பாகல் இலை

அதிக மருத்துவகுணங்களைக் கொண்ட பலருக்கும் பிடிக்காத கசப்பு காய் என்றால் அது பாகல். இனிப்பு, உப்பு, புளிப்பு, காரம் என மற்ற சுவைகளை விரும்பும் பலர் பாகற்காயைக் கண்டதும் உணவிலிருந்து ஒதுக்குவதை பார்த்திருப்போம். ஆனால் பல மருத்துவகுணங்களை கொண்ட சிறந்த காய் இந்த பாகற்காயும், பாகல் இலைகளும்.

பாகல் ஒரு கொடிவகையை சேர்ந்தது. ஈரப்பதம் இருக்கும் இடங்கள், குளங்கள், குடைகள், ஆற்றங்கரையோரம் என எல்லா காலங்களிலும் குறிப்பாக மழை காலங்களில் சாதாரணமாக வேலிகளிலும், மரங்களிலும் தொற்றிக் கொண்டு கொடியாக படரக்கூடியது. பாகற்காய்கள் பச்சை நிறத்திலும், பழங்கள் மஞ்சள் நிறத்திலும் அதன் பூக்கள் மஞ்சள் நிறத்திலும் இருக்கக் கூடியது. பாகல் இலைகள் கீரை வகையை சேர்ந்ததுதான்.

ஐந்து பிரிவாக இருக்கும் கூட்டு இலைகளை கொண்டிருக்கக்கூடிய இந்த பாகல் இரண்டு வகைப்படும், ஒன்று நீளமாகவும் மற்றொன்று உருண்டையாகவும் இருக்கும். கொம்பு பாகல், மிதி பாகல் என்று இவற்றை அழைப்பதுண்டு. இரண்டுமே கசப்பு சுவை கொண்டது.

பாகல் கொடியின் இலை, காய், பழம், விதை என அனைத்துமே மருத்துவ பயன் கொண்டது. உடலில் இருக்கும் தீமை செய்யும் புழு பூச்சிகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஆரோக்கியத்தை அளிக்க கூடிய ஒரு அற்புதமான காய், இலை இது.

பாகல் இலைகள் பல நோய்களுக்கு மருந்தாக இருக்கக்கூடியது. அதிலும் பித்தம், கபம், நீரிழிவு, வயிற்றுப் பூச்சிகள், மலச்சிக்கல், காமாலை போன்ற பல நோய்களுக்கு ஒரு அற்புதமான மருந்தாக இருக்கக்கூடியது. வயிற்றுப்பூச்சி உடனடியாக வெளியேற்ற கூடிய ஆற்றல் நிறைந்ததாகவும் இந்த இலைகள் உள்ளது.

பொதுவாக குழந்தைகளுக்கு அதிலும் சிறுவர் சிறுமியர்களுக்கு அதிகமாக வரக்கூடிய ஒரு மிக முக்கியமான தொந்தரவு வயிற்றுப் பூச்சி, கீரிப்பூச்சி. இந்த கீரிப் பூச்சிகள் இரவு நேரங்களில் ஆசனவாய்ப் பகுதியில் அரிப்பு ஏற்படுவதும் அதனால் வேதனை ஏற்படுவதும் பொதுவான ஒன்று. இதற்கு மிகச் சிறந்த மருந்தாக இருக்க கூடியது இந்த பாகல்.

பாகல் இலைகளை சுத்தம் செய்து அம்மியில் அரைத்து சாறெடுத்து அதனை குழந்தைகளுக்கு கொடுத்தால் உடனடியாக வயிற்றுப்போக்கு ஏற்பட அதன் மூலமாக இந்த வயிற்றுப் பூச்சி, கீரிப் பூச்சிகள், வயிற்றுப் புழு பூச்சிகள் அழிந்து வெளியேறும். இவை வெளியேறியபின் சாதத்தில் நெய் சேர்த்து சாப்பிட உடனடியாக வயிற்றுப் போக்கு நின்றுவிடும். சிறுவர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் இதனை எடுக்கும்பொழுது வயிற்றில் இருக்கக்கூடிய புழு பூச்சிகளை விரைவாக எளிதாக வெளியேற்றக் கூடிய ஒரு அற்புதமான இலைகள்.

கசப்பு சுவை நரம்புகளுக்கு பலத்தைக் கொடுக்கக்கூடியது. இந்த இலைகளை உணவோடு சேர்த்துக்கொள்ள நரம்புகள் பலப்படும்.

விஷக் காய்ச்சல், கடுமையான காய்ச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த மருந்தாகும் இந்த இலைகள் உள்ளது.

பாகல் இலையை சாறு எடுத்து அதனுடன் வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை, மாலை இரண்டு வேளை உட்கொள்ள விஷ சுரம் நீங்கிவிடும்.

வைட்டமின் சத்துக்களால் வரக்கூடிய தொந்தரவுகள் கண் சார்ந்த நோய்கள் மாலை கண் நோயால் வரக்கூடிய பிரச்சனைகளுக்கு இந்த பாகல் இலைகளை மிளகுடன் சேர்த்து அரைத்து கண்களைச் சுற்றிப் பற்று போட விரைவில் குணமாகும்.

உள்ளங்கால்களில் அல்லது உடலில் ஏதேனும் எரிச்சல் ஏற்பட்டால் அந்த இடத்தில் இந்தபாகல் இலை சாறு தேய்க்க நல்ல குணம் தெரியும்.

தோல் நோய்களுக்கு மிகச்சிறந்த மருந்தாக இருக்கக்கூடியது. உடலில் ஏற்படும் நோய்க்கு இந்த பாகல் காய், இலையை சாப்பிட ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகும். பொதுவாக உடலுக்கு நல்லது. ஆனால் அளவுக்கு மிஞ்சும் பொழுது அது உடலில் பல உபாதைகளை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கும். அளவுக்கு அதிகமான கசப்பு சுவையும் தோல் நோய்களுக்கு காரணமாக அமையும். அதனால் அளவோடு அவசியம் பயன்படுத்த சிறந்த பலனை பெறலாம்.

பாகல் இலையை விளக்கெண்ணெயில் வதக்கி 40 நாட்கள் கட்டி வர வெளி மூலம் குணம் தெரியும்.

ஏதேனும் மருந்து உட்கொள்பவர்கள் பாகற்காயை அந்த காலங்களில் தவிர்ப்பது சிறந்தது. காரணம் பாகற்காயின் கசப்பு சுவை மருந்தின் வீரியத்தை குறைத்துவிடும். அதனால் எடுத்துக் கொள்ளும் காலங்களில் பார்த்து உப்பும் சேர்க்கவும்.

(6 votes)