அழகு தரும் பாரம்பரிய உணவுகள்

படைப்பின் ரகசியத்தில் அனைத்துமே அழகு தான். அதிலும் மனிதனெனும் படைப்பில் உச்சி முதல் உள்ளங் கால்கள் வரை அனைத்துமே பிரம்மாண்டம். எது அழகு? மனிதனின் ஒவ்வொரு செல்லும் இணைந்து ஒன்றாக தனித்தனி உறுப்புக்களை உருவாக்கி ஒட்டுமொத்த உடலுக்குள் பிரிந்தும் சேர்ந்தும் இருப்பதே அழகு தான்.

நாம் அழகு தான்

அதிலும் ஒவ்வொரு உறுப்பிற்கும் வரைபடம் போல் (வரைபடம் கூட பல நேரங்களில் சரியாக முற்று பெற்றிருக்காது) முழு வடிவம், தகுந்த நிறம், பக்குவமான இடைவெளி, பதமான மேன்மை, உணர்வு பூர்வமான நளினம், ஆடம்பரமில்லாத அசைவு, அசைவிலும் ஒரு முழுமை என்று செல்களும் உறுப்புகளும் நொடிக்கு நொடி அமைதியாக நடனமாடிக் கொண்டே இருக்கிறது. 

உச்சந்தலையில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ரோமங்களும், அதனை கடினமாகப் பிடித்துக்கொண்டிருக்கும் தோலும் அதற்கு அடுத்ததாக மென்மையுடன் பலபல பாவங்களை அள்ளிவீசும் முகமும்… சிறந்த ஓவியன் சித்தரித்தால் கூட சிறக்காது உண்மையான முகத்தின் அழகுடன் ஒப்பிட்டுப் பார்த்தால். 

இவைமட்டுமா, அந்த முகத்தில் கண்ணின் வளைவும், புருவத்தில் நெளிவும், இமையில் வசீகரமும், விழித்தோற்றமும், அருகிலேயே கிளிக்குப் போட்டியாக இரு துவாரங்களுடன் திருத்தமான மூக்கும், அதற்கும் கீழ் முகத்தோலுக்கும் உதடுக்கும் இருக்கும் விளிம்பு.. எத்தனை எத்தனை கலைஞன் வந்தாலும் செதுக்க முடியாத அழகும் முகத்திற்கு இருபக்கமும் மடல் மடலாக வளைந்தும் துருத்தியும் உலகின் ஓசையில் மயங்கும் காதுகளும் அழகை ஊர்வசி, ரம்பையிடம் இருந்து திருடிவிட்டதோ என்று கூட பல முறை யோசிக்க வைக்கிறது. நாம் ஒவ்வொருவரும் நினைத்தால் கூட நமது முகத்தை இவ்வளவு கச்சிதமாக வரைந்து விட முடியாது அவ்வளவு அழகையும் பூரணமாக கொண்டிருக்கிறது.  

முகம்மட்டுமா அழகு, கழுத்து, கைகள், விரல்கள், நிகங்கள், உடலின் வடிவம் – அளவு, கால்கள் என ஒவ்வொன்றும் அழகுதான். 

இத்தனை அழகையும் நமக்கு அளிப்பது சின்ன சின்ன செல்களே. ஒவ்வொரு செல்லின் இணக்கமும், ஒற்றுமையும் ஒட்டுமொத்த மனிதனின் சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது. 
அழகு பெண்களுக்கு மட்டுமே என்று பிரித்து பங்கு போட்டுக் கொள்ள முடியாத அளவிற்கு ஆணும் அழகின் பங்கு சொந்தம் கொண்டாடுகிறான். 

இப்பேர்ப்பட்ட அழகிற்கு சொந்தக்காரர்களான நாம் ஒவ்வொருவரும் நமது ஒவ்வொரு செல்லின், உறுப்பின் அழகையும் மேம்படுத்தினால் வசீகரமும் பளபளப்பும் உடலின் அகம் மற்றும் புறத்தில் நீங்காது குடிகொள்ளும். 

நவீன யுகத்தில் ஐநா சபையே வந்து மனிதர்களின் அத்யாவசிய தேவைகள் உணவு, உடை, இருப்பிடம் என்று கூறினாலும், இல்லை இல்லை இவற்றை எல்லாம் விட இன்று அடிப்படை என்பது செயற்கை அழகுதான் என்ற நிலை உருவாகி உள்ளது. 

