Ghee, Clarified Ghee, Nei, clarified butter, a2 ghee, desi ghee, nattu mattu nei, pasu nei

நெய் – நாட்டு பசு நெய்

நமது முன்னோரும், பெற்றோரும் சாதாரணமாக உண்டுவந்த பல உணவுகளைக் கண்டாலே இன்றைய தலைமுறையினர் அலறுகின்றனர். அதிலும் ஆயுர்வேதம் முதல் சித்தமருத்துவம் வரை பல மருத்துவத்திற்கு மாமருந்தாக இருக்கும் நமது நெய்யைக் கண்டால் ஓடுபவர்கள் பலர். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் கூட ஆசையாக இனிப்பினை உண்பார்கள் ஆனால் உடல் பருமன், இரத்தக் கொதிப்பு, இருதய நோய் உள்ளவர்கள் நெய்யின் மேல் விருப்பம் இருந்தாலும் நெய்யையும், நெய் சேர்த்த உணவுகளையும் தவிர்ப்பது தான் நிதர்சனம்.

அப்படி நெய் என்ன உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவா? அவ்வாறு இருந்தால் நெய்யினை ஏன் நமது இந்திய  மருத்துவத்தில் பல ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்துகின்றனர்.. இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் நெய் உடலுக்கு நன்மை செய்யும் ஒரு நல்ல உணவு. அதுவும் உடலில் தோன்றும் பல நோய்களுக்கும் இதுவே மருந்து. மலச்சிக்கலே பல நோய்களுக்கு ஆரம்பம், அந்த மலச்சிக்கலை போக்கும் மா மருந்தும் நமது நெய் தான். இவ்வாறு அனைவரும் அறியும் வண்ணம் பல நன்மைகள் நெய்யில் இருக்க பின் ஏன் நெய்யினைக் கண்டால் பலர் அலறுகின்றனர். 

தற்சார்பு என்பதற்கு சிறந்த அடையாளமாக வாழ்ந்த நமது இந்தியா கடந்த சில தசாப்தங்களாக மற்றவரையும், அண்டை நாடுகளையும் நாடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆடை ஆபரணங்களைத் தவிர வேறு எதற்கும் அடுத்தவரை நாடாது இருந்த நமது சமூகம் இன்று அனைத்திற்கும் மற்றவரை எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டதே இதற்கு காரணம்.

தொழில்வளர்ச்சி என்ற போர்வையில் நாம் அழித்தது நமது தற்சார்பை மட்டுமல்ல, நமது ஆரோக்கியத்தையும் சேர்த்து தான். 

குழந்தைகளுக்கு மட்டுமல்ல இன்றைய இளைஞர்களுக்கும், பெரியவர்களுக்கும் கூட நெய் என்றால் என்ன என்று இன்று தெரியாமல் போய்விட்டது.

பசு என்றால் என்ன?

நெய் என்ன.. முதலில் பசு என்றால் என்ன என்றே பலருக்கு தெரியாது. பசுவே நெய்யினைப் பெற மூலதனமானது என்றும் பலருக்கு தெரியது.

தொழில் வளர்ச்சியால் எவ்வாறு ஒரு குயவன் பானைசெய்வதை மறந்தானோ, தச்சன் மரவேலையை மறந்தானோ, நெசவாளன் நெசவுத்தொழிலை மறந்தானோ அவ்வாறு வணிகமயமாக்குதலால் நாம் நமது அடிப்படை உணவையும் அதற்கு தேவையான மூலக்கூறினையும் மறந்து டப்பாக்களையும், டப்பாக்களில் இருக்கும் சத்துக்களின் பட்டியலையும் கணக்குப்போட்டு விலைக்கு வாங்க தொடங்கிவிட்டோம். இதனால் நாமும் நமது சமுதாயமும் நல்ல ஆடம்பரவாழ்வையும், ஆடம்பர மருத்துவ மனைகளையும் அனுபவிக்கின்றோமே தவிர உண்மையான ஆரோக்கியத்தையும், வாழ்க்கையையும் அனுபவிக்கவில்லை.

அதாவது நெய் என்று இன்று கடைகளில் கிடைக்கும் டப்பாக்களை அலசி ஆராய்ந்து பாருங்கள் அது உண்மையிலேயே நெய் தானே? அதில் சேர்த்துள்ள பொருட்களின் பட்டியலில் தவிர கொழுப்பு, விலங்கு கொழுப்பு என்றெல்லாம் போட்டிருக்கும். அதில் என்னென்ன கொழுப்புகள் அடங்கி உள்ளது என்று சற்று உள்நோக்கினால் எலும்பு துகள்கள், இரசாயனங்கள், குரங்கு கொழுப்பு, பன்றி கொழுப்பெல்லாம் உள்ளது என பல சோதனைகளில் தெரியவந்துள்ளது.

