அறுபதாம் குறுவை அரிசி

அதிசயம்! அதிசயங்கள் என்ற வார்த்தையை கேட்டாலே பல பல எண்ணங்கள் நம்முள் வந்து செல்லும். அன்றாட நிகழ்வுகள், பள்ளி படிப்பு, கல்லுரிப் படிப்பு, நண்பர்களுடன் கூடியிருந்த நாட்கள், குடும்பத்தாருடன் கொண்டாட்டங்கள், அலுவலக பயணங்கள், சுற்றுலா, அறிவியல், பிரபஞ்சம், ஆன்மிகம், வாழ்க்கையின் ரகசியம் என அனைத்தும் பலருக்கு அதிசயங்கள்தான்.

மற்றவருக்கோ அதிசயங்கள் என்றால் உலகில் உள்ள ஏழு அதிசயங்கள் நினைவிற்கு வரும். சொற்பமானவருக்கோ என்ன புது அதிசயம். எல்லா ஒண்ணுதான் என விரக்தி எண்ணமும் மேலோங்கி இருக்கும்.

எது எப்படி இருந்தாலும் இந்த பிரபஞ்சம்மும் அதில் உள்ள அனைத்து இயற்கை கட்சிகளும் அதிசயங்கள் தான். அந்த வரிசையில் மனிதன் எந்த வகையிலும் வேறுபடவில்லை.

மனிதனே அதிசயம் தான். மனிதனில் செயல்பாடுகளும், இயக்கமும், உயிர் உடல் ஒத்திசைவும், உடலின் இரத்த ஓட்டம், மூச்சின் செயல்பாடு, உணவின் ஜீரணமும் சக்தி பரிமாற்றமும் மாபெரும் அதிசயங்கள் தான்.

இந்த வரிசையில் இவை அனைத்தையும் விட ஒரு படி மேல் மனிதனில் உடல் ஒரு அதிசயம் உள்ளது.. அது வேறொன்றும் இல்லை, உலகின் படைப்புகளில் தோன்றிய உயிர்கள் அனைத்திற்கும் உள்ள வேறுபாட்டில் ஒன்றுதான். மனிதன், விலங்கு, பறவை போன்றவற்றை எளிதாக அதன் அமைப்பால் வேறுபடுத்திக் கட்டக் கூடியஒன்று தான். அதுமட்டுமல்ல மனிதனின் ஒட்டுமொத்த சிறப்பான செயல்பாட்டிற்கும் ஆணிவேரான ஒன்று. பரிணாம வளர்ச்சியின் ஆதாரமாகவும் உள்ளது.

மனிதன் நேராக நிற்கவும், வலிமையோடு செயல்படவும், உருவத்தைப் பெறவும், உடலமைப்பை கொள்ளவும், இயக்கத்திற்கு அஸ்திவாரமாகவும் உள்ளதும் இந்த அதிசயம்தான். 

ஆம் அது வேறொன்றும் இல்லை மனித உடலில் இருக்கும் எலும்புகள் தான்.

எலும்புகள்.. இல்லாத உடலை ஒரு நொடி சிந்தித்துப் பாருங்கள். என்ன விந்தையாக இருக்கிறதா? நமது தோற்றம், உடல் அமைப்பு, முக அமைப்பு என அனைத்துமே முறையற்று வடிவமற்று ஜெல்லியைப் போல் உருண்டு திரிவதை சற்று சிந்தித்தாலே பயமாக இருக்கிறதல்லவா.

இந்த நிலைமை நமக்கு ஏற்படாமல் முதலில் நம்மை அழகாகவும், அமைப்பாகவும் காட்டுவது எலும்புகள் தான். நித்தம் நித்தம் எதை மறந்தாலும் இந்த எலும்புகளை மறக்காமல் இருக்க வேண்டும்.

எலும்புகள் இல்லாத உடலால் எதையும் திறனாக செய்ய இயலாது. ஏன் நமது கட்டை விரலில் உள்ள எலும்பில் அடி பட்டிருந்தால் எந்த பொருளையும் தூக்க, அசைக்க, சாப்பிடக் கூட முடியாது. அந்த அளவிற்கு எலும்புகள் நமக்கு உறுதுணையாக இருக்கிறது.

