முருங்கை மரம்

கிராமங்களில் மட்டுமல்லாமல் நகரங்களிலும் பொதுவாக அனைத்து வீடுகளிலும் பார்க்கக்கூடிய ஒரு மரம் முருங்கை மரம். சுமார் 9 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய இந்த முருங்கை மரத்தை சாதாரணமாக வீட்டு முற்றங்களில் தோட்டங்களிலும் வைத்து வளர்க்கும் பழக்கம் நமது தமிழகத்தில் அதிகமாகவே உள்ளது. சாதாரணமாக முருங்கைக்கீரையும், முருங்கைக் காயும் நமக்கு உணவாக பயன்பட்டு வருகிறது.

முருங்கை மரத்தின் காய், இலை தவிர பூ, பட்டை என அனைத்து பாகங்களும் நோய் தீர்க்கும் சிறந்த மருந்தாக உள்ளது. முருங்கைக் கீரையில் வைட்டமின் உயிர்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. அதிலும் உடலுக்கு நல்ல பலத்தைக் கொடுக்கக்கூடிய ஆற்றல் நிறைந்ததாகவும் இவை உள்ளது. அதிக பயன்களும் சத்துக்களும் நிறைந்த முருங்கைக் கீரையை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. முருங்கை கீரையை எளிமையாக வீட்டில் வளர்த்து பயன்படுத்தலாம்.

முருங்கை கீரை, முருங்கை காய் மட்டுமல்லாமல் முருங்கையில் கிடைக்கக்கூடிய மற்ற பொருட்கள் உடல் ஆரோக்கியத்தை அளித்து பல நோய்களையும் தீர்க்க கூடியதாக உள்ளது.

புளியேப்பம் மாற நல்ல பசி உண்டாக

முருங்கைக் கீரையை தேவையான அளவு எடுத்து சுத்தமாக ஆய்ந்து மூன்று கைப்பிடி அளவு எடுத்து சட்டியில் போட்டு சிறிது உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக வறுக்க வேண்டும். கீரை வதங்கி வர வர சுருண்டு உப்புடன் சேர்ந்து கருகும். நன்றாக கருகிய பின் கீரையில் நெருப்பு பிடிக்கும் (மிகவும் கவனமாக இதனை செய்யவேண்டும்). மேலும் வறுத்துக் கொண்டே இருந்தால் உப்பு வெடிக்கும். இந்த சமயம் சட்டியை இறக்கி வைத்து, ஆறிய பிறகு அதை அம்மியில் வைத்து நன்றாக தூள் செய்து ஒரு சீசாவில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். புளியேப்பம் வரும் சமயம் அரைத் தேக்கரண்டித் தூளை வாயில் போட்டு சிறிதளவு வெந்நீர் குடிக்க புளியேப்பம் மாறிவிடும். அஜீரணம் ஏற்பட்டு பசி மந்தமாக இருக்கும் சமயம் அரைத் தேக்கரண்டி அளவு வாயில் போட்டு வெந்நீர் குடிக்க அஜீரணம் மாறி நல்ல பசி உண்டாகும்.

உடலில் பலம் ஏற / ஆண்மை குறைபாடு நீங்க

முருங்கை பூவை சேகரித்து சுத்தமாக ஆய வேண்டும். முருங்கை பூவில் வெண்ணிறமான சிறு புழுக்கள் மறைந்திருக்கும். எனவே கவனமாக ஆய்ந்து எடுத்து முருங்கைப்பூ உள்ள அதே அளவு துவரம்பருப்பைச் சேர்த்து பகல் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் நல்ல பலம் ஏறும். தினசரி தவறாமல் இருபத்தி ஒரு நாள் சாப்பிடவேண்டும். ஆண்மை குறைபாடு நீங்கும்.

