சிறுதானிய வகையை சேர்ந்த நம் கேழ்வரகு (ராகி). கேழ்வரகு எல்லா கடைகளிலும் எளிதில் கிடைக்கக் கூடியது மட்டும் இல்லை, குறைந்த விலை, அதிக சத்துக்கள் கொண்டதும்.
ராகியில் சுண்ணாம்பு சத்து, நார்ச்சத்து, புரதம், இரும்புச் சத்து என எல்லா சத்துக்களும் உள்ளது. ராகி மலச்சிக்கலை ஒழித்து அதிக நேரம் பசி தாங்க செய்யும். மேலும் ரத்தம் சுத்தியாகும், எலும்பு உறுதிப்படும், சதை வலுவாக்கும்.

முதலில் வாரம் இரு முறை எனவும் பிறகு மூன்று முறை எனவும் ஆரம்பிக்க வேண்டும். ராகியில் பலவிதமான உணவுகள் செய்யலாம். இவ்வாறு செய்வதால் சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.

நாம் அன்றாடம் செய்யும் தோசை போல் ராகியில் எவ்வாறு தோசை செய்வது என்று பார்ப்போம். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு சிறந்த காலை உணவு.
தேவையான பொருட்கள்
- 1 கப் ராகி மாவு / முளைக்கட்டிய ராகி மாவு
- ¼ கப் உளுத்தம்பருப்பு
- சிறிது வெந்தயம்
- செக்கு நல்லெண்ணெய்
- உப்பு
செய்முறை
உளுத்தம் பருப்பை வெந்தயத்துடன் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு மிக்சியில் மைய அரைத்துக் கொள்ளவும். ராகி மாவை தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
இதனுடன் அரைத்த உளுத்தம் பருப்பு மாவை உப்பு சேர்த்து கலந்து 6 மணி நேரம் புளிக்க விடவும். புளித்த மாவை தோசைக்கல்லில் சாதாரண தோசை போல் ஊற்றி செக்கு நல்லெண்ணெய் ஊற்றி மூடி வைத்து வெந்தவுடன் எடுக்கவும்.
சுவையான சத்தான கேழ்வரகு தோசை தயார். சட்னி சாம்பாருடன் சுவையாக இருக்கும்.