வாழும்பொழுது மட்டுமல்ல வாழ்ந்து மடிந்த பின்னும் பல பல ஆயிரம் ஆண்டுகள் நாம் வாழ்ந்ததற்கான சுவடும் புதைக்கப்பட்ட உடல்களின் எலும்புகள் நமக்கு கூறும். அந்த அளவிற்கு உறுதியானது மனிதனின் எலும்புகள். 

இந்த பிரபஞ்சமே சூரிய ஒளியால் இயங்குகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. மனிதனின் ஞானம், அறிவு இவை இரண்டிற்கும் உறுதுணையாக இருக்கிறது சூரியன். கண்ணுக்கு தெரியாத அவற்றிற்கு ஒளியாக இருக்கும் சூரியன், உடலில் உள்ள எலும்புகளுக்கும் ஆதாரமாகவும் உயிரூட்டக் கூடிய ஓளியாகவும் திகழ்கிறது. இதனை தமிழில் உள்ள ‘எல்’ என்ற வேர்ச்சொல் மூலம் அறியலாம்.

எலும்பில் உள்ள ‘எல்’ என்றால் ஞாயிறு, ஒளி என்று பொருள். அதாவது சூரியனின் ஒளியில் உள்ள நுண் ஊதாக் கதிர்கள் நமது தோலின் மூலம் ஊடுருவிச் சென்று உள்ளிருக்கும் எலும்புகளை உறுதி படுத்துகிறது. எலும்புகளுக்கு பலத்தையும் அதன் கெட்டித் தன்மையையும் கொடுப்பது சூரிய ஒளிதான்.

எலும்புகள் பார்க்க கெட்டியாகவும், உறுதியாகவும் இருக்கும் ஒரு உயிருள்ள திடப்பொருள். பிறப்பில் மென்மையாக இருக்கும் இந்த எலும்புகள் சூரிய ஒளியால் உறுதியாக்கப்பட்டு ஒரு குறிப்பிட்ட வயது வரை மனிதனில் உடலில் வளர்கிறது. அதுமட்டுமல்லாது உடலை பாதுகாக்கவும், உடல் உறுப்புகளான மூளை, இருதயம், நுரையீரல் என பல உறுப்புகளை பாதுகாத்தும், உடல் சீராக இயங்கவும் உறுதுணையாக இருப்பதும் நமது எலும்புகள் தான்.

எலும்புகள் தான் நமது சிகப்பு மற்றும் வெள்ளை இரத்த அணுக்களை உற்பத்தி செய்து உடலின் இயக்கத்தை காக்கிறது. 

புரதம் முதல் பல தாதுக்களை எலும்புகள் சேமித்து வைக்கிறது. அவை அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பது சூரிய ஒளியே. அதாவது புரியும் வண்ணம் அறிவியல் இதனை சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ள, பாதுகாக்கப்பட்டுள்ள எலுப்புகள் பலமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வைட்டமின் டி சத்து அவசியம் என்கிறது.

அதாவது சூரிய ஒளியில் இருந்து இயற்கையான வைட்டமின் சத்து கிடைத்தால் மட்டுமே எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும் என்கிறது. 

இரண்டாயிரம் ஆண்டுகள் ஆனாலும் எளிதில் அழியாத எலும்புகளை நாம் வாழும் சில வருட காலங்களின் இன்று எளிதாக தரம் குறைத்துவிடும் நிலைமை உள்ளது.

உடலின் இயக்கம், அசைவு, நகர்வு முதல் இரத்த உற்பத்தி, சீரான இயக்கம் என அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கும் எலும்புகளுக்கு இன்று எத்தனை எத்தனை சோதனைகள்.

உச்சி முதல் உள்ளங்கால் வரை அழகாக, சிறப்பாக இயற்கையால் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் எலும்புகளை இன்று எப்படியெல்லாம் குலைக்கிறோம்.

எத்தனை எத்தனை எலும்பு நோய்கள்.. எலும்பு குறைபாடுகள்.. எலும்பு முறிவுகள்.. ஆஸ்டியோ போரசிஸ், எலும்பு தேய்மானம், மூட்டு வலி, எலும்பு பலமின்மை, எலும்புருக்கி நோய், அதிரட்டிஸ், கழுத்தெலும்பு அழற்சி (செர்விகல் ஸ்பாண்டைலோஸிஸ்), படைப்பின் தாயான பெண்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்மானம்.. எத்தனை எத்தனை பெயர்கள்…..