குழந்தைகள் வயிற்று உப்புசம் தணிய

முருங்கை இலையைக் கொண்டு வந்து ஆய்ந்து உள்ளங்கையில் வைத்து கசக்கினால் சாறு வரும். அந்த சாற்றில் அரைச் சங்களவு எடுத்து, பட்டாணி அளவு சோற்று உப்புச் சேர்த்து கரைத்து ஒரு முறை கொடுத்தால் போதும், வயிற்று உப்புசம் குணமாகும்.

சிறுநீர்க் கட்டு உடைய

ஒரு சிலருக்கு திடீரென்று சிறுநீர் இறங்காது. வயிறு உப்புசமடையும். வேதனைப்படுவார்கள். அதேபோல குழந்தைகளுக்கும் சிறுநீர்க்கட்டு ஏற்படுவதுண்டு. நீர்க்கட்டை உடைக்க முருங்கைக்கீரை நன்கு பயன்படக் கூடியதாக இருக்கிறது. தேவையான அளவு முருங்கைக்கீரையை கொண்டு வந்து, அதே அளவு வெள்ளரி விதையையும் சேர்த்து அம்மியில் வைத்து மை போல் அரைத்து வயிறு முழுவதுமாக கனமாகப் பூசிவிட்டால் கால் மணி நேரத்தில் நீர்க்கட்டு உடைந்து நீர் பிரியும்.

மேக நோய் குணமாக

முருங்கை மரத்தின் பூக்களையும் தூதுவளைக் கொடியின் பூக்களையும் சம அளவு சேர்த்து சுத்தம் செய்து நன்னாரி வேரை கொண்டு வந்து ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளர் அளவு தண்ணீர்விட்டு அரை டம்ளர் அளவிற்கு சுண்டக் காய்ச்சி அந்த கசாயத்தை இறுத்து இரண்டு பூக்களையும் அம்மியில் வைத்து நன்னாரி கசாயம் விட்டு மைபோல் அரைத்து அருநெல்லிக்காய் அளவு உருண்டைகளாகச் செய்து, ஒரு தட்டில் போட்டு நிழலில் உலர்த்தி ஒரு நாள் வெயிலில் வைத்து அவைகளை ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு, காலை, மாலை ஒரு உருண்டை வீதம் தொடர்ந்து 21 நாள் கொடுத்து வந்தால் மேகநோய் குணமாகும். மருந்து சாப்பிடும் பொழுது நல்லெண்ணெய், புளி, கடுகு இவைகளை நீக்கி பத்திய பதார்த்தங்களை மட்டும் சாப்பிட வேண்டும்.

தாது விருத்தி உண்டாக

உடலில் நல்ல ரத்தம் உற்பத்தியானால் தாது புஷ்டி உண்டாகும். இதற்கு முருங்கை விதை பிடியாத இளம் முருங்கைக் காய்களை கொண்டுவந்து, அதை உமிக் கருக்கில் சுட்டு நெகிழச் செய்து, உரலில் போட்டு இடித்துச் சாறு பிழிந்து, ஒரு டம்ளர் காய்ச்சிய பசுவின் பாலில் கலந்து காலையில் மட்டும் கொடுத்து வந்தால் நல்ல தாது புஷ்டி உண்டாகும். தொடர்ந்து 21 நாட்களுக்கு கொடுக்க வேண்டும். இந்த விதமாக இடைவிடாமல் கொடுத்து வந்தால் தாது புஷ்டி உண்டாகும்.

நரம்பு தளர்ச்சி மறைய / வாதநோய் நீங்க

முற்றின முருங்கைக் காய்களை எடுத்து வந்து, நல்ல முற்றின விதைகளையும் காய்களையும் வெங்காயம், தக்காளி, பூண்டு, மிளகு, சீரகம், தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு சூப்பாக தயாரித்து அன்றாடம் ஒரு 48 நாட்கள் அருந்தி வர எப்பேர்ப்பட்ட நரம்பு தளர்ச்சியும் குணமாகும். மூட்டு சார்ந்த பிரச்சனைகளுக்கும், தீராத வாத நோய்களும் இதனை தொடர்ந்து அருந்துவதால் விலகும்.

(2 votes)