும் அதன் மேல் மண் அல்லது காய்ந்த இலை தழைகளை சேர்க்கவும்.

இவ்வாறு தினமும் சேர்த்துக்கொண்டே வரவேண்டும். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அவற்றில் சிறிது சாணி தண்ணீர் அல்லது மோரை தெளிக்கவும். கிடைத்தால் மாட்டுச்சாண தூளையும் (வறட்டி தூள்) ஒரு ஸ்பூன் அளவிற்கு சேர்க்கவும். இந்த கலவையை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை லேசாக பிரட்டிவிடலாம் அல்லது ஒரு குச்சிவைத்துக்கொண்டு குத்தி விடலாம். இவற்றிற்கு காற்று மிக அவசியம். அதேபோல் ஈரப்பதமும் (அதிகம் தண்ணீர் இருக்கக்கூடாது) சீராக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். 

காற்று, நீர் (ஈரப்பதம்) இவை இரண்டும் இருந்தால் மட்டுமே இந்த கழிவுகள் விரைவில் மக்கும். மக்குவது அல்லது மக்கு உரம் என்பது நுண்ணுயிர்களால் இயற்கையில் கிடைக்கும் அந்த பொருள் உருமாறுவது. சீரான காற்றோட்டம் இல்லையானால் இந்த கழிவுகள் மக்காமல் அழுகும். இதனால் துர்நாற்றம் ஏற்படுவதுடன், பூச்சிகள், கொசுக்கள் வரும். அதேபோல் ஈரப்பதம் இல்லையானால் அவை உலர்ந்து போகும்  நுண்ணுர்கள் அதில் வாழ முடியாது. அதிக தண்ணீர் இருந்தாலும் அழுகிவிடும். இவற்றை சமன் செய்யவே வெங்காயம், பூண்டு போன்ற காய்ந்த தோல்களும், காய்ந்த இலைதழை சருகுகளும் சேர்க்கப்படுவதுடன் அவ்வப்பொழுது பிரட்டியும் விடவேண்டும். 

இந்த பொருட்களையெல்லாம் கொண்டு அந்த தொட்டியை அன்றாடம் நிரம்ப, தொட்டியின் கொள்ளளவைப் பொறுத்து சுமார் இருபது நாட்களுக்குப் பின் (அதன் முழு கொள்ளளவு நிறைந்த பின்) ஒரு ஓரமாக இதனை எடுத்து வைத்து விட வேண்டும். ஒரு அட்டையைக்கொண்டு மூடிவைக்க வேண்டும். தினமும் ஒருமுறையேனும் திறந்து பார்ப்பதும், ஈரப்பதம் இருக்குமாறும் பார்த்தும் கொள்ளவேண்டும். ஒரு மாதத்தில் கருப்பு நிறத்தில் மக்கிய உரம், நல்ல மண் மணத்துடன் தயராக இருக்கும். இதனை வாரம் ஒருமுறை நமது செடிகளுக்கு ஒரு கையளவு சேர்க்கலாம்.

இந்த உர தயாரிப்பு முறைகளில் கவனிக்கவேண்டியவை:

  • ஈரமாக இருக்கும் கழிவுகளும் அதற்கேற்ப காய்ந்த இலைதழைகள், காய்ந்த தோல்கள் அவசியம் தேவை. இவற்றை சாண்ட்விச் போல் ஒன்று மற்றொன்று என மாறிமாறி சேர்க்கவேண்டும்.
  • முடிந்தவரை சிறுசிறு துண்டுகளாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். 
  • வாழைப்பழம், டிகாஷன், முட்டையோடுகள், சாணி தூள் போன்றவற்றை சேர்க்க விரைவாக நல்ல பலன்கிடைக்கும்.

இந்த முறையை பின்பற்றி  நமது வீட்டு கழிவுகளை உரமாக்கி நமது செடிகளுக்கு எந்த செலவும் இல்லாமல் உரத்தையளிப்போம். நாம், நமது குடும்பம், நமது நாடு… குப்பைகளை பயனுள்ள உரமாக்குவதால் செழிக்கும். 

இயற்கை உரம்
இயற்கை உரம் – தொட்டியில் தயாரிக்கும் முறை
மண்ணில் இயற்கை உரம் தயாரிக்கும் முறை