இயற்கையால் சிறப்பாக வடிவமைக்கப் பட்ட அதிசயத்தில் மிக சிறப்பானது நமது எலும்புகள். அதிலும் அந்த எலும்புகளை என்றும் பலமாகவும், உறுதியாகவும் வைத்துக்கொள்ள இயற்கையே தனது சூரிய ஒளியை கொண்டு பாதுகாக்கிறது. இவை அனைத்தும் இருந்தும் எலும்புகளை சீர்குலைக்கும் வித்தை மனிதனுக்குத்தான் தெரியும் போலும். 

உண்மையில் அதிசயம் வேறெங்கும் இல்லை, அதிசயத்தை உடலில் வைத்துக் கொண்டு வெளியில் அதிசயத்தைத் தேடுகிறோம். உடல் அதிசயம் (எலும்புகள்) கெட்டதால் வெளியில் (பயணம் செய்ய) காண இயலாது தவிக்கிறோம்.

இப்பேர்ப்பட்ட எலும்புகளின் உறுதியை எளிதாக இன்றைய தலைமுறையினர் குலைத்து விடுவது வேதனைக் கூறிய ஒன்று. சீரான உணவுப் பழக்கம், சத்தான உணவு, வாழ்வியல் முறைகள், தேவையான ஓய்வு, அளவான வேலை, மன அமைதி, சூரிய ஒளி அற்ற அறைகள் (குளிரூட்டப்பட்ட அறைகள்), வீடுகள் போன்றவை இல்லாததன் காரணமாகவே இன்று இவற்றின் தாக்கம் பெருமளவில் உள்ளது.

பெரும்பாலானவர்களுக்கு எலும்பு பலவீனம் ஏற்படக் காரணம் சூரிய ஒளி இல்லாத இடத்தில் காலத்தை நகர்த்துவதும், சத்தான உணவு இல்லாது செயற்கையான முறையில் அவற்றை பெறுவதும் தான். 

சூரியஒளி இல்லாது என்று குறிப்பிட்டுள்ளதை ஏதோ பனிப்பொழிவு, மேகமூட்டமும் நிறைந்த இடத்தைக் கூறுகிறேன் என்று நினைக்க வேண்டாம். வெளியில் சூரியன் இருந்தாலும் இருபத்தி நான்கு மணி நேரமும் குளிரூட்டப்பட்ட இடத்தில் இருப்பது. அலுவலகம், வாகனம், சூரிய ஒளியிலிருந்து காக்கும் ரசாயன பூச்சு (sunscreen lotion) என எதிலும் நம் மீது துளிகூட சூரிய ஒளி படாது பாதுகாப்பது. 

அடுத்ததாக உணவுகள்… பாரம்பரிய அரிசி வகைகள், சிறுதானியங்கள் குறிப்பாக கேழ்வரகு, கீரைகள், காய்கறிகள், கொட்டைப் பருப்புகள் அளவான பசும் பால், வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல், உடற் பயிற்சி அல்லது யோகா, தோட்டம் அமைப்பது போன்றவற்றை தவறாமல் பின்பற்றிவந்தாலே போதும். எந்த எலும்பும் தேயாது, எந்த எலும்பும் பலவீனமாகாது.

வயது போனாலும் எலும்புகள் காக்கக் படும். இதை விட்டு விட்டு சுண்ணாம்பும் மற்ற தாது பொருட்களும் நிறைந்த செயற்கை உணவுகளை தேடிதேடி உண்பதும், அளவிற்கு அதிகமான இரசாயன மாத்திரைகளை உண்பதும் எலும்பை மட்டுமல்ல மற்ற பின் விளைவுகளையும் ஏற்படுத்தி மற்ற தொந்தரவுகளை வரவழைக்கும்.

அன்றாட உணவின் மூலமே தேவையான சுண்ணாம்பு சத்தினையும் மற்ற தாது பொருட்களையும் பெறமுடியும் என்றால் எதற்காக வீணாக மற்ற செயற்கை பொருட்கள். அதுவும் அன்றாடம் உண்ணும் அரிசியிலேயே இந்த சத்துக்களை பெறமுடியும் என்பது மற்றொரு அதிசயம் தான். அதிசயம் நிறைந்த எலும்புகளுக்கு ஏற்ற அரிசி ராகம் நம் பாரம்பரிய ராகங்களில் உள்ளது.

வெறும் அறுபதே நாட்களில் நவீன ரகங்களுடன் போட்டிபோடும் அளவிற்கு சிறந்த விளைச்சலைக் கொடுக்கக் கூடிய ரகம் அறுபதாம் குருவை.