அட நமது வீட்டில் இருக்கும் நெய் டப்பாவில் தவிர கொழுப்பு, விலங்கு கொழுப்பு, இரசாயனங்கள், பதப்படுத்திகள்  என்றெல்லாம் இல்லை.. இது சுத்தமான பாலின் கொழுப்பு.. அதாவது Milk fat என்று தான் உள்ளது என்று பெருமூச்சு விடுகிறீர்களா?


நெய்க்கும், பாலின் கொழுப்பிற்கும் வேறுபாடுகள் உண்டு தானே? பாலில் இருந்து பெறப்படும் கொழுப்பு ஒருபோதும் நெய்யானது.

கொழுப்பு என்று டப்பாவில் வெளியிலேயே போட்டிருக்க ஏன் அதை உண்டால் கொழுப்பு உடலில் சேராது? நெய்க்கும் இந்த கொழுப்புகளும் சம்மந்தமே இல்லை. இவ்வாறான (Milk fat) நெய்களை உண்டால் நிச்சயம் பல பல நோய்கள் மட்டுமல்ல இருதய நோயும் இலவசமாக வரும்.

நெய்யென்றால் என்ன?

முதலில் நெய்யென்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம், பின் எந்த நெய் அதாவது எதிலிருந்து கிடைக்கும் நெய் உண்மையில் மருந்தாக வேலைசெய்யும் நெய் என்றும் தெரிந்து கொண்டு பயன்பெறுவோம்.

நெய்க்கு மிக முக்கிய மூலக்கூறு பால். அந்த பாலினை நன்கு காய்ச்சி, பின் அதனை ஆறவைத்து, அதில் ஒருதுளி தயிரினை கலந்து ஆறுமணிநேரம் உறைய வைக்கவேண்டும். பின் ஆறுமணிநேரம் களித்து அதனை எடுத்து பார்த்தால் முழுவதுமாக அந்த பால் தயிராக மாறியிருக்கும். அந்த தயிரில் சிறிது நீர்விட்டு நன்கு கடைந்தால் வெண்ணெய் தனியாக பிரிந்து வரும். இந்த வெண்ணெய்யை சட்டியில் காய்ச்சும் பொழுது நெய் பிரிந்து வரும்.

இதுவே உண்மையில் நெய் அதாவது நேரடியாக பாலிலிருந்து கிடைக்கும் கொழுப்பினை நெய்யாக்குவது உண்மையான நெய்யல்ல.

பாலினை தயிராக்கி, தயிரினை வெண்ணெயாக்கி, அதனை நெய்யாக்குவது தான் சுத்தமான நெய்..

இதற்கு தான் அனைத்து நோய் தீர்க்கும் மருத்துவகுணங்களும், அதனை விட்டுவிட்டு நேரடியாக பாலிலிருந்து கிடைக்கும் கொழுப்பு நெய்யினை உண்டால் உடலில் தேவையற்ற கொழுப்புதான் சேரும். உடலால் அதனை சீரணிக்க முடியாமல் கொழுப்பாகவே உடலில் சேர்த்துவைக்கும். பின் காலப்போக்கில் அதுவே நோய்யாகவும் புற்றாகவும் மாறும்.

நன்கு யோசித்து பாருங்கள் அல்லது நம் வீட்டில் இருக்கும் பெரியவர்களைக் கேட்டுப்பாருங்கள் இவ்வாறுதான் நெய்யினை தயாரிப்பதா என்று. 

இது நெய்யே இல்லை?

பின் எதற்காக இன்று பாலிலிருந்து நெய்யினை நேரடியாக எடுக்கின்றனர்? வணிகமயமும், தொழில்மயமும் வணீகரீதியாக தங்களுக்கு உகந்த எளிய முறையில் அதேசமயம் வாடிக்கையாளர்கள் பார்ப்பதற்கு ஏற்ற  வகையிலும் ஒரு பொருளை உருவாக்கவே இந்த மாற்று வேலைகள்.

பாலில் இருந்து கொழுப்பை நீக்கிவிட்டு அந்த பாலினை ஸ்கிம் மில்க், கொழுப்பு நீக்கிய பால், பண்ணீர் மற்ற பால் பொருட்களை உருவாக்கலாம். இதனால் கொள்ளை லாபத்தையும் பெறமுடியும். அதனை பயன்படுத்துபவர்களுக்கு வரும் தொந்தரவுகளை பற்றிய கவலை அவர்களுக்கு இல்லை. 

அதுவே ஆதிகாலத்திலிருந்து தயாரிக்கும் முறையில் நெய்யினை தயாரித்தால் மீதமிருக்கும் மோரினை எவ்வாறு பயன்படுத்துவது. அது பெரும் நஷ்டத்தைத் தரும்.