எது அழகு?

அழகு என்பது உடல் தொடர்புடையது மட்டுமல்ல அது உள்ளம் தொடர்புடையது. எங்கே தன்னம்பிக்கை அதிகரிக்கிறதோ அங்கே அழகு மிளிரும். உள்ளத்தில் தன்னம்பிக்கை ஒளி உண்டானால் முகத்தில் பொலிவு கூடும். 

அழகை எது கெடுக்கும்

மனஅமைதியும் சீரான உணவும் உடலின் தேஜஸையும், உண்மையான உடல் அழகையும்  உயர்த்துகிறது. இதனையும் இன்று மறந்து விட்டோம், நமது தோளில் உள்ள செல்கள் உயிருடன் இருப்பதனையும் மறந்து விட்டோம். தோளில் உள்ள நுண்துளைகளையும் மறந்து விட்டோம். அனைத்தையும் இரசாயன பூச்சுக்கள், சோப்புகள் போட்டு போட்டு தோலை மட்டும் கெடுக்காது இவற்றின் தாக்கத்தினால் உடல் உறுப்புகளும் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகிறது.

செயற்கைப் பூச்சுகளை அதிகம் பயன்படுத்துவதால் முகத்திலும், கழுத்துகளிலும், கண்களிலும் அதிக கரும்புள்ளிகள், மருக்கள், கருவளையங்கள், வறண்ட சருமம், பருக்கள், கட்டிகள் வெளிப்படும் அதன் வடுக்கள் நீங்காது இடம்பெறுவதும் இன்று நம் கண்முன்னால் பார்க்க முடிகிறது, மேலும் உடலை ஒல்லியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்க்காக இன்றைய இளைய சமுதாயம் ஆரோக்கியமான உணவுகளை குறைத்து கொள்கின்றனர். ஆனால் சக தோழிகளுடன் வெளியில் செல்லும் பொழுது ஐஸ் கிரீம், சாக்கலேட், பீஸ்சா போன்ற உணவுகளை நவநாகரீகம் கருதி உண்கின்றனர். இவையே அழகைக் கெடுக்கும் சூஷ்மதாரி என்பதை மறந்து விட்டு.

முகம் காட்டும் கண்ணாடி  

‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பது நமது மன அழகையும் உடல் உறுப்பின் அழகையும் வெளிப்படுத்துகிறது. அகத்தில் உள்ள பதிப்புகளை முகம் என்னும் கண்ணாடி பளிச்சென எடுத்துக் காட்டுகிறது. 

கீழ் கன்னம்

கீழ் கன்னத்தில் புள்ளியோ, பருக்களோ தோன்றினால் அது நுரையீரல், சுவாச சம்மந்தமான தொந்தரவுகளை வெளிபடுத்துகிறது. வாய் ஓரங்களில், கண்விழிக்கு கீழ், புருவ மத்தியில் புள்ளிகள், கருந்திட்டுகள் தோன்றினால் அது கல்லீரல் சம்மந்தமான தொந்தரவு, இதனை நமது நகத்தின் வடிவதிலும் நிறத்திலுமே தெரிந்துகொள்ளலாம். 

மேல் நெத்தி

மேல் நெத்தி ஓரத்திலும், புருவ மத்தியின் ஓரத்திலும் புள்ளிகள், பருக்கள் தோன்றினால் பித்தப்பையின் பாதிப்பையும், கீழ் கன்னத்தின் ஓரங்களில் புள்ளிகள், கட்டிகள், கரும்புள்ளிகள்  வெளிப்படுமானால் பெருங்குடல் பாதிப்பை அது வெளிப்படுத்துகிறது.
இவ்வாறு வெளிப்படும் அறிகுறிகளை கவனிக்காது மேலும் மேலும் அந்த இடங்களில் இரசாயனங்கள் கொண்ட முகப்பூச்சுக்களைப் பயன்படுத்துவதால் தோளில் தங்கும் இந்த இரசாயனங்கள விரைவில் தோல் புற்று நோய்க்கு அஸ்திவாரத்தை போடுகிறது.

இளைய சமுதாயத்தினரில் உணவுப் பழக்கங்கள் உடலில் உள்ள செல்களின் வளர்ச்சிக்கு தேவையான புரதத்தினை குறைப்பதுடன் உள்ளுறுப்பு வளர்ச்சியை பாதித்து, முடி உதிர்ந்து, இளநரைக்கு காரணமாகிறது. 

