சுவையான மசாலாக்களால் வரும் பாதிப்புகள்

பொதுவாக வெளிநாடுகளுக்கும், வெளி ஊர்களுக்கும் சுற்றுலா செல்பவர்களைப் பார்த்து மற்றவர்கள் கேட்பது அந்த ஊரில் அந்த இடத்தை பார்த்தீர்களா, அங்கு வானிலை எவ்வாறு இருந்தது என்பது மட்டுமல்ல.. நீங்கள் செல்லும் அந்த இடத்தில் இந்தந்த உணவுகளை சுவைத்தீர்களா என்பதும் தான்..

அந்தளவிற்கு ஒவ்வொரு இடத்திற்கும் தனித்துவமான உணவுகள் உள்ளது. அவை அந்த இடத்திற்கே உரிய சுவையையும் மனதையும் கொண்டது. 

தமிழகத்தில் மற்ற நாட்டினரின் உணவகங்களும், மற்ற நாடுகளில் தமிழகத்தின் உணவகங்களும் அதிகளவில் இருப்பதற்கு காரணமும் அவைதான்.

இந்த உணவுகளுக்கு தனித்தன்மையான சுவைகளைக் கொடுப்பது அதில் சேர்க்கப்படும் சேர்மங்கள் தான். ஏன் மற்ற நாடுகளையும், மற்ற ஊர்களையும் குறிப்பிடவேண்டும், நம் தமிழகத்தையே எடுத்துக்கொள்ளலாம். உணவிற்கு பெயர்போன நமது செட்டிநாட்டு குழம்பு, பிராமண புளியோதரை, இஸ்லாமிய பிரியாணி,  கொங்கு கதம்ப சாதம், நெல்லை சொதி என ஊருக்கு ஊர் தனித்தனி சுவை தான். இவற்றிற்கு காரணமாக இருந்தது அவர்களின் மசாலாக்களும் அவற்றை தயாரிக்கும் முறைகளும் தான்.  

குழம்பும், கறிகளும் மணக்கவும் சுவைக்கவும் அவர்கள் தங்களின் மசாலாக்களை மிகுந்த அக்கறையுடன் தயாரிப்பதே அதற்கு முக்கிய காரணம்.

வீடுகள் மட்டுமல்ல இன்றும் சில பெயர்போன உணவகங்கள் தங்களின் உணவின் தனிப்பட்ட சுவைக்கு காரணமாக கூறுவது அவர்களின் மசாலாக்களை தான்.

வழிவழியாக வந்த அந்த பாரம்பரிய மசாலாக்கள் தான் அந்தந்த வட்டாரத்திற்கும், இனத்திற்கும், உணவகங்களுக்கும் தனித்தன்மையை இன்றும் அளிக்கிறது.

இவை வெறும் மிளகாய், மல்லி, மிளகு என்று ஒவ்வொரு பொருளையும் சேர்த்தது மட்டுமல்ல. அந்தந்த இடத்திற்கு ஏற்றவாறு சீதோஸ்ணம், உடலின் தன்மை, உணவின் தன்மை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டது தான் அவர்களின் மசாலாக்கள்.

இந்த பாரம்பரிய மசாலாக்கள் எந்த வகையிலும் உடலுக்கு தீங்கு இழைக்காதவாறு தயாரிக்கப்பட்டது. மல்லி என்றால் நாட்டுமல்லி அதுவும் இந்த இடத்தில் விளைந்த மல்லி.. மஞ்சள் என்றால் இந்த வகை மஞ்சள், மிளகாய் என்றால் அதெற்கென்று ஒருவகையையும் தேடிதேடி பார்த்து வாங்கி தயாரித்தார்கள்.

ஒருவகையில் பொடிகளாகவும், மற்றொரு வகையில் தேவைக்கேற்றவாறு உடனடியாகவும் தயாரித்து பயன்படுத்தினர்.

பொடிகளை புடைத்து, சுத்தம் செய்து, தேவையற்ற பாகங்களை நீக்கி, வெயிலில் காயவைத்து, தேவைப்பட்டால் வறுத்து பின் அரைத்து பயன்படுத்தும் அந்த கலையே அவர்களின் சமையல்களுக்கு தனித்தன்மையையும் உலகப் புகழையும் பெறக்காரணமாக இருந்தது.

இன்றோ சமைக்கவே நேரமில்லை, பின் எங்கிருந்து மசாலாக்களை அரைப்பதுவும், சமைப்பதுவும் என்பது தான் நிலைமை. இருக்கவே இருக்கு அருகில் இருக்கும் கடைகளில் விதவிதமான சுவைகளில் எல்லா மசாலாக்களும் என்ற நிலை.

நினைத்தால் நேரத்தில் நினைத்த மசாலாவை பயன்படுத்தி சுவையாக சமைத்து அசத்தலாம் என்ற எண்ணமும் அதற்கு மேல். நிச்சயம் சமைக்கலாம்… குழந்தைகள் கேட்கும் நேரத்தில் பவுபாஜி செய்து கொடுக்கலாம், நிமிடத்தில் மஞ்சள் தூள் தொடங்கி சாம்பார் பொடி, ரசப்பொடி, கரம் மசாலா மட்டுமல்ல அனைத்து அசைவ உணவுகளுக்கும் தனித்தனி மசாலாக்களுடன் தயாரிக்கலாம்.

