பால் – அறியாத பல தகவல்கள்

சத்துள்ள உணவுகளின் பட்டியலில் ஒரு முக்கியமான இடத்தில் இருக்கும் பால் இன்று உண்மையிலேயே சத்தான பானமாக உள்ளதா? அல்லது பல ஆபத்துக்களை விளைவிக்கும் காரணியாக உள்ளதா?

பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதர்களுக்கு பரிச்சியமான பாலில் மட்டும் இன்று கலப்படமில்லை, பாலினை அளிக்கும் மாடே கலப்படமாய்விட்டது.

ஆட்டுப்பால், கழுதைப்பால், யானைப்பால், குதிரைப்பால், எருமைப்பால், தேங்காய்ப்பால், கடலைப்பால், கேழ்வரகுப்பால் என பலவகையான பால் நமது வழக்கத்தில் இருந்தாலும் பசுவின் பாலிற்கு தனிமகத்துவம் உள்ளது. பசுவின் பால் தாய்ப்பாலிற்கு அடுத்தபடியாக பார்க்கப்படும் பால். 

பலவகையான பால் நமக்கு அளிக்கும் நன்மைகள் பல…

Cow, Desi Cow, Paal, Pasum paal, A2 Cow Milk, A2 Milk, Nattu mattu paal, desi cow milk, cow milk

பசும் பால்

பசுவின் பாலினை பிறந்த குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை யாவரும் எந்த வித நோயினாலும் பாதிக்கப்பட்டவரும் பருக அவர்களுக்கு நல்ல ஆரோக்கியமும், உடல் பலமும் கிட்டும். அதிலும் வெண்மை, செம்மை, கருமை நிற பசுக்களுக்கும் தனித்தனியான குணங்கள் உண்டு. அதிலும் காரம் பசுவின் பால் பலவகையான நோய்களை தீர்க்கும் மாமருந்து. இரத்த சம்மந்தமான நோய்களுக்கு நிவாரணம் தரும்.

ஆட்டுப் பால்

ஆட்டுப்பால் பல விதங்களில் நமக்கு நன்மையையும் எளிதில் ஜீரணமாகும் தன்மையினையும் பெற்றுள்ளது. குழந்தைகள் முதல் அனைவருக்கும் ஏற்ற இந்த ஆட்டுப்பாலினை அருந்துவதால் உடலில் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கிறது.

யானைப்பால்

யானைப்பாலினை அருந்துவதால் வாதநோய்கள் நீங்கும்.

கழுதைப்பால்

அனைவரும் அருந்த கழுதைப்பால் ஏற்றதல்ல என்றாலும் சில நோய்களுக்கு மருந்தாகவும் இந்த பால் உள்ளது.

எருமைப்பால்

பலரால் அதிகம் உட்கொள்ளப்படும் எருமைப்பால் மந்தத்தைத் தரக்கூடியது. 

தேங்காய்ப் பால்

எலும்புகளுக்கும், தசைகளுக்கும் வலுசேர்க்கும் தேங்காய்ப்பால் வளரும் குழந்தைகளுக்கு பல தாதுக்கள் கொண்ட சிறந்த பால்.

நிலக்கடலைப் பால்

நிலக்கடலைப் பால் பலப்பல தாதுக்களையும், வைட்டமின்களையும் உள்ளடக்கியது. சுவையான இந்த பாலினை பருக உடல் வலிமைப்பெறும்.

கேழ்வரகு பால்

கேழ்வரகு பாலைப் பற்றி சொல்லவேண்டிய அவசியமே இல்லை, காரணம் அதிக சுண்ணாம்பு சத்துக்களை கொண்ட சிறந்த பால் இது. பிறந்த குழந்தையின் முதல் வெளி உணவும் இதுவே. எலும்புகளுக்கு பலம் சேர்க்கும் இந்த பாலினை அருந்திவர மூட்டுவலிகளும், எலும்பு தேய்மானமும் காணாமல் போகும்.