இவற்றுடன் இரவு பகல் பாராத வேலை சுமை மன அழுத்தத்தை வரவழைத்து கருவளையத்தையும், சோர்வையும் ஏற்படுத்துகிறது. 

சீரோ சைஸ் இடுப்பிற்கு ஆசைப்படும் இன்றைய தலைமுறையினர் எதை உண்பது என்று அறியாது தவறான உணவுப் பழக்கத்தை மேற்கொண்டு உடல் முழுவதும் ஒரே சைஸுக்கு மாறும் நிலைமையை வரவழைக்கின்றன. உடலின் அளவு பெருகுவதும் கூந்தலின் அளவு குறைவதும் இன்றைய கவலைக்குரிய நிகழ்வுகளாகவே மாறி விட்டது. 

என்ன தான் வெளி தோற்றத்தை அழகு படுத்தினாலும் வயது ஆக ஆக சீரான உணவு பழக்கம் இல்லையானால் திடீரென்று வெளித்தோற்றம் முதிர்த்து வயதான தோற்றத்தையும், தோலின் சுருக்கத்தையும் கொடுத்து விடும். உணவின் மூலம் அழகை பாதுகாத்தோமானால் என்றும் இளமையுடனும் பளபளப்பாகவும் இருக்க முடியும்.

தீர்வு?

இவற்றிற்கெல்லாம் என்ன தான் தீர்வு, எதை உண்பது எதை விடுவது என்கிறீர்களா? அது மிகவும் சுலபம் ஆனால் பின்பற்றுவதற்கு தான் மனோதிடம் வேண்டும். 

வீட்டு உணவு

இன்றைய மனிதர்கள் (பெண்/ ஆண்) நிலவிற்கு போவதும், விமானம் ஓடுவதும், ஆள் கடலுக்கு போவதும் சுலபம் தான் ஆனால் வீட்டில் உணவு உண்பதும், அதுவும் தாய், மனைவி சமைத்த உணவை உண்பது தான் குதிரைக்கொம்பான விசையம். உலகத்தையே மற்றும் சக்தியாக வலம்வந்தாலும் வீட்டில் தனக்கும் தான் குடும்பத்திற்கும் தேவையான ஆரோக்கியத்தையும் உணவையும் அனுபவிப்பதே இன்று சவாலாக மாறிவிட்டது.

நெல்லிக்கனி

ஒவ்வையின் நெல்லிக்கனியைப் பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. என்றும் இளமையையும், கருங் கூந்தலையும் நெல்லிக்கனி கொடுக்கும் என்று தெரிந்த நமக்கு அந்த நெல்லிக்கனியை சாறெடுத்து உண்ண தான் இயலவில்லை. அதற்கு பதில் பதப்படுத்தப் பட்ட நெல்லிக்காய் சாறை வாங்கி வைத்துக்கொண்டு அருந்துகிறோம். இதை சாறு எவ்வாறு உயிருள்ள நெல்லிக்காய் சாறுக்கு ஈடாக முடியும். எந்த ஒரு கனியையும் காயையும் சாறெடுத்து விட்டால் அதனை 20 நிமிடத்திற்குள் அருந்த வேண்டும் என்றும் நம்மில் பலருக்கு தெரியும்.

தெரிந்தும் பலவற்றை நமக்காக செய்ய இயலாத நிலைதான் இன்று உள்ளது. இதனை மாற்ற மனமிருந்தால் எளிதாக எந்த சிரமமும் இன்றி உண்மையிலேயே உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமானதாக மற்ற முடியும்.நோய்களும் நம்மை அண்டவே அண்டாது.

நீர் சத்து

நீரின்றி அமையாது உலகு என்பது அனைவரும் அறிந்தது. உலகினைப் போலவே உடலும் 70% நீரினால் ஆனது. உடல் பொலிவுடனும் உயிரோட்டத்துடனும் இருக்க உடலுக்கு நீர் சத்தும் நீரும் அவசியமானது. அதிலும் துளசி தண்ணீர் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுத்து, நல்ல பொலிவான சருமத்தை அளிக்கிறது. வெட்டிவேர் தண்ணீரை அருந்தி வர முகத்தில் ஏற்படும் சுட்டுக் கட்டி, பருக்கள்  குறையும். உடலின் வெப்பத்தை குறைத்து தோல் வறட்சியைக் சீராக்குகிறது. 