அதாவது சராசரியாக நாற்பது லிட்டர் பாலினை தயிராக்கி பின் அதிலிருந்து வெண்ணெய்யை பெற்று நெய்யாக்கினால் கிடைப்பது ஒருகிலோ நெய்தான். இது வணிக ரீதியில் நடைமுறைப்படுத்த எளிமையானது அல்ல அதனால் அனைத்து நிறுவனங்களும் பாலிலிருந்து கொழுப்பினை நீக்கி அதனுடன் பல இரசாயனங்கள், விலங்கு கொழுப்புகளை சேர்க்கின்றனர். இது நிச்சயம் உடலுக்கு நச்சாக தான் இருக்கும். 

A2 பால்

சரி, எந்த பாலினைக் கொண்டு நெய்யினை பெறுவது உடலுக்கு மருந்தாக அமையும் என்று பார்க்கலாம். ஆடு, எருமை போன்ற விலங்குகளிடம் இருந்து கூட நெய் தயாரிக்கலாம். அவையெல்லாம் நோய் தீர்க்கும் மருந்தாக இருக்காது. நமது பாரம்பரியமான நாட்டு இன மாடுகளின் நெய்யே நோய் தீர்க்கும் மருந்தாக இருக்கும். இதைத்தான் சத்துக்கள் நிறைந்த A2 பால் என்கின்றனர் அயல்நாட்டினர். 

பசு என்னும் நாட்டு இனமாடுகளும் இன்று பல இடங்களில் காணாமல் போக சீமை மாடுகளையும், கலப்பு மாடுகளையும் பசு என்று அழைக்கும் மூடத்தனமான நிலை இன்று வந்து விட்டது. இவற்றின் நெய்யும் உடலுக்கு நல்லதல்ல. 

நாட்டு மாடுகள் என்பது ஒரு நாளைக்கு குறைந்த அளவு பாலினைக்கொடுக்கும். திமில்கள், மாடலான கழுத்து, கொம்புகள் உள்ள நமது நாட்டிற்கு சொந்தமான ரகங்கள். இவற்றின் நெய்க்கே அனைத்து மருத்துவகுணங்களும். இந்த நெய் உடலின் செல்களுக்குள் எளிதாக ஊடுருவி தேவையான அனைத்து காரணிகளையும் செய்துவிட்டு தேவையற்ற கழிவுகளையும், உடல் நச்சுகளை வெளியேற்றுகிறது.

இந்த நெய்யினை நாள் தோறும் உட்கொள்ள ஜீரண சக்தி சீராகும், உடலின் வளர்ச்சிதை மாற்றம் சீராகும், நரம்புகள், எலும்புகள் பலப்படும், மூளைவளர்ச்சிக்கு நல்லது, இரத்த ஓட்டத்தை சீராகும், உடல் பருமன் சீராகும், இருதய நோய், மூட்டுவலி சீராகும்.
அனைவரும் எதிர்பார்க்கும் ஒமேகா சத்துக்கள் இந்த நெய்யில் உள்ளது அதுமட்டுமல்லாது பல வைட்டமின்களும் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பும் இதில் அடங்கியுள்ளது.

கடைகளில் இந்த நெய் கிடைக்காது என்றால் எவ்வாறு இதனைப் பெறுவது. மிக சுலபம்.. நாமே வீட்டில் பசும் பால் வாங்கி அதனை காய்ச்சி, தயிராக்கி, கடைந்து வெண்ணெய்யைபெற்று நெய்யாக்கலாம். நேரடியாக வெண்ணெயைப் பெறும்போது நமக்கு அந்த வெண்ணெய் A2 ரக நாட்டு மாடுகளிலிருந்து பெற்றதா என்று தெரியாது. அதனால் பாலினை காய்ச்சி, தயிராக்கி, வெண்ணெய் எடுத்து உருக்கி உண்பதே சிறந்தது.

பசும் பாலிற்கு என்ன செய்வது

பசும் பாலிற்கு என்ன செய்வது என்கிறீர்களா?.. இன்று கிராமங்களில் கேட்பாரற்று திரியும் நமது நாட்டு பசு மாடுகளில் பாலினை சுலபமாக அவற்றை பாதுகாத்து பெறலாம். நகரங்களிலும் பல இடங்களில் A2 பசும் பால் என்று விற்கத் தொடங்கியுள்ளனர். நம்பகமான இடத்தில அதனைப் பெற்று தயரிக்கலாம். நம்மையும் நமது சந்ததியினரையும் காக்கும் இந்த பசு நெய்யினை நாமே நமது கண்முன் தயாரித்து உபயோகிப்பதுதான் சிறந்தது.

(1 vote)