நெல்லிக்காய் பானகம்

உடனடி சத்துக்களை அளிக்கும் சிறந்த பானம் இந்த நெல்லிக்காய் பானகம். வைட்டமின் சி, பி சத்துக்கள் மட்டுமல்லாமல் இரும்பு சத்துக்கள், சுண்ணாம்பு சத்துக்கள் நிறைந்த பானம். என்றும் இளமையை காக்க ஒரு அற்புதமான காய் நெல்லிக்காய். முடி உதிர்வை தடுக்கவும், கருகரு கூந்தலைப் பெறவும் நமக்கு உதவும் எளிய பழமாகவும் நெல்லிக்காய் உள்ளது. மூட்டு வலி, முடக்கு வாதம், இரத்த சோகை, வயிற்றுப்புண், சிறுநீர் தொற்று, இரத்த அழுத்தம் போன்றவற்றிற்கும் இந்த நெல்லிக்காய் பானகம் சிறந்த பானம். பொதுவாக செய்யக்கூடிய பானகத்தை விட இது சற்று வேறுபடும், சுவையானதாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்

  • 4 நாட்டு நெல்லிக்காய்
  • 3 – 5 ஸ்பூன் பனை வெல்லம்
  • ஒரு சிட்டிகை சுக்கு தூள்
  • ஒரு சிட்டிகை ஏலக்காய் தூள்

செய்முறை

  • முதலில் நாட்டு நெல்லிக்காயை நன்கு மைய அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • இதனை பிழிந்து சாறு எடுத்துக் கொண்டு மீண்டும் நீர் சேர்த்து அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பனை வெல்லத்தை தண்ணீரில் ஊற வைத்து அதனுடன் சுக்கு, ஏலக்காய் தூள் சேர்த்து ஒரு கொதி கொதிக்க விட்டு எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  • பனை வெல்லம் பாகுடன் நெல்லிக்காய் சாறு சேர்த்து பருகலாம்.

(3 votes)