கற்றாழை

வாரத்தில் 3 நாட்கள் கற்றாழை துண்டினை நன்கு கழுவி உண்டுவர என்றும் இளமையுடனும் பொலிவுடனும் இருக்கலாம். குமரி என்று சங்கத் தமிழில் அழைக்கப்படும் குமரி என்றும் பெண்களைக் குமரிப் பருவத்திலேயே வைக்க உதவுகிறது. இந்த கற்றாழையை நன்கு கழுவு பசு மோருடன் கலந்து சிறிது இஞ்சி, கொத்தமல்லி, பெருங்காயம் சேர்த்து அருந்திவர மேனி பொலிவடையும்.

பூசணி

பெண்களுக்கு மாதவிடாய் நேரங்களில் ஏற்படும் முகப்பருக்கள் கட்டிகளை பூசணி சாறுடன் சிறிது மிளகு சேர்த்து அருந்தலாம். 

ஆவாரம் பூ

காலையில் ஆவாரம் பூ தேநீர் கண்களை பொலிவாக்கும், உடலில் ஏற்படும் வியர்வை துர்நாற்றத்தை நீக்கி சருமத்தைப் பாதுகாக்கும். ஆவாரம் பூ தேநீர் தயாரிக்க சுக்கு மல்லி பொடி ஒரு ஸ்பூன் எடுத்துக்கொண்டு அதனுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு அதனுடன் சிறிது கருப்பட்டி, 10 ஆவாரம் பூ சேர்க்க வேண்டும். பல சரும நோய்களுக்கு காரணமான மலச்சிக்கலை இந்த ஆவாரம் பூ தேநீர் நீக்கும். இதனால் சருமம் பாதுகாக்கப்படும்.

பசுந் காய்

பசுந் காய் பொரியலை வரம் இரு முறை தயாரித்து உண்ண உடலுக்கு தேவைப்படும் நீர்ச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின் மற்றும் பல தாது உப்பு சத்துக்கள் கிடைக்கும்.பசுந் காய்ப் பொரியல் தயாரிக்க புடலங்காய் – ஒரு துண்டு, பூசணிக்காய் -ஒரு துண்டு, வெள்ளரிக்காய் – ஒரு துண்டு, சாவ் சாவ் – ஒரு துண்டு என எடுத்துக்கொண்டு அவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவேண்டும். அதனுடன் முளை கட்டிய பாசிப்பயறு, முளை கட்டிய கருப்பு உளுந்து தலா 2 ஸ்பூன், தேங்காய் துருவல் – 1 கப், மாங்கொழுந்து 5, சிறிது மிளகு, ஜீரகம், இந்து உப்பு சேர்த்து உண்டு வர உடலின் அழகைக்கெடுக்கும் உடல் பருமன் குறைவதுடன், பாதம், மூட்டு வீக்கங்களுக்கு, தைராய்டினால் ஏற்பட்டிருக்கும் வீக்கங்களுக்கு குறையும். 

இவ்வாறான காய் கலவையை தொடர்ந்து உண்டு வருவதால்   பெண்களுக்கு வளரும் தேவையில்லாத ரோமங்கள் அகலும், ஆண்களுக்கு சீராக முளைக்காத மீசையும் தாடியும் சீர்பெற்று கம்பீரமான ஆண்மைத் தோற்றத்தை அளிக்கும். உடலில் ஏற்படும் ஹார்மோன் பாதிப்புகள் சீர்பெறும். இந்த பிரத்தியேக உணவினை உட்கொள்ளும் பொழுது ஹார்மோன் ஊசிகள், மருந்துகள், மாத்திரைகள் கொண்டு வளர்த்த கோழி, மீன், பால் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

பெண்களுக்கு ஏற்படும் முடி உதிர்வும், ஆண்களுக்கு ஏற்படும் முன் தலை வழுக்கையும் அவர்களின் அழகையே கெடுக்கிறது. உணவு கட்டுப்பாடும், சத்தான உணவை சமசீராக உட்கொள்வதால் மட்டுமே இந்த பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாக்க முடியும். 