சுவை ஒருபக்கம் இருக்கட்டும். இன்று ஹோட்டலுக்கு சென்று தான் வியாதியை வாங்கிவரவேண்டும் என்றில்லை. வீடுகளிலேயே இவற்றால் பல பல உபாதைகளும், வாழ்வியல் நோய்களும் அதிகரித்துக்கொண்டு தான் உள்ளது.

இவை தரமானதா? இவற்றில் கலந்திருக்கும் சுவை, மணமூட்டிகள், இரசாயனங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் தேவையற்ற பொருட்களால் வரும் தொந்தரவுகள் அதிகம். 

பொதுவாகவே தானியங்களிலும் மற்ற உணவுப் பொருட்களிலும் கற்கள், கழிவுகள், களிமண் போன்றவற்றை காய்ந்த நிலையில் பார்க்கலாம். இவற்றையும் சேர்த்துதான் பலநேரங்களில் இந்த பொடிகள் அரைக்கப்படுகிறது. இவற்றால் சாதாரண வாந்தி, பேதி தற்காலிகமாக ஏற்படும், காலப்போக்கில் நோய் எதிர்ப்புசத்தி காரணமாக பல பல நோய்கள் ஏற்படவாய்ப்புகளும் அதிகம்.

பொதுவாகவே மஞ்சள் ஒரு சிறந்த கிருமி நாசினி என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் வீட்டில் முழு மஞ்சளை வாங்கி சுத்தம் செய்து அரைக்காமல் கடையில் மஞ்சள் தூளை வாங்கி பயன்படுத்த அதில் கலந்திருக்கும் இரசாயனங்களால் பல நோய்கள் ஏற்படுகிறது. குர்குமின் என்ற இயற்கை வேதியல் மஞ்சளாக இருக்கும் மஞ்சள் தூளைத் தருகிறது. ஆனால் இன்றோ இதில்  இரசாயன மஞ்சள் நிறத்தை செயற்கையாக சேர்க்கின்றனர். இதனால் புற்றுநோய் வரவும் வாய்ப்புகள் அதிகமாகிறது.

பாரம்பரிய சுவையில் சாம்பார் பொடி என்று வரும் விளம்பரத்தைப் பார்த்து வாங்குபவர்கள் அவரவர் பாரம்பரியத்தை மறந்தது மட்டுமல்ல இங்கு பிரச்னை. அந்த மசாலா தூள்களில் சேர்க்கப்பட்டிருக்கும் இரசாயனங்ககளும், உடலுக்கு கேடுவிளைவிக்கும் நச்சுக்களும் தான் நோய்களுக்கு ஒருவகையில் காரணமாகிறது.

மிளகாய்த்தூளில் செங்கல் தூளும், நிறமூட்டிகளும் மட்டுமல்ல குழம்பு அடர்த்தியாக இருக்க கொளகொளக்கும் பொருட்களும், கிழங்கு மாவுகளும் சேர்க்கப்படுகிறது. இதனால் உடல் பருமன், தேவையற்ற கொழுப்புகள் போன்றவையும், அஜீரணமும் ஏற்படுகிறது.

லெட் கிரோமேட், மெடனில் மஞ்சள் நிறங்கள் கிட்டத்தட்ட அனைத்து தென்னிந்திய மசாலாபொடிகளிலும் சேர்க்கப்படுகிறது. இதனால் நரம்பியல் நோய்களும், புற்றுநோயும் வர அதிக வாய்ப்புகள் உள்ளது.

பொதுவாகவே சீரகம், சோம்பு போன்றவற்றில் அதன் பச்சை நிறத்தைப் பெற பல ஆபத்தான நிறமூட்டிகள் சேர்க்கப்படுகிறது. மிளகில் அதன் பளபளப்பிற்கு சில மினெரல் எண்ணெய்களும், பப்பாளிவிதைகளும், கடுகில் சிலவகையான விதைகளும் சேர்க்கப்படுகிறது.

கடைகளில் கிடைக்கும் அடைக்கப்பட்ட மஞ்சள் தூள், கரம் மசாலா, குழம்பு பொடி, இட்லி பொடி,  சாம்பார் பொடி, கறிக்குழம்பு மசாலா பொடி, மிளகாய்ப்பொடி, கோழி குழம்பு பொடி, கோழி வறுவல் மசாலா, மீன் குழம்பு பொடி, மீன் மசாலா பொடி என்று போட்டிகளின் வரிசையை அடுக்கிக்கொண்டே போகலாம்..