குறுவையைச் சேர்ந்த ரகங்களில் அறுபது நாளில் விளையக் கூடியதால் இந்த பாரம்பரிய ரகத்திற்கு அறுபதாம் குறுவை என்ற பெயர் வந்தது.  கடும் வெயிலிலும் சீராக விளையக் கூடிய ரகம்.

குறைந்த நாளில் நல்ல வெயிலில் விளையும் இந்த ரகம் அதன் விளைச்சல் காலத்தில் சூரிய ஒளியிலிருந்து தேவையான சத்துக்களை கிரகித்து தரமான மற்றும் சத்துக்கள் நிறைந்த நெல்மணிகளை உருவாக்குகிறது. இதனால் எலும்புகளுக்கு தேவையான பலத்தினைக் அளிக்கமுடிகிறது. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரின் உடல் பலத்திற்கும், எலும்பு உறுதிக்கும் ஆதாரமாக விளங்க கூடிய அரிசி இந்த அறுபதாம் குறுவை அரிசி.

இந்த சிகப்பு நிற மோட்டா அறுபதாம் குறுவை அரிசியில் சுண்ணாம்பு சத்து, புரதம், கொழுப்பு, மக்னீசியம் போன்ற பலவிதமான பால் சத்துக்கள் இயற்கையான முறையில் உடலுக்கு எளிதில் ஏற்ற வகையில் உள்ளது. எலும்பு சம்மந்தமான தொந்தரவுகள் அனைத்திற்கும் ஏற்றது. 

மாதவிடாய் நின்ற பெண்கள் வாரம் ஒருமுறை இந்த அறுபதாம் குறுவை அரிசியினை உண்டு வர காலத்தால் வரும் தொந்தரவுகள் தீரும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஆண்களும் பெண்களும் வாரம் ஒருமுறை இந்த அரிசியினை உண்டு வர பற்கள், மூட்டுகள், எலும்புகள் பலம்பெறும்.

அறுபதாம் குருவை நெல்லிற்கு அந்த காலத்தில் ‘சாஸ்டிகம்‘ என்ற பெயரும் உண்டும். இதை லேசாக பொடித்து பாலுடன் சேர்த்து சாதம் போல் வடிக்க வேண்டும். வடித்த இந்த அரிசியை சிறு சிறு மூட்டைகளாக துணியில் கட்டி அதனைக் கொண்டு உடலில் ஒத்தடம் கொடுக்கும் பொழுது சத்துக்களை தோல் உறுஞ்சிக் கொள்ளும். இவ்வாறு செய்வதன் மூலம் வாதம், நரம்பு பிரச்சனை, தசைகள் பாதிப்பு போன்றவற்றில் இருந்து எளிதில் மீளலாம். அதுமட்டுமில்லாது இளம்பிள்ளை வாதம், கால் சூம்பிப் போவது போன்றவற்றிற்கும் சிறந்தது. 

பலகாரங்கள், இனிப்புகளுக்கு ஏற்றது. சாதமாகவும் வடித்து உட்கொள்ள சிறந்தது. இடியப்பம், புட்டு, கொழுக்கட்டை போன்றவற்றிற்கு சிறப்பாகனை அரிசி. மாலை வேலை சிற்றுண்டியாக ஏதாவதும் பலகாரம் தயாரித்து கொடுக்க குழந்தைகள் விரும்பி உண்பார்கள். குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கும், பற்கள், மூளை வளர்ச்சிக்கும் மிக சிறந்த அரிசி.

இவ்வாறு அறுபதாம் குருவை அரிசியில் எளிதாக உணவு தயாரித்து வாரம் ஒருமுறை அல்லது அன்றாடம் உண்ண உடல் வலுப்பெறும். எலும்புகள் உறுதியாகும். சாதமாக தயாரிக்க குறைந்தது ஒரு மணி நேரமாவதும் இந்த அரிசியினை ஊறவைத்து பின் குறைந்த தீயில் முப்பது நிமிடம் வேகவைக்க வேண்டும். இதனுடன் குழம்பு, ரசம், கூட்டு, பொரியல் கொண்டு உண்ணலாம்.

அதிசயத்தை வெளியில் தேடாமல் நமக்குள் இருக்கும் அதிசயத்தை பாதுகாப்போம், பயணிப்போம் இந்த பிரம்மாண்டமான உலகத்தில்.

(2 votes)