உளுந்தங் களி

கட்டளைகையும் உடல் வடிவத்தையும் என்றும் இளமையுடனும் தெம்புடனும் பாதுகாக்க உளுந்தங் களி செய்து 15 நாட்களுக்கு ஒருமுறை உண்ணவேண்டும். இதனை உண்டு வர உடல் சோர்வு, உடல் தளர்ச்சி குறைந்து உடல் வனப்புடன் இருக்கும்.

இதனை தயாரிக்க கருப்பு உளுந்தம் மாவுடன் சிறிது வெந்தயம் மாவினையும் அதனுடன் சிறிது பச்சரிசி, கருப்பட்டி, நல்லெண்ணையை எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில் மாவை நன்றாக தண்ணீராக கரைத்துக் கொள்ள வேண்டும். அதேப்போல் கருப்பட்டியையும் நன்றாக தட்டிக் கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் கரைத்த மாவை கொட்டி நன்றாக கிளறவும். நன்றாக வெந்து வரும் சமயம் கருப்பட்டியை போட்டு நன்கு பச்சை வாசனை போகும் வரை கட்டியில்லாமல் கிளறவும். நன்கு வெந்ததும் சிறிது செக்கில் ஆட்டிய நல்ல எண்ணெய்யை சேர்த்து உண்ணலாம். 

அழகிற்கு அழகு சேர்ப்பது குரல் வளம் சிறக்கும் பொழுது, குரல் வளத்திற்கு மட்டுமில்லாது உடல் அழகையும் பேணிக்காக்கும் அற்புதமான இலை வெற்றிலை. இதன் சாறினை சுக்கு, மல்லி, திப்பிலி, தேன் சேர்த்து அருந்த இரத்தம் சுத்தமாகும், உடல் கட்டிகள் குறையும் . தோல் மிளிரும். குழந்தை பெற்ற தாய் தான் அழகை பாதுகாக்க இந்த வெற்றிலை சாறு உதவும். 

கீரை

பொன்னாங்கன்னி கீரை, மணத்தக்காளி கீரை, வெந்தயக்கீரை, புதினா, கொத்தமல்லி, கருவேப்பில்லை, கரிசிலாங்கன்னி போன்ற கீரைகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எளிதாக சாறெடுத்து கீர் செய்து கொடுக்கலாம். அனைவரும் விரும்பி உண்பார்கள். கீர் தயாரிக்க ஏதேனும் ஒரு கீரையை எடுத்திக்கொண்டு அதனுடன் சிறிது இஞ்சி சேர்த்து சாறெடுக்கவும். பின் சம அளவு தேங்காய் பால் கலந்து சிறிது ஏலக்காய் தூள் வெள்ளம் சேர்த்து அருந்த விரும்பாதவர்களே இருக்க மாட்டார்கள். இவ்வாறான சாறினை தொடர்ந்து குடிப்பதால் இரத்த சோகை நீங்கும். வெளுத்து பழுப்பு நிறத்தில் இருக்கும் முக்கால் பொலிவுபெறும். கண்கள் பளிச்சிட்டு ஒளிவீசும். 

குப்பைமேனி

குப்பைமேனி இலைகளை மாதம் ஒரு முறை சாறெடுத்து ஒரு கல் உப்பு வைத்து அருந்திவர உடலில் உள்ள குப்பைகள், கழிவுகள், அழுக்குகள், கட்டிகள் போன்றவை நீங்கும். அம்மன் பச்சரிசி இலை, தூதுவளை இலையுடன் சேர்த்து உண்டால் உடல் பலம் பெறும். 

பசு நெய்

உணவுமுறையில் ஏற்படும் கட்டிகள் மருக்களை எளிதாக A2 பசு நெய் கொண்டும் பசு மோர் கொண்டும் தீர்க்கலாம். உணவுடன் பசு நெய்யையும் பசி முறையும் சேர்த்து உண்டு வர உடலில் மினுமினுக்கும். 

அம்மன் பச்சரிசி

அம்மன் பச்சரிசி பாலினை மருக்கள் உள்ள இடத்தில் தடவி வர அவை நீங்கும்.

செம்பருத்தி

செம்பருத்தி சாறினை அல்லது பூவினை காம்புகள் அகற்றி உண்டு வர உடலும் கண்ணும் சிகப்பலகைப் பெரும்.

