தூதுவளை செடி வளர்க்கலாம் வாங்க

தூதுவளை செடியினை நமது வீடுகளில் வளர்க்கலாம் வாங்க…

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவர்க்கும் பயன்படும் ஒரு மூலிகை செடிதான் இந்த தூதுவளை. ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் இருக்கவேண்டிய ஒன்று. இதன் இலை, காய், வேர் என அனைத்தும் மருத்துவகுணங்கள் கொண்டது. பல நோய்களுக்கு ஆதாரமாக இருக்கும் சளி, இருமல் போன்றவைகளுக்கு சிறந்த மருந்தாக இருப்பது நமது தூதுவளை இலைகள். ஒரு நோயை ஆரம்பத்திலேயே வளரவிடாமல் கட்டுப்படுத்த இந்த மூலிகை பேருதவியாக இருக்கும். குழந்தைகள் அன்றாடம் ஒரு இலையினை சிறிது பொட்டுக்கடலை வைத்து மடித்து விளையாட்டாக (முள் குத்தாமல் எடுத்துவிட்டு மடிக்கவும்) உண்டுவர நோய்கள் இருந்த இடம் தெரியாமல் மறையும், பெரியவர்களுக்கு பல பல மூச்சுசம்பந்தமான நோய்கள் காணாமல் போகும். 

தூதுவளை தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் வேலிகளிலும், புதர்களிலும் செழித்து வளரும் ஒரு மூலிகை, இதன் காய்களில் இருக்கும் விதைகளைக்கொண்டோ அல்லது ஒரு சிறு பகுதியையோ (குச்சி) ஒடித்து நட்டு வைத்தாலே போதும் எளிதாக அந்த மண்ணில் வேர்விட்டு வளரக்கூடியது.

தூதுவளை குச்சியினை கொண்டுவந்து அதனை ஒன்றிற்கு பத்து என்ற விகிதத்தில் பஞ்சகாவ்யா அல்லது அமிர்த கரைசல் அல்லது பசுஞ் சாண நீரில் அரைமணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பின் ஒரு சிறு தொட்டியில் மண்புழு உரம் கொண்ட மண் கலவையை நிரப்பிய அதனில் ஊறிய குச்சியை (ஊறிய பாகத்தை) நட வேண்டும். பின் அந்த தொட்டியில் நீரூற்றி வைக்கவும். ஒவ்வொரு நாளும் தேவைக்கேற்ப ஈரப்பதத்தை பொறுத்து நீர் ஊற்ற வேண்டும்.

மூன்றுவாரத்திற்கு பின் லேசாக இலைகள் துளிர்த்த பின் அதனை வேறொரு பெரிய மண் கலந்த தொட்டிக்கு அப்படியே உரத்துடன் மாற்றவேண்டும்.

வீட்டில் தேவையில்லாத உடைந்த பக்கெட்டுகள், தண்ணீர் கேன்கள் போன்றவற்றில் ஏதேனும் ஒன்ற தயாராக எடுத்துக் கொள்ளவும். தூதுவளை வளர்க்க சற்று ஆழமாகவும், அகலம் குறைவாகவும் இருக்குமாறு தொட்டியை தேர்ந்தெடுக்கலாம். அவற்றின் அடியில் மூன்று அல்லது நான்கு சிறு சிறு துளைகள் போட்டுக்கொள்ள வேண்டும்.

பின் மண் கலவையை தயார் செய்துக்கொள்ள வேண்டும். அனைத்து பெருநகரங்களிலும் வீட்டருகில் செம்மண் கிடைக்கும் அதனைப் பயன்படுத்தலாம் அல்லது புல், செடி கொடிகள் முளைத்திருக்கும் மண்ணை பயன்படுத்தலாம். இவற்றில் ஏதாவது ஒரு வகை மண்ணை பெற்று அதனுடன் தோட்டக்கலை துறையில் கிடைக்கும் மண்புழு உரத்தினையும் சமமாக சேர்க்கவும். இவற்றுடன் வீட்டருகில் கிடைக்கும் காய்ந்த இலைதழை, சருகுகள் ஒருபங்கையும், அதனுடன் மணல் அல்லது தேங்காய் நார் அல்லது கரும்பு சக்கை ஒரு பங்கினையும் சேர்க்கவும்.

தொட்டியை தயாரிக்க

இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து தயாராக எடுத்து வைத்திருக்கும் ஒரு தொட்டியில் முக்கால் பங்கு நிரப்பவும்.

மற்றபடி பெரிய பராமரிப்பு அவசியமில்லை. நல்ல வெயில் காலத்தில் கூட இந்த தூதுவளையை சிறப்பாக வளர்க்கலாம். இதற்கு பெரிதாக எந்த பராமரிப்பும், உரங்களும் தேவையில்லை. ஒவ்வொருநாளும் இரண்டு முறை நீரும் தேவைப்பட்டால் வாரம் ஒருமுறை ஒரு கையளவு மண்புழு உரமும் பத்து நாட்களுக்கு ஒருமுறை பஞ்சகாவ்யா, அமிர்த கரைசல், ஜீவாமிர்தம் போன்ற வளர்ச்சி ஊக்கிகளில் ஒன்றை தெளிக்க சிறந்த வளர்ச்சியை பெறலாம்.

தேவைக்கேற்ப தூதுவளை இலைகளை பறித்து ரசம், தோசை, துவையல், சூப் செய்து உட்கொள்ளலாம். தூதுவளை பூக்களையும் பறித்து பசும் பாலோடு காய்ச்சி பருக ஆண்மை கோளாறு, குழந்தையின்மை தொந்தரவுகள் தீரும்.

பெரிதாக வேறு எந்த பராமரிப்பும் இந்த தூதுவளை செடிக்கு தேவையில்லை. வருடம் முழுவதும் பயன்தரும்.

(5 votes)