அவற்றில் கல், மண், குப்பை, ஸ்டார்ச், கேசர் பருப்பு தூள், புளியங்கொட்டை தூள், புல்வெளி தூள், மரப்பட்டை, கறித்தூள், பூச்சிக்கொல்லிகள், இராசயனங்கள், நிறமூட்டிகள், சுவையூட்டிகள் என இவற்றின் பட்டியலுமே நீண்டுகொண்டே உள்ளது. இந்த இரண்டு பட்டியலுக்கு போட்டி உள்ளதோ இல்லையோ இவற்றை வீட்டில் நாமே இவற்றை தயாரிக்காமல் நேரடியாக வாங்கி பயன்படுத்த நோய்களின் பட்டியலும் நீண்டுகொண்டே போகிறது.

ஆரமின், ரொடமின், சூடான் டை, மேலச்சிட் பச்சை, ஆரஞ்சு II,  மெடனில் மஞ்சள், லெட் கிரோமேட், டார்ட்ராஜிங்க் போன்ற இராசயனங்கள் இவற்றில் சேர்க்கப்படுகிறது. இவற்றால் வளைச்சி குறைபாடு, கல்லீரல், சிறுநீரகம், இருதயம், நுரையீரல், எலும்புகள், கண், தோல், கருப்பை, வயிறு போன்றவை அதிகமக பாதிப்படைகிறது. சிகப்பணுக்கள் செயப்பாடுகளில் கோளாறுகள், ஆண்மைக்குறைவு, மலட்டுத்தன்மை, மலச்சிக்கல் போன்றவை ஏற்படுகிறது.

ஒரே நாளில் எந்த பெரும்பாதிப்பை இந்த விளம்பர பொடிகள் ஏற்படுத்திவிடுவதில்லை என்றாலும் காலப்போக்கில் இவற்றிற்கு விலையாக நோய்கள் ஒரு குறிப்பிட்ட வயதை தாண்டியவுடன் ஒவ்வொருவரையும் அலங்கரிக்கத் தொடங்குகிறது.

இருபது வருடங்களுக்கு முன் தொன்னூறு வயதிலும் ஆரோக்கியமாக இருந்த நமது முன்னோரின் வழியில் வந்த நாம் இன்று நாற்பதை தாண்டியதுமே மருத்துவமனைக்கு மறைமுகமாக ஒப்பந்தம் செய்துகொள்ளும் நிலை ஏற்படுகிறது. மருந்து மாத்திரைகள் இல்லாமல் வாழ்கை என்ற நிலையையே பலரால் நினைத்துக்கூட பார்க்க முடையாத நிலை உருவாகிறது.

இதிலிருந்து நம்மையும் நமது குழந்தைகளையும் காக்க வீட்டிலேயே குறைந்த அளவில் மசாலாக்களை தயாரித்து பயன்படுத்துவது சிறந்ததும்.

அதிலும் அவரர் வீடுகளில் அவரவர்களின் முன்னோர்கள் தயாரித்தது போல் தயாரிப்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். காரணம் அந்தந்த உடல் தன்மைக்குத் தகுந்த வண்ணம் அவை அமைந்திருக்கும். 

அவரவர் வாழ்ந்த இடம், நீர், தட்பவெப்ப நிலை, பழக்கவழக்கங்கள் போன்றவற்றைக் கொண்டு மரபணு அமையப்பெற்றிருக்கும். அந்தந்த மூதாதையர் வழியில் வந்தவர்கள் அதற்கேற்றவாறு தங்களின் மசாலாக்களையும் , உணவினையும் அமைத்துக்கொள்ள சீரான உடல்வாகும், ஆரோக்கியமும் பெறலாம். அதிலும் அவரவர் வாழும் நிலங்களிலிருந்து பெறப்படும் இந்த உணவு பொருட்கள் அவர்களுக்கு ஏற்றவாறு அமைந்திருக்குப்பது சிறப்பானது. 

ஒவ்வொரு இனத்தவரும் அவரவர் வேலைகள், தொழில் போன்றவற்றிற்கு ஏற்றவாறு மிளகாய் காரத்தை குறைத்தும், மிளகினை அதிகமாகவும், மல்லியை தேவைக்கேற்றவாறும், அவற்றில் பருப்புகளையும் சேர்த்து மிளகாய் தூளினை அரைப்பதுண்டு.

காலம் காலமாக அவற்றை உண்ட நாம் இன்று திடீரென்று கடந்த சிலஆண்டுகாலமாக பிராத்தியப் பொருட்களை பெற்று பயன்படுத்துவதால் அஜீரணம் ஏற்படுகின்றது. இதனால் வயிறு உப்புசம், வயிற்றுவலி, அல்சர் போன்றவை ஏற்படுகின்றது. 

அவரவரால் முடிந்த நேரத்தில் பொருட்களை வாங்கி தேவைப்பட்டால் லேசாக வறுத்து அரைத்துவைத்துக்கொண்டு உபயோகிப்பது சிறந்தது. மஞ்சள் போன்றவை அரைகிலோ அளவிலும், மிளகாய்த்தூள், குழம்பு பொடி போன்றவற்றை கிலோக்கணக்கிலும் நாமே சேர்த்து அரைத்து பயன்படுத்துவது சிறந்தது.