கீழாநெல்லி இலை

பலருக்கு நிகங்களின் அமைப்பிலும், நகங்கள் வளர்வதிலும் ஏகப்பட்ட மாறுபாடுகள் இருக்கும். நகங்களில் கோடுகள் தோன்றுவது, நிறங்களின் நிறங்கள் மறுதலடைவது போன்றவை உடலில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை எடுத்துக்காட்டும் கண்ணாடிகள். இவற்றை சீராக்காது அதிக ரசாயனம் கலந்த நிகப்பூச்சு பூசுவதால் நகங்கள் மேலும் பாதிக்கப்பட்டு உடையார் தொடங்குகிறது. நல்ல உணவும், கீரைகளும் இதனை சீராக்கும். கீழாநெல்லி இலை சாறினை இரண்டு மாதத்திற்கு ஒருமுறை அருந்திவர நிகங்கள் அழகாகும்.

தானியப் பால்

பாதாம் பால், கேழ்வரகு பால், வேர்க்கடலைப் பால் என விடவிடமான பால் தயாரித்து சுவையாக கொடுக்க ஆண் பெண் குழந்தைகள் என அனைவரும் ஆரோக்கியமான உடலையும் வளமான எலும்புகளையும் பெறலாம். பெண்களுக்கு முப்பது வயதை கடந்த பிறகு எலும்புகளின் சத்துக்கள் குறைகிறது என்று பலர் (சுண்ணாம்பு) கால்சியம் மாத்திரைகளை உட்கொள்கின்றனர். செயற்கையான இதனைத் தவிர்த்து இயற்கையான கேழ்வரகு பாலினை தேவைக்கேற்ப வாரம் 2-4 முறை அருந்தலாம். இந்த இயற்கை பாலினை தயாரிக்க கேழ்வரகை முதல் நாளே ஊறவைத்து முளைகட்டி கொள்ளவேண்டும். சற்று முளைத்திருக்கும் கேழ்வரகைக்கு அரைத்து வடிகட்டி பால் எடுத்துக்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் அதனுடன் வெள்ளம், ஏலக்காய் தூள் சேர்த்துக்கொள்ளலாம். சற்று சூடாக குடிக்க விரும்புபவர்கள் சுட தண்ணீர் சேர்த்து அருந்தலாம். இவரே கடலைப் பாலும் தயாரிக்க வேண்டும்.

பழங்கள்

அதிக பழங்களை உட்கொள்வதால் என்றும் இளமையுடன் இருக்கலாம். குறிப்பாக சாத்துக்குடி, பப்பாளி, கொய்யா, நாட்டு வாழை (செவ்வாழை, கற்பூரம்), மாதுளை, அத்தி போன்ற பழங்கள் உடலையும் மேனியையும் பாதுகாக்கும். வாரம் இரண்டு முறை இளநீரை உட்கொள்வதால் என்றும் இளமையாக்கும்.

எண்ணெய் கொப்பளித்தல்

பெண்குழந்தைகளுக்கு உடல் அழகும் உடல் வலிமையையும் பெற நல்ல எண்ணெயை குடிக்கக் கொடுப்பது இயல்பு. இன்று பலர் அந்த பழக்கத்தை விட்டு விட்டனர். இன்று அதை விட சுலபமான எண்ணெய் கொப்பளிப்பு வைத்து விட்டது. சுத்தமான செக்கில் ஆட்டிய நல்ல எண்ணெய்யை 1-2 ஸ்பூன் எடுத்து காலையில் வாயில் ஊற்றி 15-20 நிமிடம் கொப்பளிக்க வேண்டும். கொப்பளிக்கும் எண்ணெய் அதன் எண்ணெய் தன்மையை இழந்து நுரை போல் வர அதனை துப்பிவிடவேண்டும். இந்தனை தொடர்ந்து செய்து வந்தால் உடலுக்கு எந்த பிரத்தியேக செயற்கை moisturiser ரும் தேவையில்லை. கல்லூரி பெண்களுக்கு ஏற்படும் எண்ணெய் வழிதலும் இதனால் கட்டுப்படும். முகம் வாசிகரப்படும்.