கம்பு பால்

நாட்டுக் காம்பினை முளைகட்டி பாலெடுத்து பருக ஆண்மை குறைபாடு நீங்குவதுடன் குழந்தை பேறுக்கு ஒரு சிறந்த மருந்தாகவும் உள்ளது. தொடர்ந்து உண்டுவர கருப்பை குறைபாடுகள், விந்தணு குறைபாடு நீங்கும்.

இப்படி பல பல பால் வகைகள் நம்முடன் புழக்கத்தில் இருந்த போதும் இவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு எந்தப் பாலைக் குடிக்கிறோம் என்று கூட தெரியாமல் தினமும் காலையும் மாலையும் மணியடித்தாற்போல் தவறாமல் அருந்துகிறோம்.

இன்று நாம் அருந்தும் பால்…

காபி, டீ, சத்துபானங்கள், மில்க் ஷேக்  என பல ரூபத்திலும் பாலினை அருந்துகிறோம். இவையெல்லாம் உண்மையிலேயே உடலுக்கு ஏற்புடையதா என்று சிந்தித்ததும் இல்லை, ஆராய்ந்தும் இல்லை.

காரணம் நாமென்ன இன்று நேற்றா பாலினை அருந்துகிறோம் காலம் காலமாக பால் நமது உணவுடன் கலந்த ஒன்று என்ற நினைப்பு. 

நினைப்பெல்லாம் சரிதான், ஆனால் பால் என்ற பெயரில் வரும் பானத்தில் தான் பிரச்சனையே தொடங்குகிறது.

நமது முன்னோர்கள் அருந்திய பால் வீட்டினிலே வளர்த்த நாட்டுப்பசுவின் பால். நாம் இன்று அருந்துவது யூரியா, சோப்புத்தூள், கொழுப்பு, மாவுகள், இரசாயனங்கள் கலந்த ஒரு திரவம். இதில் பாலும் கலந்துள்ளது என்பதற்காக உண்மையிலேயே பால் என்றாகிவிடும் இந்த கலவை? இந்த பாலிற்கும் நமது முன்னோர்கள் அருந்திய பாலுக்கும் சம்மந்தமே இல்லை..

யூரியா, சோப்புத்தூள், கொழுப்பு, மாவுகள், இரசாயனங்கள் கலந்த இந்த திரவத்தினால் உடலுக்கு பல உபாதைகளும், செரிமான தொந்தரவுகளும் ஏற்படுகிறது. ஆனால் இன்றைய பிரச்சனைகள் இந்த பால் மட்டுமல்ல. பாலினைக் கொடுக்கும் மாட்டினிலுமே தான். 

வெளிநாடுகளில் பாலினை மாட்டில் இருக்கும் ஒருவகை புரதமான A1, A2 என்பதை வைத்து பிரிக்கின்றனர். A1 பால், A2 பால் என்று அவை விற்பனைக்கு வருகிறது.

அதாவது ஆசிய இன மாடுகள் குறிப்பாக இந்திய மாடுகள் அனைத்தும் A2 என்ற புரத அமைப்பைக் கொண்ட பசு மாடுகள், ஐரோப்பா இன மாடுகள் A1 புரதத்தினைக் கொண்ட மாடுகள்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயற்கையாக மரபணுவில் ஏற்பட்ட மாற்றத்தினால் இந்த ஐரோப்பா மாடுகளில் இந்த வகை A1 பீட்டா-கேசீன் புரதம் உருவானது.

A1 ரக மாடுகள் அதாவது அயல் நாடு மாடுகள் அல்லது சீமை மாடுகளில் இருக்கும் இந்த வகை புரதம் மனித உடலில் செரிக்கப்படும் பொழுது BCM7 ( பீட்டா-காசோமொபின் 7) என்று வேதியல் மாற்றத்தை ஏற்படுத்துகிறது..  இந்த BCM7 தான் எ1 ரக பாலினை அருந்துபவர்களுக்கு பல பேராபத்தையும் உயிர் கொல்லியான புற்றுநோயையும் உருவாக்குகிறது.

