கற்பூரவள்ளி – நம் மூலிகை அறிவோம்

Anisochilus carnosus; கற்பூரவல்லி

தமிழகத்தில் பொதுவாக நிறைய வீடுகளில் வளர்க்க கூடிய ஒரு மூலிகை தாவரம் இந்த கற்பூரவள்ளி / கற்பூரவல்லி. இதனை பல இடங்களில் ஓமவல்லி என்றும் குறிப்பிடுவதுண்டு. பலவிதமான மருத்துவ குணங்களை கொண்ட ஒரு அற்புதமான மூலிகை.

பல வீடுகளில் இந்த கற்பூரவள்ளியை தொட்டியிலும் தரையிலும் கூட வளர்ப்பார்கள். இது சிறு செடியாக இருக்கும். இதன் தண்டு எளிதில் உடையும் தன்மை வாய்ந்தது. இதனை மிகவும் எளிமையாக வளர்க்க முடியும். இதன் தண்டுகளை உடைத்த மண்ணில் வைத்தாலே போதும். நன்கு செழித்து வளரக்கூடியது.

இது ஒரு சில கிளைகளுடன் சில சென்டிமீட்டர் உயரம் வளரும் தன்மை கொண்டது. இதன் இலைகள் வெற்றிலை வடிவத்தில் அகலமாகவும் நீளமாகவும் வளரக்கூடியது. இலைகள் தடிமனாக இருக்கக்கூடியது. சதைப்பற்றுள்ள நல்ல மணமான எதிர் அடுக்குகளில் அமைந்த இலைகளைக் கொண்ட மூலிகை குறுஞ்செடி இது. இதனுடைய இலைகளே மருத்துவப் பயனுடையது.

ஓமவல்லி இலையின் மேலும் கீழும் நுண்ணிய துணை இலைகள் படர்ந்திருக்கும். இந்த இலையைக் கசக்கினால் அது கற்பூர வாசனையை கொடுக்கும். அதனாலேயே இதனை கற்பூரவள்ளி என்றும் ஓமவள்ளி என்றும் அழைப்பதுண்டு. இதன் இலைகள் கசப்பு கார சுவையை கொண்டது. வியர்வையை பெருக்க கூடியதாகவும்ம், கோழையை அகற்றி காய்ச்சலைத் தணிக்கக் கூடிய மருந்தாகவும் கற்பூரவள்ளி இலை பயன்படுகிறது.

நெஞ்சுத் தடுமன் குணமாக

இந்த இலையைக் கொண்டு வந்து கசக்கிச் சாறு எடுத்து 2 தேக்கரண்டியளவு சாற்றுடன் தேக்கரண்டி அளவு ஒரு தேக்கரண்டி அளவு தேன் கலந்து காலை மாலை மூன்று வேளை பருக நெஞ்சுத் தடிமன் குணமாகும்.

தலைவலி

தலைவலிக்கு ஒரு அற்புதமான மருந்து இந்த கற்பூரவள்ளி இலை. தலைவலி தோன்றிய நேரத்தில் கற்பூரவள்ளி இலையை உள்ளங்கையில் வைத்து கசக்கி சாறு எடுத்து அந்த சாற்றைப் பொட்டில் கனமாகப் பூசி வைத்தால் தலைவலி நீங்கும்.

சீதள இருமல் தீர

கற்பூரவள்ளி இலைச் சாற்றை இனிப்பு சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்க சீதள இருமல் தீரும்.

தலைவலி, உடல் சூடு நீங்க

கற்பூரவல்லி இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து நெற்றியில் பற்று போட்டால் தலைவலி நீங்கும், உடல் சூட்டைத் தணிக்கும்.

கற்பூரவல்லி குடிநீர்

கற்பூரவல்லி இலை காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல் சளி காய்ச்சல் நீங்கும்.

இந்த கற்பூரவள்ளி இலைகளை உணவாக அவ்வப்பொழுது செய்து உட்கொள்ள நல்ல ஒரு ஆரோக்கியத்தை பெறமுடியும். சுவாச மண்டலத்தில் வரக்கூடிய பிரச்சனைகளும் அகலும். உடலில் தேங்கி இருக்கும் கழிவுகளும் வெளியேறும். கற்பூரவள்ளி இலையை கொண்டு சூப் அதாவது கற்பூரவள்ளி சூப் செய்து சாப்பிடலாம் அல்லது கற்பூரவள்ளி இலைகளை கொண்டு கற்பூரவள்ளி இலை சட்னி செய்து உண்ணலாம்.

பொதுவாக வெளிநாடுகளில் அதிகம் பயன்படுத்தக் கூடிய oregano (பிட்சாவின் மேல் இதனையும் தூவுவதுண்டு) என்று சொல்லக்கூடிய மூலிகை தாவரத்தின் சுவையையும் மணத்தையும் ஒத்து இருக்கக்கூடிய மூலிகை இந்த கற்பூரவள்ளி.

சுவாசம் சார்ந்த பிரச்சனைகள், சளி, இருமல் போன்ற தொந்தரவுகளுக்கு ஒரு அற்புதமான மருந்து. வாதக்கடுப்பு, நீர்க்கோவை, காசம் முதலியவற்றிற்கு இதன் சாற்றை அருந்தி பயன்பெறலாம். அம்மைக் கொப்புளங்களைச் சாந்தப்படுத்தித் தணிக்கும் இயல்பும் இதற்கு உண்டு. புகைந்து புகைந்து தோன்றும் இருமலுக்கும் இது சிறந்த ஒரு மருந்து.