தினமும் புத்தம் புது தேங்காயின் இரண்டு பத்தைகளை உண்டு வர உடல் மினிரும்.  என்றும் குறையாத இளமையையும் பொலிவையும் அளிக்கும் அமிர்தம், பொன் பொருள் கொண்ட மன்னனே அளித்த பரிசு என்று பல பல பெருமைகளை பெற்றது நமது நெல்லிக்கனி. உடலின் அழகைக் கெடுக்கும் இரத்தத்தை சுத்தப்படுத்தும் சிறந்த உணவு. இரத்தம் சுத்தமானால் உடல் செழுமையாகும். முதுமையிலும் இளமையைக் கொடுக்கும் கற்பக விருக்ஷம். இளநரை மட்டுமில்லாது முதுமையை நிறையவே தள்ளிப்போகும். தேன், கருப்படிக் இணையான இனிப்பு சுவையும் சத்தும் உலகிலேயே கிடையாது. இவற்றை அன்றாடம் சேர்த்து உண்டு வந்தால் முடி உதிர்தல் குறையும், இளநரை கட்டுப்படும். உடலுக்கு அழகான சுறுசுறுப்பை அளிக்கும், சோம்பலை விரட்டும்.

கண்ணுக்கு மை

கண்ணுக்கு மை அழகு, கருப்பாக இருப்பதெல்லாம் மையாகிவிடாது. கரிசிலாங்கண்ணி கீரையைக்கொண்டு விளக்கெண்ணெயில் தயாரித்த மையினை கண்களுக்கு இட கண்கள் வாசிகரத்தைப் பெரும். உடலில் மிக முக்கியமானது கண்கள். இதனை பக்குவமாக பராமரிக்காமல் கண்ட கண்ட மையையும், மஸ்காராவையும் பயன்படுத்தினால் நாளடைவில் கண்கள் பொலிவை இழக்கும், பார்வை மங்கும். 

அன்றாடம் எளிதாக நாட்டு பாசிப்பயறு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயத்துடன் ஏதேனும் கீரைகளை சமைத்து உண்ண பொன்னான மேனியையும், நீண்ட அடர்ந்த கூந்தலையும் பெறமுடியும்.

நாள் ஒன்றுக்கு ஒரு எலுமிட்சையை அருந்துவது உடலை சமநிலைப்படுத்த உதவும். தேனுடன் கலந்தும் அருந்தலாம், அல்லது 1 லிட்டர் தண்ணீரில் ஒரு எலுமிச்சையை கலந்து குடி நீராகவும் அருந்தலாம். முகத்தில் இருக்கும் கருப்பு திட்டுக்கள் விரைவில் மறையும்.

உணவு கட்டுப்பாடு என்று தமிழர்களின் அரிசியைக் கட்டுப்படுத்தி கோதுமை உணவை அதிகம் உட்கொள்ளும் பலர்க்கு உடலில் பிற பாதிப்புகள் அதிகரிக்கிறது. உடல் பருமன், பொலிவு போன்றவற்றை பேணிக்காக்க நினைக்கும் அனைவரும் உட்கொள்ள வேண்டியது பாரம்பரிய அரிசிகள் அதுவும் போலீஸ் செய்யப்படாத அரிசிகளை. அரிசியலில் இருக்கும் எண்ணெய் சத்தும், வைட்டமின், புரத சத்தும் உடனை வனப்புடன் பேணிக்காக்கும்.

அரிசியின் மேல் உள்ள அடுக்கில் பல பல சத்துக்கள் குறிப்பாக வைட்டமின் பி சத்துக்கள் அபரிவிதமாக இருக்கிறது.  இதனாலேயே அன்றைய காலங்களில் அரிசி களைந்த நீரை கீரை அல்லது பருப்பு வேகவைக்க பயன்படுத்தினர். முடிந்தால் அந்த நீரினை வீணாக்காமல் அருந்தலாம். 

பெண்கள் தங்கள் கட்டழகை பேணிப் பாதுகாக்க சிறுதானியங்களை வித வித தயாரித்து உண்ணலாம். எளிதாக கேழ்வரகால் ஆன லட்டு, தினை, குதிரைவாலி போன்றவற்றில் கருப்பட்டி தேங்காய் பால் பாயசம் தயாரித்து அருந்தலாம். இதற்கு சிறுதானியத்தை நன்கு வேகவைத்து அதனை நன்கு மசித்து அதனுடன் தேங்காய் பால், கருப்பட்டி, ஏலக்காய் சேர்க்கவும். 

எள்ளுருண்டை

எள்ளு, கடலை போன்றவற்றில் வெல்லம் சேர்த்து தயாரித்த உருண்டைகளை தினமும் மாலை நேரத்தில் முலை கட்டிய வெந்தயம், தேங்காய் கொண்டு உண்ணலாம்.  