இன்று பால் உற்பத்திக்காக என்று  வெளிநாடுகளில் இருந்து நமது நாட்டிற்கு இறக்குமதியான இந்த A1 இன மாடுகள் தான் இன்று நமது வீதிகளில் பசு என்ற பெயரில் உலவுகிறது. இவற்றின் பாலினை அருந்த பலவகையான உடல் தொந்தரவுகளால் பச்சிளம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் காரணம் தெரியாமல் பாதிக்கப்படுகின்றனர்.

நமது A2 இன நாட்டுமாடுகள் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் மருந்தாகவும், உணவாகவும் செயல்பட்டது, ஆனால் அளவான பாலினைக்கொடுக்கும் நமது நாட்டு இன பசுக்கள் இன்று காணாமல் போய்விட்டது.

காங்கேயம் பசு, புங்கனூர் குட்டை, ஆலம்பாடி, உம்பளச்சேரி, பெரம்பலூர் மொட்டை, தொண்டைமாடு, துரிஞ்சல் இலை, பர்கூர் செம்மரை, பாலமலை மாடு, மணப்பாறை பசு போன்ற மாடுகளின் பால் புற்றுநோயையும் போக்கக்கூடிய தன்மையைக்கொண்டது. 

மருந்தாக வேலைசெய்யும் நாட்டு மாடுகளில் பால் கிடைக்கும் பட்சத்தில் அவற்றுடன் சமபங்கு தண்ணீர் கலந்து அருந்தவேண்டும். கிடைக்காத நிலையில் வரும் சமுதாயத்திற்க்காக அவற்றை மீட்டெடுக்கும் முயற்சியை செய்து நமது குழந்தைகளுக்கு அந்த மாமருந்தை வரும் காலங்களில் அளிக்கலாம்.

நமது நாட்டு மாடுகளை இந்த A2 புரதத்தின் காரணமாக நம்மிடம் இருந்து அபகரித்து பல வெளிநாடுகளும், அயல்நாட்டு  நிறுவனங்களும் பாதுகாத்து வருகிறது.

A2 பசுவின் பால் விற்பனைக்கு கிடைக்காத இன்றைய சூழலில் பாக்கெட் பாலினைக் கொடுத்து நமது குழந்தைகளின் ஆரோக்கியத்தை சீர்கெடுக்காமல் தானியப்பாலினையும், கொட்டைபருப்பு பாலினையும் கொடுக்கலாம். 

தேங்காயை நன்கு அரைத்து அதன் பாலினையும், நிலக்கடலை, கேழ்வரகு போன்றவற்றை முளைகட்டி அதனை நன்கு அரைத்து பாலெடுத்து சிறிது நாட்டுச்சர்க்கரை கலந்து நமது குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். 

ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கும் பாக்கெட் பால், சீமை மாட்டுப்பால், கலப்பினப் பால் (அறியாமையில் பசும் பால் என்றும் இவற்றை அழைக்கின்றனர்) போன்றவற்றிற்கு சிறந்த மாற்றாக இந்தப் தானியப்பாலும் தேங்காய்ப்பாலும் இருக்கும். 

பசும் பாலுக்கு நாமே வீட்டில் பசுவை வளர்க்க வேண்டுமென்பதில்லை, நமக்கு அருகில் இருக்கும் மாடு வளர்ப்பவரிடம் நமக்கென்று ஒரு பசுவையும், அதற்கான செலவுத் தொகையையும் கொடுக்க நிச்சயம் நமக்கான உண்மையான A2 பாலினை தினமும் கொடுப்பர்.

நகரத்திலும் இது சாத்தியம் தான். நகரத்தை சுற்றி இருக்கும் கிராமங்களில் இருப்பவர்களிடம் நமக்கான இந்த உதவியை பெறலாம். யாரைப்போய் கேட்பது என்கிறீர்களா? நேரடியாக நமக்கு அருகாமையில் இருக்கும் கிராமத்திற்கு சென்று யாராவது ஒருவரை உதவி கேளுங்கள்..

நிச்சயம் ஒரு வழி பிறக்கும். தேவையில்லாமல் எவ்வளவோ செலவுகளை செய்யும் நாம் தேவையான இதனை செய்ய நமது குடும்பமும், நாடும் செழிக்கும்.

(1 vote)