ஆமணக்கு – நம் மூலிகை அறிவோம்

Ricinus Communis; Castor Oil Plant; ஆமணக்கு

ஆமணக்கு ஒரு உயரமான பெருஞ் செடி. நமது தமிழகத்தில் புதர்கள், சாலை ஓரங்கள், இரயில் பாதைகள் என எங்கும் நிறைந்திருக்கும் ஒரு செடி. இந்த ஆமணக்கு செடியின் விதைகளில் இருந்து பெறப்படும் எண்ணெயே உடலுக்கு பல வகைகளில் பயனளிக்கும் விளக்கெண்ணை.

Ricinus Communis, Castor Oil Plant benefits uses tamil

விளக்கெண்ணை செடியான ஆமணக்கு சுமார் பத்து அடி உயரம் வரை வளரும் தன்மைக் கொண்டது. இதனுடைய இலைகள் ம்லர்ப்போல் விரிந்து இருக்கும். பூக்கள் சாம்பல் நிறத்திலும் இதனுடைய காய்கள் மென்மையான முட்களுடன் கூட்டாக இருக்கும். இந்த காய்கள் காய்ந்த பின் வெடிக்கக் கூடியதாக இருக்கும். தலரூபம், ஏரண்டம், சித்திரம் என பல பெயர்கள் இதற்கு உண்டு. கைப்பு சுவைக் கொண்ட இதன் இலை, விதை, வேர் ஆகியன பயன்படும் பகுதிகள்.

மலமிளக்கியாகவும், வாதமடக்கி, வறட்சியகற்றியாகவும் பயனளிக்கும் ஆமணக்கு வாத நோய்களைக் கட்டுப்படுத்தும் தன்மைக் கொண்டது. தாய்ப்பால் சுரக்கச் செய்யும் தன்மையும் இதற்கு உண்டு. எப்பேர்பட்ட மலச்சிக்கலையும் போக்கும் தன்மைக் கொண்ட இது கட்டிகள், வீக்கங்களைக் கரைக்கும் ஆற்றல் கொண்டது. வயிற்று வலி, பசியின்மை ஆகியவற்றையும் தீர்க்கும்.

Ricinus Communis, Castor Oil Plant benefits uses tamil

காமாலைக்கு

இன்று பெரும்பாலோருக்கு வரும் காமாலை தொந்தரவு தீர ஆமணக்கு இலையுடன் கீழாநெல்லி இலை சம அளவு சேர்த்து மைய அரைத்து ஒரு சுண்டக்காய் அளவு காலையில் மட்டும் 3 நாட்களுக்கு உட்கொண்டு 4 ம் நாள் பேதிக்குக் கொடுக்க இந்த தொந்தரவு தீரும்.

வீக்கங்களுக்கு

மூலக்கடுப்பு, வாத வலிகள், வீக்கம், கீல்வாதம் போன்ற தொந்தரவுகளுக்கு ஆமணக்கு இலையை பொடியாக நறுக்கி, (விளக்கெண்ணையில்) ஆமணக்கு எண்ணெயிட்டு வதக்கி ஒத்தடம் கொடுத்து வர விரைவில் நீங்கும்.

வயிற்று வலி

  • பெண்களுக்கு ஏற்படும் ஆடிவயிற்றுவலி மற்றும் சூதகக் கட்டு, சூதகத்தடையுடன் வயிற்று வலி ஆகியவற்றிற்கு அடி வயிற்றில் ஆமணக்கு எண்ணெயைத் தடவி இலைகளை வதக்கி வைத்து வர வலிகள் விரைவில் மறையும்.
  • உடல் சூடால் ஏற்படும் வயிற்றுவலிகள் மற்றும் உஷ்ண நோய்களுக்கும் இதனை பின்பற்ற நல்ல பலனைப் பெறலாம்.

  • ஆமணக்கு இளந்தளிரை விளக்கெண்ணையில் வதக்கி தொப்புள் அல்லது அடிவயிற்றில் கட்ட வெப்பத்தினால் உண்டான நோய்கள், வயிற்று வலி தீரும்.
  • அதேப்போல் ஒரு ஸ்பூன் அளவு ஆமணக்கு எண்ணெய் அதனுடன் சிறிதளவு இஞ்சிச்சாறு அல்லது சிறிதளவு பசும்பால் கலந்து பருக அஜீரணம், வயிற்று வலி உட்பட அனைத்து வயிற்றுக் கோளாறுகளும் தீரும்.

தாய்ப்பால் சுரக்க

ஆமணக்கு இலையை கொண்டு குடிநீர் செய்து பருகுவதாலும், இலையை நெய் சேர்த்து நெருப்பில் வாட்டி மார்பகத்தில் வைத்துக் கட்டி வருவதாலும் தாய்ப்பால் சுரக்கும்.

(1 vote)