சூப்

காய்கறிகள், கீரைகள், பருப்பு சேர்த்த சூப்புகளை தினமும் குடிக்க நல்ல பலன் கிடைக்கும், வாரம் இரண்டு முறையேனும் அருந்த உடல் சோர்வு நீங்கும். 

பாரம்பரிய அரிசி

பாரம்பரிய அரிசிகளில் மேனி பளபளக்க கிச்சிலி சம்பா அரிசியும், ஆண்களின் ஆண்மைக்கு வலுவூட்டும் மாப்பிள்ளை சம்பா அரிசியும், குழந்தைப் பெற்ற பெண்களின் இளமைக்கும், அழகிற்கும் பூங்கார் அரிசியும் தனிச் சிறப்பைப் பெறுகிறது. இந்த அரிசிகளில் உணவை உட்கொள்ள உடல், கூந்தல், நகம், முகம் போன்றவை வளமான தோற்றத்துடனும் வனப்பான அமைப்புடனும் தோன்றும். 

கஞ்சி

ஏதேனும் ஒரு பாரம்பரிய அரிசியில் வாரம் ஒருமுறை தேங்காய்ப்பால், பூண்டு, வெந்தயம் சேர்த்து கஞ்சி தயாரித்து பருப்பு துவையல் சேர்த்து உண்ண கருமையான கூந்தலும், ஒளிவீசும் கண்களும், பொலிவான மேனியும் கிட்டும்.

ரசம்

மாதம் ஒருமுறை வெற்றிலை ரசம், தூதுவளை ரசம், கொள்ளு ரசம், எலுமிச்சை ரசம், திப்பிலி ரசம் செய்து உண்ண உடலில் தேங்கியிருக்கும் கழிவுகள் நீங்கும். கரும் புள்ளிகள் மறையும்.  

எந்த உணவையும் தயாரித்த சில மணி நேரத்திற்குள் உண்பது சிறந்தது. குளிர்சாதனைப் பெட்டியில் வைத்து பின் உண்ணும் உணவுகளில் சத்துக்கள் குறைகிறது. இதனை உண்ண மேனி பொலிவும், வசீகரமும் குறைகிறது. அரிசி, பருப்பு, காய், கீரை, பழங்கள் என அனைத்தும் கலந்த உணவை அன்றாடம் உண்ண வேண்டும். இவற்றை தேர்வு செய்யும் பொழுது நாட்டு ரகங்களாக இருக்க சிறந்த பலன் கிடைக்கும். நாட்டு தக்காளி, கத்திரி, வெண்டை, முருங்கை என இந்த காய்களை சமைக்க எந்த சிறப்பு மசாலாவும் தேவையில்லை, இயற்கை சுவையுடன் சிறந்த சத்தும், வாழும் இடத்திற்கு தேவையான தன்மையும் இவை கொண்டிருக்கும். நாட்டுக்கம்பு, நாட்டுக்கு கேழ்வரகின் சத்தும் அதனால் கிடைக்கும் உடல் வலிமையையும் அபாரமான தோற்றத்தைத் தரும். பல நாட்கள் பதப்படுத்தப்பட்டுப் பயணித்த வெளிநாட்டு காய்களையும், பழங்களையும் தவிர்ப்பது முகத்தில் தோன்றும் வறட்சியைக் குறைக்கும். 

ஆண்களும், பெண்களும் அதிக அக்கரைக்கு காட்டும் மற்றொரு இடம் உதடுகள். சிவந்த உதடுகளை விரும்பாதவர்கள் இல்லவே இல்லை. ஆனால் உடலில் தோன்றும் ஒரு வகை வேதியல் மாற்றத்தினால் பலருக்கு உதடுகள் கருக்கிறது. இதனைத் தவிர்க்க தினமும் புதினாச் சாறினை எலுமிச்சையுடன் அருந்தலாம்.

இளநீரின் சிரட்டையை உண்ண உதடுகள் சிவக்கும். முகம் பொலிவாகும். அழகும் ஆரோக்கியமும் வெவ்வேறில்லை. ஆரோக்கியமான உடல் அழகுடன் அமைதியையும் பொலிவையும் பெருக்கி மகிழ்ச்சியை அளிக்கிறது. 

(1 vote)